Skip to main content

"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் அடுத்து துணை முதல்வர் பதவி கேட்பார்கள்.." - ரவீந்தரன் துரைசாமி பேச்சு!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் சுதீஷ் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அதிருப்தியால் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா, தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறுமா அல்லது வெளியேற்றப்படுமா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரிடியான பதில்கள் வருமாறு, 
 

adf



விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தற்போது அறிவித்துள்ளது. மூன்று இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் தற்போது அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதிமுக-வை சேர்ந்த தம்பிதுரை, கே.பி முனுசாமி மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் தற்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக நீண்ட நாட்களாக மாநிலங்களைவை சீட் கேட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் ஜி.கே வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எது காரணமாக இருக்கின்றது?

தேமுதிகவுக்கு வாக்கு இல்லை என்று அதிமுக நினைக்கின்றது. அது உண்மையாகவும் இருக்கின்றது. கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகளை அவர்கள் பெற்றார்கள். திருச்சி, வட சென்னையில் மிக குறைந்த வாக்குகளை அவர்கள் பெற்றதே அதற்கு மிக சிறந்த உதாரணம். ஆனால் ஜி.கே வாசனை பொருத்த வரையில் அரசியலை மிக நேர்மையாக செய்யக்கூடியவர். இரண்டு பக்கமும் கூட்டணி குறித்து பேசுபவர் அல்ல. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் இரண்டு சீட்டை கேட்டார். அவர்கள் ஒன்று கொடுத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்டு தேர்தலி்ல் போட்டியிட்டார். அந்த வகையில் அவருடைய செயல்பாடு பாராட்டு வகையில் இருந்தது. தேமுதிகவுக்கு வாக்கு இல்லை என்று அதிமுக தரப்பு உறுதியாக நினைக்கின்றது. தற்போது அவர்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்தால் அடுத்து துணை முதல்வர் பதவி கேட்பார்கள்.

பாமகவுக்கு இணையாக தங்களை மதிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாக்கினை பல்வேறு தேர்தல்களில் நிரூபித்துள்ளார்கள். அவர்களால் வட மாவட்டங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெரிய வெற்றி கிடைத்து. அந்த மாதிரியான எந்த நன்மையும் அதிமுகவுக்கு தேமுதிக கட்சியால் கிடைக்கவில்லை. இதனால் அவர்களை விலக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் பேசியதும் அதனை உறுதி செய்வதாகவே இருக்கின்றது. எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று அவர் பேசியிருப்பதே அதிகம் பேசும் கூட்டணி கட்சிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

அடுத்து தேமுதிக-வின் நிலைபாடு என்னவாக இருக்கும். கூட்டணியில் மாறுதல் ஏற்பட ஏதேனும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

அடுத்து தேமுதிகவை அதிமுக வேறு ஏதாவது வழியில் சரிகட்டினால் உண்டு, இல்லை என்றால் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை, சரியான தலைமையில்லை என்று விஜய பிரபாகரும், பிரேமலதா விஜயகாந்தும் மேடைகளில் பேசுவதை பார்க்க முடியும்.

ஆனால் தேமுதிமுகவை பாஜக முக்கியத்துவமான கட்சியாகத்தானே பார்க்கின்றது. தமிழகம் வரும் போது பிரதமர் மோடி விஜயகாந்தை சந்தித்து பேசுகின்றாரே? அப்படி இருக்கும்போது கூட்டணியில் இருந்து விலகுவதற்கு போதுமான வாய்ப்புக்கள் இருக்கின்றதா? 

பாஜகவுக்கு அந்த கட்சியை தூக்கி பிடிப்பதன் மூலம் தமிழகத்தில் என்ன லாபம் இருந்துவிட போகின்றது. அவர்கள் வாசனுக்கு கூட பரிந்துரை செய்துள்ளார்கள் என்று நம்பத்தகுந்த தகவல்கள் இதுவரை வரவில்லை. மூன்றாவது சீட்டில் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே இவருக்கு சீட் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. பாஜகவே தங்கள் கட்சியின் மாநில தலைவரை தேர்தெடுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தங்கள் கட்சியின் மாநில தலைவரை தேர்ந்தெடுக்க இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களால் முடியவில்லை. அதனால் மற்றவர்களை தூக்கி பிடிப்பதனால் எந்தவித லாபத்தையும் அவர்கள் பெறப்போவதில்லை. தற்போதைய நிலையில் பாஜக சட்டமன்ற தேர்தலில் எந்த இடத்தையும் பெறாது என்று மோடிக்கு நன்றாக தெரியும். ஆந்திரா தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டில் ஏற்படும் என்பது மட்டும் உறுதி.
 

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.