Skip to main content

ரஜினியால் பலன் இல்லை என நினைக்கும் பாஜக... லாக்டவுனால் அரசியலில் பிரேக்டவுனா? வெளிவந்த களநிலவரம்! 

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

rajini



மார்ச் 12-ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. ’நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். ஆட்சித் தலைமைக்கு ஒரு நியாயவானை நியமிப்பேன்'' என அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புதுவித அரசியல் பாணியை அறிவித்தார். இது அவரது மன்றத்தினரையே கொஞ்சம் அதிர வைத்தாலும், தலைவர் சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்’ என தங்களை சமாதானப்படுத்திக்கொண்டனர். ரஜினியின் நியூ பாலிடிக்ஸ் பாலிஸியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகமெங்கும் போஸ்டர்களை ஒட்டித் தள்ளினார்கள். மறுபுறமோ ‘ரஜினி முதல்வராகியே தீருவார், தாழ்ந்து கிடக்கும் தமிழகம் தலை நிமிரும்’ என்றெல்லாம் ஆசைக் குரல் எழும்பிக்கொண்டிருந்தன. ராஜகுருக்கள்களும் அரசியல் ஆலோசகர்களும் அட்செட்டானார்கள். மீடியாக்களில், ‘ஏப்ரலில் ரஜினி கட்சி தொடங்குகிறார். ஆகஸ்ட்டில் மதுரையில் மாநாடு நடத்துகிறார். டிசம்பரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார். ஜனவரியில் அறிவிக்கிறார். 2021 மே மாதம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றெல்லாம் நியூஸ்களை தெறிக்கவிட்டார்கள்.


இப்படியெல்லாம் நிலைமை போய்க்கொண்டிருந்தபோதுதான் கரோனா லாக்டவுன் வந்து இந்திய மக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முடக்கியது. அகில இந்திய அரசியலைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. என்பதுதான் எதார்த்தம். பெரும்பான்மையான மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.

 

 

dmk



தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிராக தி.மு.க. என்பதுதான் முதல்நிலை அரசியல். மற்ற கட்சிகளின் அரசியலெல்லாம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்பதுதான் உண்மை. இப்போது கரோனா காலத்தில்கூட ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையேதான் வார்த்தைப் போர்களும் அறிக்கைப் போர்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் ஆளுங்கட்சி என்ற முறையில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது அ.தி.மு.க. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க.வோ ஒன்றிணைவோம் வா எனும் பெயரில் உணவு, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை மாவட்டவாரியாக வீடுதேடிச் சென்று வழங்கியதுடன், தங்களின் ஹெல்ப்லைனுக்கு வந்த கோரிக்கைகளில் நிறை வேற்ற முடியாதவற்றை கோரிக்கை மனுக்களாக அந்தந்த மாவட்டக் கலெக்டர்களிடம் வழங்கியுள்ளது. அதனால், கரோனா யுத்தத்திலும் அ.தி.மு.க-தி.மு.க. என்றே அரசியல் களம் வரிந்துகட்டி நிற்கிறது.

கட்சியே ஆரம்பிக்காத ரஜினியும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து இரண்டு தேர்தல் களம் கண்ட கமலும் தாங்கள் சார்ந்த திரைத் துறைக்கு உதவி செய்திருக்கிறார்களே தவிர, பொது மக்களுக்கு பெரிதாக எந்த உதவியும் நேரடியாக செய்யவில்லை. இருவரது அமைப்பைச் சேர்ந்த மா.செ.க்களும் ஒ.செ.க்களும் தங்களது சொந்தக் காசில் உதவி செய்து, மக்களிடம் ஓரளவு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப் பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினாலும் “குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

mnm



“இந்த எச்சரிக்கை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கும். அதாவது தேர்தல்கால பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நெருக்கியடிக்கும் தெருமுனைக் கூட்டம், வேனில் பிரச்சாரம் இவற்றிலெல்லாம் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இன்னும் சொல்லப்போனால் வாக்குப்பதிவு முறைகளிலேயே மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் ‘நியூ பொலிடிக்கல் பாலிஸி’ டிரெண்ட்டிங் ஆகுமா- பிரேக் டவுன் ஆகுமா? என்பதை அறிய அண்ணா காலத்து அரசியல் வாதியும் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த எழுத்தாளர் சோலையின் நெருங்கிய நண்பருமான திண்டுக்கல் தம்பிதுரையை தொடர்புகொண்டோம். 90 வயதிலும் மிகத்தெளிவாக கணீர்க் குரலில் நம்மிடம் பேச ஆரம்பித்தார் தம்பிதுரை.


