Skip to main content

இதுவெல்லாம் எழுச்சியாகத் தெரியவில்லையா? ரஜினிக்கு மன்சூர் அலிகான் கேள்வி!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

 

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார். இதுகுறித்து நடிகர் மன்சூர்அலிகான் நக்கீரன் இணையதளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 
 

ஆட்சி மாற்றத்தைவிட அரசியல் மாற்றம் வர மக்கள் எழுச்சி வரவேண்டும் என்கிறாரே ரஜினி?
 

நான் இன்றும் ரஜினியின் ரசிகன். ரஜினி நல்ல மனிதர். நடிப்பில் திறமையானவர் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். மக்கள் எழுச்சி வரவேண்டும் என்கிறார். மக்கள் எழுச்சி இருப்பதால்தான் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 

 

Rajini - mansoor ali khan



 

லட்சம் பேர் திரண்டு தூத்துக்குடியில் போராடினார்கள். போராடிய மக்களை சுட்டுக்கொன்றார்களே. அங்கு லட்சம் பேர் திரண்டது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராடி விவசாயி செத்தே போயிட்டான். மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து விவசாயிகள் போராடியது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்தினார்களே விவசாயிகள், அது எழுச்சியாகத் தெரியவில்லையா?


 

 

இந்தியா முழுவதும் சிஏஏவை எதிர்த்து போராடுகிறார்களே அது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து மூன்று மாதமாக போராடுவது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்த போராட்டத்தில் 70 வயதை தாண்டிய பெண்களும் பங்கேற்றிருப்பது எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்தப் போராட்டத்தில் இருப்பவர்களை ரஜினியின் நண்பரான பிரதமர் மோடி போய் பார்க்கவே இல்லையே? 

நம்ம அப்பா, தாத்தாக்களுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அதுகுறித்து ரஜினி கேள்வி எழுப்பியிருந்தால் நம்ம தலைவர் கேட்டுவிட்டார் என்று மக்கள் எழுச்சி வந்திருக்கும். கேள்வி கேட்டாரா? 
 

2021ல் ரஜினியால் அரசியல் மாற்றம் வருமா? வராதா?
 

அவரால் எந்த மாற்றமும் வராது. அவர் எழுச்சி என்று சொல்வது தனது ரசிகர்களை திசை திருப்புகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ரஜினியின் பேச்சு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ரசிகர்களுக்கு அல்வா கொடுத்ததுபோலத்தான் இருக்கிறது அவரது பேச்சு. இவ்வாறு கூறினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
mansoor ali khan in hospitalized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலி கான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாக காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மெற்கொண்டார். 

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.