Skip to main content

ராஜிவ் கொலையும் திமுகவினர் சிந்திய ரத்தமும்!!!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. 1990 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசு அமல்படுத்தியது. அதேசமயம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவை யாத்திரையை தேசியமுன்னணியில் இடம்பெற்றிருந்த பாஜக தலைவர் அத்வானியும் தொடங்கினார்.


 

rajiv gandhi

 

 

 

அந்த யாத்திரை பிகாரில் நுழைந்தபோது, பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்தார்.

 

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து பாஜகவின் துணை அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், அத்வானியும் கைதுசெய்யப்பட்டதால் தேசியமுன்னணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.


இதையடுத்து வி.பி.சிங் 1990 நவம்பர் 10 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடனே, தேசியமுன்னணியில் இருந்த ஜனதாதள தலைவரான சந்திரசேகரின் பிரதமர் ஆசையை பயன்படுத்தி, அவர் ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு தரும் என்று ராஜிவ் அறிவித்தார். சந்திரசேகர் பிரதமர் பதவியை ஏற்றார். உடனே, தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான அரசை கலைக்க சந்திரசேகருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. அப்போது, ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பனரான ஆர்.வெங்கட்ராமன் பொறுப்பு வகித்தார்.


காங்கிரஸ்காரரான அவர், தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் மாநில அரசுக்கு எதிராக அறிக்கை தரும்படி கேட்டார். ஆனால், திமுக அரசுக்கு எதிராக பர்னாலா அறிக்கை தர மறுத்தார். இதையடுத்து, அரசியல் சட்டத்தில் ஆளுநர் அறிக்கையைப் பெற்றோ, அவர் தரமறுத்தால், அதர்வைஸ் என்று இருந்த ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி திமுக அரசாங்கத்தை கலைத்தார் ஆர்.வெங்கட்ராமன்.

 

 


ஆக, 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான ஆட்சி நல்ல திட்டங்களை அமல்படுத்திய நிலையிலும் கலைக்கப்பட்டது.


கலைஞர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.

இலவச மின்சாரம் வழங்கியதால் கலைஞருக்கு விவசாயிகளும், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதால் பெண்களும், சத்துணவில் முட்டை சேர்த்ததால் பெற்றோரம், கல்லூரி வரை இலவச பஸ்பாஸ் வழங்கியதால் மாணவர்களும் திமுகவை ஆதரித்தனர். 


ஆளுநரின் அறிக்கை இல்லாமல், திமுக அரசை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு நிறைவேற்றிய நாடகம் என்பது வாக்காளர்களுக்கு புரிந்திருந்தது.

 

 


திமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்குச் சாதகமாகவே இருந்தன. இந்நிலையில்தான் அந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.


1991 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் காங்கிரஸும் அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.


திமுக, ஜனதாதளம், சிபிஐ, சிபிஎம், டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி பொறுப்பு வகித்தார்.


இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி சென்னை வந்தார். இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்னை வந்த ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருடைய காரில் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவரும் பயணித்தார்.

 

 


பின்னர் இரவு 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரின் வெளிப்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு ராஜிவ் வந்தார். அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரசேகரோ, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியோ வரவில்லை.


மேடைக்கு செல்லும்போது ராஜிவை இடைமறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும் பள்ளிக் குழந்தைகளும் ராஜிவுக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடன் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைப்பிரிவைச் சேர்ந்த தணு என்கிற தேன்மொழி ராஜரத்தினம் என்கிற காயத்ரி என்ற மனிதவெடிகுண்டும் கலந்திருந்தார்.


ராஜிவை நெருங்கிய அவர், அவருடைய காலைத் தொட்டு வணங்குவதற்காக குனிபவர்போல தனது இடுப்பில் கட்டியிருந்த ஆர்டிஎக்ஸ் என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.


நொடிகளில் அந்த இடம் ரத்தக் களறியானது. ராஜிவ் உடல் சிதறி உயிரிழந்தார். அவருடன் மேலும் 14 பேரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடந்த கேமரா ஒன்றில் இந்தக் காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருந்தன. சம்பவத்தை கேள்விப் பட்டதும் மூப்பனார்தான் முதலில் அந்த இடத்துக்கு சென்றார். ராஜிவின் சிதறிய உடலை அவர்தான் அடையாளம் கண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிவிட்டது.


