Skip to main content

ரஜினியின் அரசியல் 1989 முதல் 2020 வரை..! 

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

Rajnikanth's politics time line

 

கடந்த 25 ஆண்டு காலமாக நடிகர் ரஜினியை மையமாக வைத்து அரசியல் சர்ச்சை சுற்றிக்கொண்டு இருந்தது. அதற்கெல்லாம் 2017ல் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். ரஜினியின் மீது அரசியல் வெளிச்சம் விழத்தொடஙகியது முதல், அரசியல் கட்சி கிடையாது என அறிவித்துள்ளது வரை எப்போது, என்னென்ன ஆண்டுகளில் எப்படி பேசினார் என்பதே கீழ்கண்ட பட்டியல்..

 

ரஜினியை மையம் கொண்ட அரசியல்:
 

1989ல் ரஜினியின் மாப்பிள்ளை படம் வெளியானது. அதில் வில்லியாக நடித்த ஸ்ரீவித்யா கதாபாத்திரம் ஜெயலலிதாவை வைத்து உருவாக்கப்பட்டது என பேசப்பட்டது.

 

Rajnikanth's politics time line

 

1989 டிசம்பர் 14ஆம் தேதி ரஜினி, புதியதாக கட்டிய ராகவேந்திரா திருமண மண்டபத்தை கலைஞர் திறந்துவைத்தார். இதனால் ரஜினி மீது தி.மு.க. முத்திரை விழுந்தது.
 

1992ல் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு ரஜினி காரில் சென்றபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள பகுதி என சோதனை என்கிற பெயரில் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டது. அதன்பின் வந்த அண்ணாமலை, பாண்டியன், முத்து படங்களில் ஜெயலலிதாவின் அரசியலை விமர்சனம் செய்யும் வசனங்கள் இடம்பெற்றன. இதற்கான காரணம் அவரின் காரை நிறுத்தி சோதனையிட்டதே என அப்போது பேசப்பட்டது.   
 

1995 ஜீலை, பாட்ஷா பட வெற்றி விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என பேசினார் ரஜினி. இதனால் விழா மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா.

 

1996 சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என விமர்சனம் செய்தார், தி.மு.க. - த.மா.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது.

 

Rajnikanth's politics time line

 

1998 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - த.மா.க. கூட்டணிக்கு வாய்ஸ் தந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.  
 

2002  ரஜினி, பா.ம.க. இடையே மோதல்.
 

2004  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளில் தோற்கடிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். தி.மு.க. கூட்டணி 40க்கு 40 வெற்றி வெற்றி பெற்றது.
 

12.12.12 உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் சென்று வந்தபின்பு ரசிகர்களை சந்தித்தார். அப்போது உங்கள் விருப்பத்தை (அரசியல்) நிறைவேற்றுவேன் என பேசினார்.  
 

Rajnikanth's politics time line

 

ஏப்ரல் 2014 நாடாளுமன்ற பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்த மோடி, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குபின் மோடி சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி என பாராட்டு தெரிவித்தார்.
 

கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்புக்கு பின்பு:
 

19.5.2017 மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வரவைத்து ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து புகைப்படம் எடுத்தபோது பேசியது, “இங்கு ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கு, சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு. சிஸ்டம் சரிப்பண்ணனும், மாற்றத்தை உருவாக்கனும், அப்போதான் நாடு உருப்படும், நாம் சேர்ந்து செய்யனும். கடமையை செய்ங்க, போர் வரும்போது பார்த்துப்போம்” என்றார்.

 

31.12.2017  நான் அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்போம். மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துடுச்சு. சாதி, மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வருவன்.

 

Rajnikanth's politics time line

 

05.03.2018 சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். நான் நடிகனாக என் வேலையை சரியா செய்து இருக்கேன். நீங்கள் உங்க வேலையை சரியா செய்யல. எம்.ஜி.ஆர் மாதிரி ஆகனும்னு ஒருத்தன் சொன்னால், அவனை மாதிரி பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. எம்.ஜி.ஆர் போல் என்னால் ஆட்சி தரமுடியும்.
 

9.4.2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பாராட்டினார். மறைமுகமாக பா.ஜ.க. ஆதரவு.
 

19.04.2019  ரசிகர்களை, மக்களை ஏமாற்றமாட்டேன். 2021 சட்டமன்றத் தேர்தலே இலக்கு, எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.
 

11.11.2019 திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசனமாதிரி, எனக்கும் பி.ஜே.பி வண்ணம், காவி வண்ணம் பூசப்பார்க்கறாங்க. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்.
 

12.03.2020 லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில், 1996ல் இருந்து அரசியலுக்கு வர்றேன், வர்றேன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. நான் அப்படி எப்போதும் சொல்லவில்லை. நான் 2017ல் தான் அரசியலுக்கு வருவன்னு முதன் முதலா சொன்னேன். சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு, மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கனும். அதை மாற்றாமல் அரசியல் கட்சி துவங்கினால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்ததுபோல் இருக்கும். தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் கிடையாது. இதுதான் நேரம் 50 ஆண்டுகால இந்த ஆட்சிகளை அகற்றுவதற்கு. மக்கள் யோசிக்கனும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் செய்ய மக்களிடம் எழுச்சி உருவாகனும், உண்டாகிவிட்டால் எல்லாம் மாறும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.

 

அக்டோபர் 2020 ரஜினி உடல்நிலை குறித்த அதிகாரபூர்வமற்ற அறிக்கை வெளியாகி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
 

29.11.2020  ரசிகர் மன்ற மா.செக்களிடம் கலந்து ஆலோசிக்கிறேன், விரைவில் அரசியல் முடிவை வெளியிடுகிறேன் என்றார்.
 

03.12.2020 அரசியல் மாற்றம் இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல, டிசம்பர் 30ஆம் தேதி கட்சி எப்போது தொடங்கப்போகிறேன், பெயர் என்னவென அறிவிப்பேன். கட்சி தொடங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக தமிழருவிமணியன், அர்ஜுனமூர்த்தி நியமனம் என அறிவித்தார்.
 

15.12.2020  அண்ணாத்த படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் ஐதராபாத் பயணம்.
 

20.12.2020 ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி, ஆட்டோ சின்னம் எனத் தகவல் வெளியாகிறது.
 

21.12.2020 கட்சி பெயர், சின்னம் குறித்து தலைவர் அறிவிக்கும் வரை எதையும் பரப்ப வேண்டாம் என அறிவிப்பு.
 

24.12.2020 அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கரோனா உறுதி.
 

25.12.2020 ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி. ரத்த அழுத்தம் அதிகரிப்பால் சிகிச்சை. 3 நாள் சிகிச்சைக்கு பின்பு சென்னை திரும்பினார்.

29.12.2020 கரோனா நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டு அதில் ரசிகர்களும் மக்களும் என்னை மன்னியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
 

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!