Skip to main content

பாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும்!! - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

gjh

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் பாமக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், பாஜக அதிக சீட் கோரி அழுத்தம் கொடுத்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணி, அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் பதில்கள் வருமாறு, 


தமிழ்நாட்டில் அடுத்த பரபரப்பு என்றால் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்தான். அனைத்து கட்சியினரும் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

பாமக தனியாக நின்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நடைபெறும் அந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. எனவே தங்களின் பலத்தை தனியாக காட்ட வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி தர்மம் என்ற ஒன்று உள்ளது. அதனை அவர்கள் மதிக்க வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைப்பாடு என்ற நிலைப்பாட்டை மக்கள் ஏர்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகப்படியான இடங்களைக் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், இது பாஜகவுக்கு அதிமுக பெருந்தன்மையாக வாரிக்கொடுத்ததால் நடந்தது. பாஜக தனியாக நின்றால் ஒரு இடம் கூட ஜெயிக்காது என்பது அவர்களுக்கும் தெரியும், ஊர் உலகத்துக்கும் தெரியும். இந்த நான்கு பேரும் எப்படி ஜெயித்தார்கள். இதில் இருவர் திமுக, அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அதிமுகவின் கடுமையான உழைப்பினால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது பாமக கூட்டணியைவிட்டு போனதால் தங்களுக்கு அதிக சீட், 25 சதவீத இடம் என்பதெல்லாம் சாத்தியமா? பாஜக கேட்டால் அதிமுக கொடுக்க முடியுமா? அவர்களுக்குள்ளாகவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. ரெய்டு, கட்சி பிரச்சனை என போய்க்கொண்டிருக்கிறது. எனவே இடியாப்ப சிக்கலில் இருக்கும் அதிமுக, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பார்ப்பார்கள். இந்த நேரத்தில் பாஜக அதிக சீட் கேட்பது அபத்தமாக இருக்கிறது. அவர்களும் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளாரே? 

 

அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் அரசியலுக்குப் புதியவர். கள நிலவரம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தடா புடா என்று பேசி கட்சியை வளர்க்க முடியாது. உண்மையின் தன்மை தெரிய வேண்டும். இதைவிட பெரிய கூத்து, அடுத்த தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறுகிறார். இது சாத்தியமா? கேவலமாக இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படி ஏடாகூடமாக பேசினால் அவர் மீது பொதுமக்களிடம் நல்ல பெயர் எப்போதும் வராமல் போய்விடும்.

 

 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.