Skip to main content

ஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது' என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பூடகமாகவே பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

"சினிமாக்காரர்களை கூத்தாடிகள்' என விமர்சிப்பவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, ரஜினியின் "பாபா' பட விவகாரத்தின்போது ரஜினிக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் இது. அந்த விமர்சனத்தின் மீது அழுத்தமான நம்பிக்கையை ஆழமாக வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது ரஜினிக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை.

 

rajini



"பத்திரிகையாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாகவே பதில் சொல்லிப் பழக்கப்பட்ட ராமதாசிடம் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்களுக்கு ரஜினியுடனான அன்புமணியின் நெருக்கமும் கூட்டணி முயற்சிகளும்தான் காரணம்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

ராமதாஸ், ரஜினி, எடப்பாடியைச் சுற்றி அரசியலில் என்ன நடக்கிறது என மூன்று தரப்பிலும் விசாரித்தோம். பா.ம.க. வின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, ""நேரடி அரசியலுக்கு ரஜினி வராமல் போனால் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக களத்தில் நிற்கும். அப்படிப்பட்ட சூழல் உருவானால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உண்டு என சில கணக்குகளை ராமதாசிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

 

pmk



தி.மு.க.வை தனது எதிரியாக நினைக்கும் ராமதாஸ், என்ன விலை கொடுத்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருகிறார். அதற்குப் பல கணக்குகளும் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இந்தமுறை பா.ம.க. பங்குபெறாமல் போனால் அப்படி ஒரு வாய்ப்பு எப்போது வாய்க்கும் என தெரியாது. அதனாலேயே, அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது பா.ம.க. தலைமை. அதில் ஒன்றுதான் ரஜினி.

அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி என ராமதாசுக்கும் அன்புமணிக்கும் சொல்லப்பட்டுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பதை விரும்பும் அன்புமணி, பா.ம.க. -ரஜினி -பா.ஜ.க. என ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியை சந்தித்து விவாதித்திருக்கிறார் அன்புமணி. அந்த வகையில்தான், ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை ராமதாஸ் தவிர்ப்பதுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னலும் ரகசியமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய பா.ம.க.வின் வடதமிழக மூத்த நிர்வாகிகள்.

 

pmk



ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் விசாரித்தபோது,’ சென்னை -கேளம்பாக்கத்திலுள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அந்த சந்திப்பில், "நேரடி அரசியலுக்கு நீங்கள் வருவதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றம் நடக்கும். நாங்களும் நீங்களும் கூட்டணியாக இணைந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தர முடியும்' என அன்புமணி சொல்ல, அதனை ஆமோதித்த ரஜினி, "அய்யா ராமதாசின் போராட்டங்களை நிறைய படித்திருக்கிறேன். சமூக நீதிக்கான போராட்டங்களில் அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரை விட்டால் இப்போது தமிழகத்தில் மூத்த சமூகப் போராளி யாருமில்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது பற்றி நிறைய விவாதிக்கலாம்' என சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பையடுத்து ரஜினி-அன்புமணி யின் நட்பு இறுகியிருக்கிறது. பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பதில் ரஜினியும் விருப்ப மாகத்தான் இருக்கிறார். காரணம், பா.ஜ.க.வின் செயல் திட்டங்களுக்கேற்ப தி.மு.க.வை எதிரியாக கருதும் ரஜினி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு வதுதான். இதற்கான பல புள்ளிவிபரங்கள் ரஜினியிடம் தரப்பட்டிருக்கின்றன'' என்கிறார்கள் அழுத்தமாக.


இந்த நிலையில், ரஜினி-பா.ம.க. உறவு குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறை உறுதி செய்தது. இது குறித்து தனது தரப்பிலிருந்து ராமதாசிடம் பேச, "அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நமது கூட்டணி தொடரும். பா.ம.க.வை சந்தேகப் பட வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பா.ம.க. மீதான தனது சந்தேகத்தை எடப்பாடி விலக்கிக்கொள்ள வில்லை'' என்கிறார்கள் மூத்த அமைச்சர் களுக்கு நெருக்கமானவர்கள்.


பா.ஜ.க.வின் அரசியல் ஆலோசகர்களி டம் இது குறித்து விசாரித்தபோது, ""பா.ம.க.வில் அதிகரித்துவரும் அதிருப்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேற தருணம் பார்க்கிறார்கள். இத்தகைய அதிருப்தியாளர் கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்குள் போக விரும்பு வதில்லை. ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அங்கு சென்றால் நல்ல பதவிகள் வாங்க முடியும் என எதிர் பார்த்திருக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக வும், அ.தி.மு.க.விடம் சீட் சேரிங்கை அதிகரித்துக்கொள்ளவும்தான் ரஜினியும் பா.ம.க.வும் நெருங்குவது போல தோற்றத்தை உருவாக்குகிறது பா.ம.க. தலைமை''‘என சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்த ரஜினியை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பலே பலே திட்டங்களைப் போடத் துவங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.

 

 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.