Skip to main content

விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Yediyurappa

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நரசிம்மமூர்த்தி என்பவர், சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு, இந்த ஜனவரி 27, 2021 -இல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ளது கர்நாடக சிறைத்துறை நிர்வாகம். மேலும், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022 -இல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் பலரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதத்தை சசிகலா எழுதியிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஜனவரி 27 என தேதி குறிக்கப்பட்டிருப்பது குறித்து, சிறைத்துறை விதிகளில் மிகுந்த அனுபவமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நாம் பேசியபோது, "சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்காண்டு காலம் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்ட தவறினால், மேலும் ஒரு வருட காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே தீர்ப்பு.

 

இதனடிப்படையில், சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளின் போதே வழங்கப் பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, அவரது விடுதலைக்கான தேதியும் தீர்மானிக்கப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்கப்படும் போது, அந்தக் கோப்புகளில் இருக்கும் தேதியைத்தான் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கும். அப்படிப்பட்ட தகவல்தான் தற்போது வந்திருக்கிறது.

 

அதேசமயம், சிறை விதிகளின்படி தண்டனைக் காலங்களில் சசிகலாவுக்கு சலுகை நாட்கள் கிடைத்திருக்குமானால், அதனைத் தேவைப்படுகிற போதுதான் பரிசீலிப்பார்கள். அப்படிப் பரிசீலிக்கும்போது சலுகைகளாக எத்தனை நாட்கள் கிடைக்கிறதோ, அந்த நாட்களை மொத்த தண்டனைக் காலத்திலிருந்து கழித்த பிறகே விடுதலை தேதியை முடிவு செய்வர். அந்த வகையில், முன் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவரது விடுதலையில் அரசியல் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியாது?'' என்கிறார் அழுத்தமாக.

 

Ad

 

சசிகலாவின் விடுதலை தேதி குறித்த பரபரப்பு ஆளும்கட்சி அமைச்சர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்ததும் இதுகுறித்து, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, இந்தத் தேதியை வைத்துக்கொண்டு சசிகலா முன் விடுதலை ஆக மாட்டார் என்கிற முடிவுக்கு வராதீர்கள். கர்நாடக அரசு நினைத்தால் முன் விடுதலைக்கு அனுமதிக்கவும் செய்யலாம்'' என்று எடப்பாடியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வின் மேலிட தொடர்புகள் கூறுகின்றன.

 

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, "பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையின் சூப்பிரன்டெண்ட் வழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் எடியூரப்பாவுக்கும், கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. அதில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம், பரப்பன அக்ர ஹாரா சிறைக்குள் அடைக்கப்பட்ட தேதி, பரோலில் வெளியே சென்ற நாட்கள் ஆகிய அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு, கர்நாடக அரசின் சிறைத் துறை விதிகளின்படி, சிறையில் நேர்மையாக இருந்து வருகிறேன் என்பதையும், விதிகளுக்கு உட்பட்டு கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதையும், அந்த வகையில் ஒரு கைதிக்கு கர்நாடக அரசு வழங்கும் சலுகை நாட்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும் என்பதையும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.

 

அதனடிப்படையில், எனக்கான சலுகை நாட்களை கணக்கிட்டு அதனை எனது தண்டனை காலத்திலிருந்து கழித்து எனது விடுதலை தேதியை முடிவு செய்யுமாறு பணிந்து சமர்பிக்கிறேன் எனவும் சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார்' என்கிறார்கள் மத்திய உளவுத் துறையினர்.

 

Nakkheeran

 

இந்த நிலையில், சசிகலா ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து சில நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களும், சசிகலா இரண்டு முறை தமிழகத்திற்கு பரோலில் வந்த வகையில் 17 நாட்களும் என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சசிகலாவுக்கு அதிகபட்சம் 130 நாட்கள் சலுகை நாட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நன்னடத்தை விதிகளுக்காக வழங்கப்படும் இந்தச் சலுகை நாட்களை ஒரு கைதி தனது உரிமையாகக் கோர முடியாது. அரசாங்கத்தின் கண் அசைவினிலேயே சலுகை நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சசிகலாவின் விடுதலையில் அரசியல் விளையாட்டுகள் இருப்பதால் கர்நாடக அரசு மனது வைத்தால் மட்டுமே அவரது முன் விடுதலை தீர்மானிக்கப்படும்’ என்கிறார்கள் சிறைத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.

 

 


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.