Skip to main content

“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை!” -தலைமைகளின் தகிடுதத்தங்கள்!  

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Mike



வேறு கட்சிகளிலிருந்து தங்கள் கட்சிக்குத் தாவிய அரசியல் பிரபலங்கள், பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தன் மாவட்டத்துக்கு வரும்போது, “அந்தக் கட்சியில் இருக்கிறப்ப அவ்வளவு செல்வாக்கா இருந்தீங்க.. அப்புறம் எதுக்கு எங்க கட்சிக்கு வந்தீங்க?” என்று கேட்பது அந்த அமைச்சரின் வழக்கம்.  ‘தோழமையாகத்தானே கேட்கிறார்? மனச்சுமையை இறக்கி வைப்போம்!’ என்று அந்த அமைச்சரிடம் அவர்களும் மனம்விட்டுப் பேசியிருக்கின்றனர். இருவர் அமரராகிவிட்ட நிலையில், அரசியல் பிரபலங்கள் மூவரின் புலம்பலை அமைச்சரே தன் வாயால் கூற,  அதை நீக்குபோக்காக இங்கே தந்திருக்கிறோம். 
 

பேச்சாளர் கையில் திணிக்கப்பட்ட லட்சங்கள்!
 

மேடைகளில் பொறி பறக்கப் பேசும் அந்தப் பேச்சாளர், தன் மகனுக்கு அரசு வேலை கேட்டு கட்சித் தலைமையைச் சந்தித்தார். தலைமையோ ‘பேசுறதுதானே உன்னோட வேலை? அதை மட்டும் பாருய்யா.’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது. இத்தனை காலம் உழைத்தற்கு இதுவா பலன்? என்று  வெறுத்துப்போன அந்தப் பேச்சாளர், இன்னொரு கட்சித் தலைமையைச் சந்தித்தார். அப்போது ‘உங்களைப் பல மேடைகளில் பலவிதத்தில் திட்டியிருக்கிறேன். என் மீது  நீங்கள் போட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கிறது.’ என்று கூற, ‘எதற்காக எங்கள் கட்சியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றீர்கள்?’ என்று கேட்டிருக்கிறது தலைமை.  ‘தன்மானம்தான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது’ என்று பேச்சாளர் சொல்ல, ‘எங்கள் கட்சியிலும் உங்கள் தன்மானத்துக்கு சோதனை வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லையே?’ என்று தலைமை சொல்ல, ‘அவமானப்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் அந்தப் பேச்சாளர். 
 

Money



ஆட்டோவில் வந்த அவர் கையில் சில லட்சங்கள் திணிக்கப்பட, அவருக்குக் கையும் காலும் ஓடவில்லை. இந்தப் பணத்தைப் பத்திரமாக வீடு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலை வாட்டியது. உடனே, தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இன்னொரு விடுதிக்கு மாறினார். வாங்கிய பணத்துக்குக் கூடுதல் விசுவாசம் காட்டி, பழைய கட்சிக்கு எதிராகக் கடுமையாக வார்த்தைகளைவிட, ஒருநாள் இரவு, பொதுக்கூட்டத்துக்குக் கிளம்பிய பேச்சாளரை அள்ளிக்கொண்டு போன அவருடைய பழைய கட்சியினர், உயிர்பயத்தை ஏற்படுத்தி,  தலைமையின் வாரிசு ஒருவர் வீட்டுக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது, அந்த வாரிசு காலில் விழுந்திருக்கிறார் பேச்சாளர். வாரிசோ, முதியவர் என்றும் பாராமல், மாறி மாறி காலால் மிதித்திருக்கிறது. கட்சியினர் முன்பாக,  அவமானத்தால் கூனிக்குறுகிப் போன பேச்சாளர், மிரட்டலால் மீண்டும் பழைய கட்சியிலேயே சேர்ந்தார். சாகும் வரையிலும் அந்த அவமானம் அவரைத் துரத்தியபடியே இருந்தது. 
 

தலைமையை அவமானப்படுத்த அணி மாறியவர்!
 

எம்.எல்.ஏ. மட்டுமல்ல, அதைக் காட்டிலும் உயர் பொறுப்பிலெல்லாம் அவரை அமரவைத்து அழகு பார்த்தது அந்தக் கட்சி. ஆனாலும், கட்சியை விட்டு வெளியேறும் நிலை அவருக்கு  ஏற்பட்டது. அவர் அந்த அமைச்சரிடம் “கட்சியால் நான் எவ்வளவோ பயன்பெற்றேன்.  கட்சிக்காக ஒத்தை ஆளாக நின்று போராடியும் இருக்கிறேன். காலம் மாறியது.  என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள். நான் வேறு கட்சிக்குப் போக மாட்டேன் என்ற தைரியத்தில், டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் தந்தார்கள்.  என்னை அவமானப்படுத்திய கட்சித் தலைமையை அவமானப்படுத்தவே, கட்சி மாறினேன்.”  என்றாராம். 
 

“இது என் கட்சி; உன் கட்சி இல்ல!” – தலைமையின் கோபம்!


நாவன்மை படைத்த அந்தப் பேச்சாளர் அந்தக் கட்சித் தலைமைக்கு அடுத்த இடத்தில் கோலோச்சியவர். அந்த அமைச்சரிடம் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “அங்கேயிருந்தா உருப்பட மாட்டோம்னு தெரிஞ்சும், ஊர் ஊருக்கு கட்சி மேடையில் முழங்கினேன். என் பேச்சைக் கேட்பதற்காவே கூட்டம் கூடியது. அந்த உரிமையில்தான், தலைமையிடம் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்தேன். அதற்குத் தலைமை, ‘இது என் கட்சி. உன் கட்சி இல்ல. போறதுன்னா போ.’ என்று பொசுக்கென்று சொல்லிவிட்டது. எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்த எனக்கு, உங்க கட்சித்தலைமைதான் ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது, எனக்கு ஒருகுறையும் இல்லை.” என்றாராம்.  
 

ஏதோ ஒருவிதத்தில் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனாலும்,  கட்சி மாறியவர்களின் அதிருப்தியில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. 

 

 

 

 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.