"ஏழைகள், அடித்தட்டு மக்களின் அவலத்தையும் ஏக்கத்தையும் தனது சினிமாவில் எதிரொலித்தவர் எம்.ஜி.ஆர். அவரது முக்கால்வாசி சினிமாக்கள் தாயின் பெருமை பேசும். நான் ஆணையிட்டால்... ஏழைகள் வேதனைப்படமாட்டார்கள் என சினிமாவில் வெளிப்படுத்திய நடிப்பை அரசியலிலும் வெளிப்படுத்தியதுதான் எம்.ஜி.ஆரின் மாபெரும் பலம். தனக்கு கிட்னி கொடுத்து உதவிய தனது அண்ணன் மகள் லீலா வதிக்கு பணம் கொடுத்தாரே தவிர, பதவி எதுவும் கொடுக்க வில்லை. தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, அ.தி.மு.க.வுக்குள் நுழைந்த கதை வேறு, வீழ்ந்த கதை வேறு. எம்.ஜி.ஆர். தனது சொத்துகளை ஏழைகளுக்கு எழுதிவைத்து அரசியல் நடிப்பை உறுதி செய்தார்.

ரஜினி, கமல் இருவரின் சினிமாக்கள் எல்லாமே விசில் அடிச்சு ரசிக்கும் ரகங்கள் மட்டுமே. மேற்படி இருவருமே அரசியலில் தாராளம் காட்டி தங்களது பொருளாதார இழப்புக்கு தயாரில்லாதவர்கள். இதன் அடிப்படையிலும் இத்தனை ஆண்டுகால தமிழக அரசியலை நான் கவனித்துவரும் நிலையிலும் எனது கணிப்பு ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்பதுதான். அதை மீறி கட்சி ஆரம்பித்தாலும் பலன் இருக்காது என்பது பி.ஜே.பி. மேலிடத்திற்கு நன்றாகத் தெரியும்.

கமலைப் பொறுத்தவரை 20 எம்.எல்.ஏ. சீட்டுகளை வாங்குவதற்கேற்ப அரசியல் நடத்துவார். ஆனால் அதை எந்த அணியிடம் வாங்குவார் என்பதுதான் பிரச்சினையே. இன்னொரு முக்கியமான விஷயம்… தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணபலம், படைபலத்தால் தமிழக வாக்காளர்களில் சரி பாதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதை தகர்ப்பதென்பது ரஜினிக்கும் கமலுக்கும் பெரும் சவால்'' என்கிறார் ஆணித்தரமாக.

இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும்போதுகூட, மத்திய பா.ஜ.க அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டைத் திறந்து சுங்க கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய வங்கிக் கொள்ளையர்களின் 68 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்படி மக்கள் வயிறெரியும் செயல்களையெல்லாம் மகிழ்ச்சியுடன் செய்யும் மோடியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கிறார் கமல். ஆனால் ரஜினியோ அந்த அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. அதே நேரத்தில், எடப்பாடி அரசின் டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக கோபம் காண்பிக்கிறார். கஜானாவை நிரப்ப நல்ல வழியை பாருங்கள், இல்லையென்றால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற கனவு பலிக்காது என ட்விட்டரில் எடப்பாடியை எச்சரிக்கிறார்.

அவரது ரசிகர்களோ,“கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றவரு மீண்டும் எடப்பாடி ஆட்சின்னு ஏன் சொல்லணும்? எப்போது கட்சி ஆரம்பிப்பார்? தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?’’என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். அதேநேரத்தில், ரஜினியோ அரசியல் உயர்மட்டக் குழு அமைப்பதிலும் கட்சி தொடங்குவதற்கான சில முன்னெடுப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டார் என்கிறது ரஜினியின் நெருக்கமான நட்பு வட்டம்.
 

y



கமலின் மக்கள் நீதி மய்யத்திலோ கிருஷ்ண அய்யர் என்பவர் அரசியல் கொள்கை வகுப்பாளராகவும், கமலுக்கு ஆலோசகராகவும் உள்ளாராம். மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ம.நீ.ம.வுக்கு ஆன்லைனில் 1000 உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ளாராம். கட்சியின் மேல்மட்டப் புள்ளிகளான மகேந்திரன், கமீலா நாசர், சினேகன் ஆகியோரின் ஆதரவாளர்கள் தங்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

இதற்கெல்லாம் விளக்கம் பெற பொதுச்செயலாளர்களான ஏ.ஜி.மௌரியாவையும் உமாதேவியையும் செல்போனில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர்கள் அட்டெண்ட் பண்ணவில்லை.

ஊரடங்கு முழுமையாக தளர்ந்தபின், ரஜினி-கமல் இருவரின் அரசியல் காய்நகர்த்தல்கள் வெளிப்படையாகத் தெரியவரும். லாக்டவுன் என்பது சரியான வியூகத்திற்கு வழிவகுத்துள்ளதா? அரசியலுக்கு பிரேக்டவுன் நிலையை உருவாக்கியுள்ளதா என்பதும் புரிந்துவிடும்.


 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.