 

rajiv gandhi

 

 

 

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை, அதிமுகவினரும், காங்கிரஸாரும் திமுகவினருக்கு எதிராக திருப்பி விட்டனர். திமுக பிரமுகர்களின் வீடுகள், சொத்துக்களை அடித்து நொறுக்கினர். பலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

 


முரசொலி அலுவலகம், தீக்கதிர் அலுவலகம் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன. ராஜிவ் கொலைக்கு திமுகவே காரணம் என்று அபாண்டமாக பிரச்சாரம் செய்தனர்.


விடுதலைப் புலிகள் நடத்திய இந்த கொடூரமான வெடிகுண்டு தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று கூறப்பட்டாலும், விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சுப்பிரமணியன் சாமி கூறிய பொய்யை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை பறிகொடுத்த திமுக மீதே, ராஜிவ் கொலைக்கான பழியையும் சுமத்தினார்கள்.

 

 


ஆயிரக்கணக்கான திமுகவினர் அதிமுக மற்றும் காங்கிரஸாரால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தினர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திமுகவினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.


ஊர்முழுக்க ராஜிவ் மரணத்தையொட்டி ஒப்பாரி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் வட மாநிலங்கள் பலவற்றில் நடந்து முடிந்திருந்தன. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில்தான் ராஜிவ் கொல்லப்பட்டிருந்தார்.


இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில்தான் காங்கிரஸுக்கு கணிசமான இடங்கள் கூடுதலாக கிடைத்தன. அப்படி இருந்தும் ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.


அதேசமயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொய் பிரச்சாரத்தால், விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி ராஜிவை திமுகவினர்தான் கொன்றார்கள் என்ற பிரச்சாரத்தை நம்பிய வாக்காளர்கள் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்தார்கள்.

மக்களவைத் தொகுதிகள் அனைத்தையும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக 164 காங்கிரஸ் 60 என்று பெரும்பகுதி தொகுதிகளை கைப்பற்றி ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.


 

rajiv gandhi


சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா மிக அதீதமாக நடந்துகொண்டார். தனது தோழியா சசிகலாவை சபாநாயகர் ஆசனத்தில் அமரச் செய்து தனது முதல் அட்டூழியத்தை நடத்திக் காட்டினார். இதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கக்கூட இல்லை.

அடுத்துப் பேசிய ஜெயலலிதா "நான் ஒரு பாப்பாத்திதான்" என்று தனது அகங்காரத்தை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகளை உதிர்த்தார். விடுதலைப் புலிகள் பற்றி பேசியபோது, "பிரபாகரனை கைதுசெய்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஈவிரக்கமில்லாமல் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்" என்றெல்லாம் பேசினார்.


தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் ரத்தத்தால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியபோது, அதை உடனே எழுந்து மறுத்த ஜெயலலிதா, தனது செல்வாக்கால் மட்டுமே கூட்டணி வெற்றி பெற்றது என்று தனது அகம்பாவத்தை வெளிப்படுத்தினார்.

 

 


இதையடுத்து காங்கிரஸை தனது ஆட்சி செயல்பாடுகளில் தலையிடாமல் செய்து தனது விருப்பப்படியான ஆடம்பர, ஆணவ தர்பாரை தொடங்கினார். அப்போதிருந்து தமிழகம், ஜெயலலிதா மற்றும் சசிகலா கூட்டத்தின் வேட்டைக்காடாக மாறியது.


ஜெயலலிதா சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது. ராஜிவ் கொலைக்கு திமுகதான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்ட அதிமுகவின் சாதுர்யமும், வீண்பழியைச் சுமந்த திமுகவினர் சிந்திய ரத்தமும்தான் அதிமுக ஆட்சிக்கு வர உதவியது என்பதை அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என்பது காலப்போக்கில் வெளிப்பட்டது.


சமீபத்தில் இறந்த ம.நடராசன், சுப்பிரமணியன் சாமி, சந்திராசாமி ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ராஜிவ் கொலைச் சதியை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. மத்தியில் இந்திரா குடும்பத்தினர் இல்லாத அரசு அமையவும், அதன்மூலம் இந்தியாவில் நிலையற்ற தன்மை உருவாகவும், தமிழகத்தில் ஜெயலலிதா அரசு அமைவதன் மூலம் திமுகவை தொடர்ந்து மாநில அரசியலில் பின்னுக்குத் தள்ளவும் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட்டது.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்