Skip to main content

"ரஞ்சித், தமிழ் தேசியவாதிகளை, திமுக - அதிமுகவை விமர்சனம் செய்யட்டும். ஆனால்..." - ராஜ்மோகன்  

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

பேட்டியின் முதல் பகுதி

"இதெல்லாம் தெரியாமலா கலைஞர் ராஜ ராஜ சோழனுக்கு விழா எடுத்தார்?" - ரஞ்சித் விவகாரத்தில் ராஜ்மோகன்

பா.ரஞ்சித்தின் பேச்சு குறித்த ராஜ்மோகன் பேட்டியின் தொடர்ச்சி...

 

rajmohan interview



தஞ்சை பெரிய கோவில் தமிழகத்தின் அடையாளமாக இருந்தாலும், அதை கட்ட பெரிய பொருட் செலவும், மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டதாக கூறப்படுகிறதே?

மக்களின் உழைப்பை சுரண்டி கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரில் அதை கட்டியவர்களின் பெயர் இருக்கா? இல்லை, மக்களின் உழைப்பை சுரண்டி இப்போது கட்டியிருக்கீங்களே ரிப்பன் பில்டிங், அதுல கட்டியவர்கள் பெயர் இருக்கா? இல்லை. ஆனா பெரிய கோவில் கட்டிய உதவியவர்களை சிற்றரசர் அளவுக்கு ராஜராஜன் போற்றி பாதுகாத்தார். அந்த கோயிலில் அதை கட்ட உதவியவர்களின் பெயர்களை பதித்தார். ராஜராஜன் கட்டினான் என்று பெயர் வரக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  இந்த மாதிரியான கிரெடிட்டை இதற்கு முன் யாரும் கொடுத்ததில்லை என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களும் இருந்த போதும் அதனை தவிர்த்து, அனைவருக்கும் சமமாக வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார்.

இதை நீங்க பெருமையா பேசுங்க. ஆனா, அந்த காலகட்டத்துல குறுநில மன்னர்களின் நிலங்களை பறித்தும், சேர பாண்டிய மன்னர்களின் சொத்துக்களை அபகரித்துதான் இந்த கோயில் உருவாக்கப்பட்டதுன்னு சொல்லப்படுதே?

புறநானூறு  முழுவதும் மன்னர்களின் போர் வெற்றிகளை மட்டும்தான் பெருமையாக பேசுகிறது. அவர்கள் போர் புரிந்ததும் உண்மைதான். அந்த கால வரலாறே அப்படிதான். ராஜராஜன் எதையும் புதிதாக செய்யவில்லை. மன்னராட்சியில் அப்படிதான் இருந்திருக்கிறது. இந்த விஞ்ஞான வளர்ச்சியான காலத்தில் கூட ஒருத்தரை ஒருத்தர் வெட்டிகிட்டு சாகிறாங்க.


அதை பற்றியெல்லாம் நீங்க வீடியோ போடலையே?

போடுவோங்க... நீங்க ஆசை பட்டீங்கன்னா ரொம்ப விரிவா வீடியோ போடுவோம். ஆனா சிறுமை படுத்தாதீங்கன்னுதான் நாங்க கேக்குறோம். நடிகர் சிவகுமார் ஒரு நல்ல நடிகர். அவர் செல்போனை தட்டிவிட்டது தப்புதான். அதற்காக அவரை வரப்போற சமூகம் மோசமானவர்னு பேசினா அது எவ்வளவு பெரிய அயோக்கித்தனம்? அவர் தமிழை பாமரன் வரைக்கும் கொண்டு சென்றார். கடைசி காலம் வரையில் சினிமாவில் ஒழுக்கமாக இருந்தார். ஒரு சிறிய தவறுக்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறுப்பது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. இன்னும் சில காலத்துக்கு பிறகு யார் அந்த செல்போன் தட்டிவிட்ட அயோக்கியனா என்று பேசினால், நாம் எப்படி பொறுக்க முடியும்.

  tanjai big temple



ரஞ்சித் எப்படி ராஜராஜனை தப்பா பேசலாம்னுதான் குற்றஞ்சாட்டப்படுதே?

ரஞ்சித்தே பிரச்சனை இல்லை, நெருப்புனா சுட்டுவிடாது. ரஞ்சித் காலகட்டத்துக்கு பிறகு, நானும் செத்துடுவேன், மனுஷனா பொறந்த எல்லாரும் இறந்துவிடதான் வேண்டும். அவருக்கு பிறகு யார் அவருனு பேசறப்ப, ராஜராஜ சோழனை தப்பா பேசுனாரே அந்த ரஞ்சித்தானு அவரை வரலாறு பதிவு செய்ய கூடாது. தன்னுடைய முதல்படமான அட்டகத்தியிலேயே உணவு அரசியலை பேசினாரே, மெட்ராஸ் திரைப்படத்தில் தற்கால அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினாரே, காலா படத்தில் ரஜினியை வைத்து, அதுவும் ரஜினிக்கு சோழர்களின் பெயரான கரிகாலன் பெயரை வைத்து தலித் மக்களின் உரிமையை பேசினாரே என்றுதான் வரலாறு பதிவு செய்ய வேண்டும். முன்னோர்களை மதித்தல் என்பது தமிழ் மரபு. அதைதான் செய்ய வேண்டும் என்கிறோம்.

ரஞ்சித் பேசியதில் மற்ற கருத்துக்களை எப்படி பாக்கிறீங்க, ஊரும் சேரியும் ஒன்னாகலைனு அவர் சொல்றது ஒத்துக்கொள்கிறீர்களா?

அதெல்லாம் நிச்சயம் இருக்கு. நாம் எவ்வளவு விஞ்ஞானத்துக்கு போனாலும் நவீன தீண்டாமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. அதை ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. அதைதான் ரஞ்சித் போன்றவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். அதை அவர்கள் தொடர வேண்டும். ஜாதிங்கிற கேன்சர் கட்டிய அறவே அழிக்க வேண்டும். அதுவே சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.


அவர் தமிழ் தேசியவாதிகளையும் கேள்வி கேட்கிறாரே?

அவர் தமிழ் தேசியவாதிகளை கேட்கிறார், திமுக, அதிமுக-வை விமர்சனம் செய்கிறார், செய்யட்டும். இதை எல்லாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து செய்ய முடியாது. இதையெல்லாம் உடனடியாக பேச வேண்டிய விஷயங்கள். இதை யாரும் தடுக்கவில்லை. ஆனா... அயோக்கியன் ராஜராஜசோழன்னு யரோ தப்பா சொல்லியிருக்காங்க. அதைத்தான் தவறுனு சொல்கிறோம். அப்ப ராஜபக்ஷேவுக்கும் ராஜராஜனுக்கும் வித்தியாசம் இல்லையா?

ரஞ்சித் மீதான ஜாதி ரீதியான விமர்சனங்களை எப்படி பாக்குறீங்க?

நிச்சயம் தவறு. யார் மீதும் ஜாதி ரீதியாக தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் தவறானது. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழத்தின் மிகப்பெரிய கேடு. ஜாதியை சொல்லி திட்டுவதையும், விமர்சிப்பதையும் நவீன தீண்டாமையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

 

 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.