Skip to main content

பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...   ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக???

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து அவர் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். “நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இப்படி அவர் அளித்த பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன.

 

rajini



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும் என கூறியுள்ளார். 
 

அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார் என கூறியுள்ளார். 
 

ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை மறக்க கூடாது, எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரங்கில் கூட எடுபடாது. அவரைப் பற்றி கருத்து சொல்லும்போது ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 
 

பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை என்பதால் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கலாம். இரண்டாவது நோக்கம், பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு, மோடி அரசுக்கு எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம், பொருளாதார கீழ்நிலை போன்றவைகளை திசை திருப்புவதற்காக ரஜினியை ஒரு ஆயுதமாக மத்திய அரசு கையாண்டிருக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அவரிடம் நான் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்வது, 95 ஆண்டு காலம் இந்த தமிழ் இனத்திற்காகவே போராடிய பெரியார் பற்றி பேசுகிறபோது, யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்று கூறினார்.


 

பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 
 

அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.
 

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

நடிகர் ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

எந்த விதத்திலும் ரஜினிகாந்த்தை காயப்படுத்த முடியாது. அவரை சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

ரஜினியின் பேச்சுக்கு இப்படி பிரபலங்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் விதமாக பேசியதாக ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்திருந்தார். 
 

அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

இதேபோல் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை நகர தலைவர் நேருதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரஜினிக்கு எதிராக கோவை காட்டுர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். 
 

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் அதன் நிர்வாகிகள் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சத்தியமங்கலம் காவல்நிலையத்திலும், கோபி காவல்நிலையம், அம்மாபேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த நிலையில் ஒரு மாற்றத்துக்காக நான் இம்முறை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தரத் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது... அதேபோல அவருக்கு வேண்டிய ஒரு சிலர் ஆதரவும் அளித்துள்ளனர். மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாரா? வருத்தம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.