Skip to main content

பொதுமக்கள் நம்புவார்களா? தங்கத் தமிழ்ச்செல்வன் பதில்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கத் தமிழ்ச்செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.

ஆண்டிப்பட்டி 67வது வார்டு மற்றும் பெரியகுளம் 197வது வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றி...

எங்களைப் பொறுத்தவரையில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை. ஏப்ரல் 18 வாக்குப்பதிவின்போது பிரச்சனை என்று சொன்னவுடன் எல்லா வேட்பாளர்களும் அந்த வாக்குச்சாவடிகளுக்கு போய் பார்த்தோம். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு நடக்கட்டும் என்றார். வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. திடீரென்று 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகிறது. ஏனென்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். அடுத்த நாள் பார்த்தால் இரண்டு பூத்தில் மறுதேர்தல் என்கிறார்கள். 


 

Thanga Tamil Selvan

இந்த மறு தேர்தலில் மிகப்பெரிய பண நடமாட்டம் வர வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி ஏற்கனவே ஓட்டுக்கு ரூபாய் இரண்டாயிரம், மூவாயிரம் கொடுத்துள்ளார்கள். இப்போது இரண்டு பூத்திலும் மூவாயிரம் அல்லது இரண்டாயிரத்து ஐநூறு ஓட்டுகள்தான் பதிய வாய்ப்புள்ளது. இதுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கூட கொடுப்பார்கள். 
 

ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுப்பார்களா? இதனை பொதுமக்கள் நம்புவார்களா?
 

ரூபாய் மூவாயிரம் கொடுக்கப்போகிறார்கள் என்றோம், அவ்வளவு ரூபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டீர்கள். கொடுத்தார்கள். அதனை போலீசும் பார்த்தது. தேர்தல் ஆணையமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. 
 

44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 

தேர்தல் ஆணையம் எதைக் கேட்டாலும் விநோதமாக பதில் சொல்லுகிறது. 20 நாள் கழித்துதான் இதனை நாங்கள் பார்த்தோம். அதனால்தான் 13 பூத்துகளில் மறு வாக்குப்பதிவு, 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எது எப்படியோ மே 23ஆம் தேதி ரிசல்ட் பதில் சொல்லும். 


 

இந்த விஷயத்தில் அரசு தலையீடு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

அரசு தலையீடு இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு திட்டத்தை போட்டால் கூட, அதனை செயல்படுத்துவது மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் போலீசார்தான். அதனால் நிச்சயமாக அரசுக்கு சாதகமாகத்தான் அதிகாரிகள் செயல்படுவார்கள். 

வாக்கு எண்ணிக்கை நம்பகத் தன்மையுடன் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம்பகத்தன்மையுடன்தான் நடக்கணும். குறைந்தது ஒரு கவுண்டிங் நடக்கும்போது ஆயிரம் பேரை அதிமுகவினர் உள்ளே நுழைய உள்ளதாக தெரிகிறது. நாங்கள் அவ்வளவு பேரை கூப்பிட்டு போக முடியாது. போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. கலாட்டா வந்தால் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிமுக தோற்கும் நிலைக்கு வருவார்கள். அப்போது கலாட்டா நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக எல்லா பூத்திலும் போதிய போலீசார்களை குவிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். யாராவது பிரச்சனை செய்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கை எடுத்தால்தான் வாக்கு எண்ணிக்கை ஒழுங்காக நடக்கும். 

 

தினகரன் தனது அமமுகவை திமுகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருக்கிறார். ஸ்டாலின், தினகரன் ஏ மற்றும் பி டீமாக செயல்படுகிறார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?

தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் இப்படி பேசக்கூடாது. அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று அப்பட்டமாக பேசியவர்கள். இன்றைக்கு அதிமுக ஆட்சி, பாஜகவின் அடிமை ஆட்சியாக போய்விட்டது. பெயர்தான் அதிமுகவே தவிர, பாஜகவின் அங்கம்தான் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. அதனால்தான் இந்த துரோக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அமமுகவை தொடங்கி தனியாக நிற்கிறோம். திமுகவுடன் கூட்டணி என்பது தவறான கருத்து. 23ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. 

 

நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பெரிய அளவில் ஈடுபடவில்லையே? 
 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தாலே கூட்டம் வரவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தால் எப்படி கூட்டம் வரும். அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி கடும் தோல்வியை சந்திக்கும். 
 

திமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது, அமமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது. ஒருவேளை திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு வந்தால் அமமுகவின் நிலைப்பாடு என்ன?
 

திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் எப்படி ஓட்டு போடுகிறது என்று எங்களுக்கு தெரியாது. திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம். அமமுக இந்த ஊழல் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்குத்தான் ஓட்டுப்போடுவோம். இதுதான் எங்களது நிலைப்பாடு. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சத்யபிரதா சாகு விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Sathyaprada Sahu explained about the polling percentage error

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (21.04.2024) அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Sathyaprada Sahu explained about the polling percentage error

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் (APP) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம். இதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து கடந்த அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் (Case by Case) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய வாக்காளர் அட்டைதான் தேவையென்று இல்லை” என விளக்கமளித்துள்ளார்.