Skip to main content

இலங்கையில் இரண்டு பிரதமர்! ராஜதந்திரத்தில் தோற்ற இந்தியா! எச்சரித்துள்ள அமெரிக்கா!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
mahinda rajapaksa



இந்தியாவின் ரா அமைப்பு என்னை கொலை செய்யப்பார்க்கிறது என அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை அதிபர் மைதிரிசிறிசேனா பேசியது உலக அரங்கில் பலத்த பரபரப்பாக்கியது. 
 

இந்நிலையில் அதிரடியாக தன் நாட்டு பிரதமரை மாற்றி உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ளார் அதே இலங்கை அதிபர்.
 

இலங்கை பிரதமராக இருப்பர் ( இருந்தவர் ) ரணில் விக்ரமசிங்கே. அக்டோபர் 26ந் தேதி இரவு, திடீரென தனது அலுவலகத்துக்கு முன்னால் அதிபர் மகிந்தாராஜபக்சேவை வரவைத்த தற்போதைய அதிபர் சிறிசேனா, மகிந்தாவை பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு எந்தவித அறிவிப்பும் தராமல் பதவிபிரமாணம் செய்துவைத்துவிட்டு அதன்பின் சாவகாசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

அதில், நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்றது, நாட்டின் பொருளாதாரம் சீரழிவு ஏற்படுத்தியதால், நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளது உட்பட பல விவகாரங்களால் ரணில்விக்ரம்சிங்கை அதிபர் என்கிற முறையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் சாசனம் சட்டம் 42(4) பிரிவின் அதிகாரத்தின்படி பிரதமர் பதவியில் இருந்து நீக்குகிறேன் என அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பு மற்றும் பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, நானே பிரதமர் என அறிவித்துள்ளார் ரணில்.
 

2004 முதல் 2005 வரை பிரதமராக இருந்த மகிந்தா பின்னர் நடந்த தேர்தல் மூலமாக 2005ல் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். 2009 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின் அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சேவின் புகழ் பெருமளவில் உயர்ந்தது. இலங்கையின் நாயகனாகவே சித்தரிக்கப்பட்டார். உடனே தேர்தலை நடத்தி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2015ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை அரசியல் சாசன சட்டப்படி ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்கமுடியாது என்கிற சட்டத்தை திருத்தி மூன்றாவது முறையாக அதிபராக முயன்று தேர்தல் நின்றார். இந்த முடிவுக்கு அதிபராக இருந்த மகிந்தாவின் ஸ்ரீலங்கா சுதந்தரா கட்சியிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. கட்சியின் துணை தலைவராகவும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மைதிரிபாலாசிறிசேனாவும் எதிர்ப்புக்காட்டினார். இது சர்வாதிகாரமானது என கொதித்தன எதிர்கட்சிகள்.

 

ranil_vikramsanghe


போர் முடிவுறும் வரை இந்தியாவின் சொல்பேச்சை ஓரளவு கேட்டு வந்த ராஜபக்சே, போர் முடிவுக்கு பின் சீனாவின் செல்லப்பிள்ளையாகிப்போனார். இதனால் அதிருப்தியில் இருந்த இந்தியா, அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தியது. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தது. சிறிசேனாவை அதிபருக்கான தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது. சிறிசேனா வெற்றி பெற்றார். ராஜபக்சே குடும்பம் சுதந்திரா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன் தலைவராக சிறிசேனாவே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். நாடாளமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சியும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இதில் ரணிலின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறிசேனா கட்சி ஆதரவு தெரிவிக்க அதன்அடிப்படையில் ரணில் பிரதமராக தேர்வானார்.
 

இந்நிலையில் ராஜபக்சே புதியதாக இலங்கை மக்கள் முன்னணி என்கிற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மகிந்தா கட்சி பெரும் வெற்றி பெற்றது. உன்னால் தான் என் பெயர் கெட்டது என சிறிசேனாவும், உன்னால் தான் என் கட்சி தோற்றது என ரணிலும் சண்டையிட்டுக்கொண்டனர். இந்த சண்டையின் ஒரு பகுதியாக தான் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்னை கொலை செய்ய முயல்கிறது என்கிற குற்றச்சாட்டை அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் சிறிசேனா வைத்தார். இது பெரும் சர்ச்சையானது. ( இதுப்பற்றி கட்டுரை நமது தளத்தில் உள்ளது ) இந்த சண்டை முற்றிய நிலையில் தான் பிரதமர் மாற்றம் தடாலடியாக நடைபெற்றுள்ளது.
 

ரணில் மூலமாக சிறிசேனாவை அதிபராக்கியது இந்தியா, பின்னர் ரணிலை பிரதமராகவும் உருவாக்கியது. இதற்கு பிரிதிபலனாக இந்தியாவுக்கு சாதகமாக ரணில் இருந்தார். ஆரம்பத்தில் ரணில் பேச்சை கேட்டாலும் பின்னர் சீனாவின் நெருங்கிய கூட்டாளியானார் சிறிசேனா. சீனாவின் இராஜந்திர நடவடிக்கையால் சிறிசேனா அதிரடியாக அரசியலில் காய்களை நகர்த்தினார். இந்தியாவின் நண்பனாக அமெரிக்காவின் நெருங்கிய தோழனாக இருந்த ரணிலால் சிறிசேனாவை சமாளிக்க முடியவில்லை.
 

ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அதற்கு பதில் ராஜபக்சேவை பிரதமராக்க வேண்டும் என அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி தந்தது சீனா. இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளாது என சிறிசேனா கூறியதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு பாஜக எம்.பி சு.சாமி அழைப்பின் பேரில் இந்தியா வந்த ராஜபக்சே, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களிடமும், பிரதமர் மோடியிடம், இந்தியாவுக்கு நான் நெருங்கிய நண்பராக இருப்பேன் என சமாதானக்கொடி பறக்கவிட்டார். ரணிலை முழுவதும் நம்பமுடியாது என்பதால் ராஜபக்சே வுடன் கைகுலுக்கியது. சந்திப்பு குறித்து சிறிசேனாவுடன் விவாதித்தபின்னர், பிரதமர் மாற்றத்துக்கு இந்தியா ஒப்புக்கொள்ளாது என்பதால், சீனாவின் திட்டப்படி ரா என்கிற அஸ்திரத்தை ஏவினார் சிறிசேனா. இந்தியா அசந்த நேரமாக பார்த்து ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்கிவிட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம் தோல்வியை சந்தித்துள்ளது என்கிறது அரசியல் நோக்கர்கள் வட்டாரம். இந்த மாற்றத்தை பாஜக எம்.பி சு.சாமி வரவேற்றுள்ளார். இந்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் கூறவில்லை.
 

 
பிரதமர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வெளியுறத்துறை பிரிவு, இலங்கை அரசியல் சாசன சட்டப்படி நடந்துக்கொள்ள வேண்டும். ஐ.நா வில் இலங்கை அரசாங்கம் தந்துள்ள வாக்குறுதிப்படி நீதிவிசாரணை நடத்தவேண்டும், பதில் கூற வேண்டும் என்றுள்ளது. அதனை காணும்போது அமெரிக்கா இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.