Skip to main content

இட ஒதுக்கீட்டால் இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற எம்ஜிஆர்; அதிமுக தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறது - ராம. சுப்பரமணியம்

Published on 16/11/2022 | Edited on 17/11/2022

 

ர

 

உயர் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இதுதொடர்பாக மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும் அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராம. சுப்பிரமணியத்திடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " அதிமுக இந்த விவகாரத்தில் ஆதரிக்கிறதா இல்லையா என்பதை முதலில் சொல்லட்டும். இவர்கள் இன்றைக்கு இதில் மாட்டிக்கொள்ளவில்லை.

 

எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கும்போது 9 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருப்பவர்கள் எல்லாம் உயர் வகுப்பு ஏழைகள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது என்ன ஆனது என்று இவர்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் இரண்டு இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக தோற்றது. 

 

இவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை, வாயில் வருவதைச் செய்தியாளர்களைப் பார்த்ததும் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். எந்தக் காலத்திலும் இத்தகைய முடிவுகளைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நமக்கு வரலாறு தெரிவித்துள்ளது. ஆகையால் ஜெயக்குமார் போன்றவர்கள் தங்கள் ஆட்சியில் இதற்கு முன்பு என்னென்ன நடைபெற்றது என்ற விவரங்களை முதலில் அறிந்துகொண்டு பிறகு தெளிவாகப் பேச வேண்டும்.

 

பாஜகவினரை எதிர்க்கக்கூடாது, அவர்களுக்கு அடிவருடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்து வந்தால் அதிமுக தமிழகத்தில் காணாமல் போக அதிக நாட்கள் ஆகாது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தங்கள் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறது.

 


தமிழகத்தில் 80களில் எம்ஜிஆர் கொண்டு வந்த அந்த உயர் பிரிவினர் இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகு உடனடியாக வாபஸ் வாங்கிவிட்டார். இதை திமுக மக்களிடம் கண்டிப்பாகப் பெரிய அளவில் வரும் காலங்களில் கொண்டு செல்வார்கள். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞர் அதைத் தீவிரமாகச் செய்தார். தற்போது அதிமுகவுக்கு எதிராக திமுக கடுமையாக இதனைத் தேர்தல் காலங்களில் முன்னெடுத்துச் செல்லும் என்பது எனது எண்ணம்.

 

அவ்வாறு கொண்டு செல்லும்போது இவர்களால் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு இந்த இட ஒதுக்கீட்டை அதிமுக ஆதரிக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவராக வழக்கம்போல் பேசுவதைப்போல் கூறினாரா இல்லை எடப்பாடி கூறச்சொல்லிக் கூறினாரா என்பது தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் இதற்காக அதிமுக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.”

 

 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.