Skip to main content

ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா? -கராத்தே தியாகராஜன் அதிரடி

Published on 19/11/2019 | Edited on 20/11/2019

 


நடிகர் கமலஹாசனுக்கு நடந்த கலைவிழாவில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’’அரசியலில் அதிசயமும் அற்புதமும் நேற்றும் நடந்தது ; இன்றும் நடக்கிறது ; நாளையும் நடக்கும் ‘’ என சொல்லி, உதாரணத்திற்காக, ’’முதல்வராவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ‘’ என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டினார். ரஜினியின் அந்த பேச்சு, அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாகவும் உருவெடுத்தது.
 

ரஜினியின் அந்தப் பேச்சில் அரசியல் நெடி அதிகமாக இருக்கும் நிலையில் அவரது பேச்சின் பொருள் குறித்த விவாதங்கள் இன்னமும் நின்றபாடில்லை. இந்த நிலையில், ரஜினியின் மனசாட்சியாக அண்மைக் காலங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 

rajini - Karate R. Thiagarajan


 

ரஜினியின் நாளைய அதிசயம் என்பதன் பொருள் என்ன?
 

தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர் ரஜினிதான். நேரடி அரசியலில் அவர் இறங்குவது உறுதி. அடுத்த வருடத்தில் கட்சி துவக்குவார். கட்சி துவங்கியதும் அவரது அரசியல் இன்னும் அதிரடியாக இருக்கும். அந்த வகையில், அண்ணன் ரஜினி கூறிய நாளைய அதிசயம் என்பதை ஆராயும்போது, ’ தமிழகத்தின் நாளைய முதல்வர் அவர்தான் ’ என்பதாக நாங்கள் அர்த்தம் எடுத்துக்கொள்கிறோம். யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் முதல்வராக எடப்பாடி வந்ததை தமிழகமே அதிசயமாகப் பார்த்தது இல்லையா? அதுபோல, தமிழக முதல்வராக அண்ணன் ரஜினி பதவி ஏற்கும் அற்புதமும் நடக்கும்.


 
முதல்வர் எடப்பாடியை பற்றி ரஜினி கூறிய வார்த்தைகளுக்கு நமது அம்மா பத்திரிகை ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறதே? 
 

 

’கண்டக்டராக வாழ்க்கையை துவக்கிய ரஜினி, சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ’ என நமது அம்மா பத்திரிகை எழுதியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியை குறித்து அண்ணன் ரஜினி கூறியதன் பொருளை தவறாக புரிந்துகொண்டார்களோ என நான் நினைக்கிறேன். கண்டக்டர் வாழ்க்கையை எப்போதும் அண்ணன் ரஜினி மறக்கவில்லை ; மறக்கவும் மாட்டார். அந்த வாழ்க்கையை அவர் உயர்வாக நினைத்து மகிழ்பவர். அதனை பல சந்தர்பங்களில் நினைவு கூர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில், ’ கண்டக்டராக நான் இருந்த போது எனக்கு 350 ரூபாய் சம்பளம். திடீரென சினிமா வாய்ப்பு வந்து நடித்தபோது 3 லட்சம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அப்போது அடேங்கப்பா என ஆச்சரியப்பட்டேன். கனவில் கூட இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு நினைக்கவில்லை ‘ என ரஜினி சொல்லியிருக்கிறார்.        அதனால், கனவில் கூட என்பதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. தவறான கண்ணோட்டோத்தில் அண்ணன் ரஜினி பயன்படுத்தவில்லை. உழைப்பு என்கிற அர்த்தத்தில்தான் கனவில் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அரசியலாகட்டும் தனி மனித வாழ்க்கையாகட்டும்  ஒவ்வொரு மனிதரும் கடுமையாக உழைத்தால் நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைய முடியும். அது கனவில் கூட காண முடியாத உயர்ந்த நிலையாகக் கூட இருக்கும் என்கிற சிந்தனையில்தான் முதல்வர் எடப்பாடியை உதாரணமாக காட்டினார். அரசியலில் எடப்பாடி உழைத்த உழைப்புக்கு உயரிய இடம் கிடைத்திருக்கிறது என்பதே அண்ணன் ரஜினி கூற வந்த பொருள். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ளவேண்டும் ; புரிந்துகொள்வார்கள். 
 

தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக கட்சிகளோடு  ரஜினியும் இணைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிடுவதாக தகவல்கள் பரவுகிறதே? 
 

தனிக்கட்சி அடையாளத்தோடுதான் அண்ணன் ரஜினி தமிழக அரசியல் களத்தில் நுழைவார். இது, 200 சதவீதம் எதார்த்தமான உண்மை. ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பார்கள் என்பதெல்லாம் ஊடகங்களின் யூகங்கள். அதனால்,ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது என்பதை அன்றைய சூழல்கள்தான் தீர்மானிக்கும். 


 

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அதேபோல, கமல் விழாவில் பேசிய ரஜினியும், ஸ்டாலின் பெயரை சொல்லாமல் அவரை தாக்கியிருக்கிறார். இதனைப் பொறுத்திப் பார்க்கும்போது, ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறீர்களா?  
 

கமலுக்கு நடத்திய விழாவில், ’எடப்பாடி ஆட்சி ஒரு மாசம் கூடா தாங்காது ; மூணு மாசத்துல கவிழ்ந்திடும் ; நாலு மாசத்தில் கவிழ்ந்திடும் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று விவரித்தார் அண்ணன் ரஜினி. கவிழ்ந்திடும்ங்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது அண்ணன் ஸ்டாலின். அதனால், ஸ்டாலினை ரஜினி தாக்கியதாக நினைக்கிறீர்கள். தமிழக அரசியலில் சமீபகாலமாக அண்ணன் ஸ்டாலின் பேசியது  எதுவுமே நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை தனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அதேபோல, அரசியலில் நடக்கும் சில சம்பவங்களில் எனக்கு தெரிந்த பல உண்மைகள் அண்ணன் ஸ்டாலினின் அரசியலோடு சம்மந்தப்படுவதால் அதனை எனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். மற்றபடி ஸ்டாலின் குறித்து நான் முன்வைக்கும் விமர்சனங்களும் கருத்துக்களும் என்னுடையது மட்டுமே. இதனை அண்ணன் ரஜினியின் வாய்ஸோடு பொறுத்திப்பார்ப்பது தவறானது. 


 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.