Skip to main content

"பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; அதனால் கன்னியாகுமரியை குறி வைக்கிறார்" - ராம சுப்பிரமணியன் ஓபன் டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

பக

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அன்றைய முதல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடைபெற்ற ஒன்று, அவருக்கு நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசியலில் தான் கை, கால், தலை என அனைத்தையும் நுழைப்பேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாகவும் மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:

 

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எடப்பாடி தரப்பு கூறியது போல் தனக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று கூறியதையெல்லாம் அப்போதே யாரும் நம்பவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. முதல்வரிடம் கேட்டே காவல்துறையினர் இதைச் செய்திருப்பார்கள். இதையே தற்போது விசாரணை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைப் பற்றித் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம். அப்படி அது உண்மையாக இருந்தால் இவர் எதற்காக முதல்வராக இருக்க வேண்டும். அந்தப் பதவியை அசிங்கப்படுத்துவதைப் போல் இவரின் பேச்சு அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். 

 

இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மையாக இருந்தாலும் விசாரணை ஆணையம் தீவிர விசாரணைக்குப் பிறகு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையம் தெரிவித்துள்ள நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். அதுவே பலியான மக்களுக்கு அரசு செய்கின்ற நேர்மையான உதவியாக இருக்கும்" என்றார்.

 

தமிழிசை தொடர்பாக பேசிய அவர், "தமிழிசை எங்கே இருக்க வேண்டும்,அவர் எங்கே இருந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் முழு நேரமும் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ஏனென்றால் தெலுங்கானா அரசு இவரை எதற்கும் அழைப்பதில்லை. ஆளுநர் உரையாற்றக் கூட இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உப்புக்குச் சப்பாணியாக அங்கு அவர் ஆளுநராக இருந்து வருகிறார். மேலும் இன்னும் சில காலத்தில் ஆளுநர் பதவி முடிவடையப் போகிறது. எனவே அவருக்கு தீவிர அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு அச்சாரமாகத் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை எல்லாம் அழைத்து புத்தகம் போடுகிறேன் என்ற வகையில் அவர்களோடு நட்புறவை ஏற்படுத்துகிறார். 

 

இதை விடப் பெரிய பதவி, ஏன் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். இல்லை பெரிய அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். அதற்கான முயற்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட விரும்புகிறார். குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார்.அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி தோல்வி அடைவதால் இவர் அங்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார். இல்லை என்றால் தென் சென்னையில் போட்டியிடும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. இதற்காகவே அவர் காய் நகர்த்தி வருகிறார். இதில் அரசியல் இல்லாமல் இல்லை" என்றார். 

 

 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.