Skip to main content

என்ன பேரு வைக்கலாம் கொடி எப்படி இருக்கனும் சொல்லுங்க... ரஜினியை ஏமாற்றியது யார்? வெளிவந்த தகவல்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

"நாளைக்கு தலைவரை பார்க்கப் போறீங்களா, போங்க, போங்க, இது தான் உங்களுக்கு தலைவரைப் பார்க்கும் கடைசி சந்தர்ப்பம். இப்ப இருக்கும் மா.செ.க்களில் ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரும் யோக்கியர்களா? யாராரு என்னென்ன திருட்டு, புரட்டு வேலைகள் பண்ணிருக்கீங்கன்னு தலைவருக்குத் தெரியும். அயோக்கியர்கள் அத்தனை பேரின் பதவிக்கும் தலைவர் வேட்டு வைக்கப் போறாரு.''

 

rajini



கடந்த 05—ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டத்தை ரஜினி நடத்தியதற்கு முதல் நாள், இப்படியொரு வாட்ஸ்—அப் தகவல் ர.ம.ம. குருப்புகளில் பரவி குபீர் கிளப்பியது. திருவண்ணாமலை கேசவன் என்ற பெயரில் வெளியான இந்த தகவல் ரஜினியின் பார்வைக்கும் போனது. இந்த வாட்ஸ்—அப் தகவல் வேறுவித விளைவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற முடிவுடன் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து, கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா மண்டபத்திற்கு புறப்பட்டார் ரஜினி.


10 மணிக்கு கூட்டம் என்றாலும் காலை 8 மணிக்கே அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர் மா.செ.க்கள். மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த மீடியாக்கள், மா.செ.க்கள் முன்பு மைக்கை நீட்டிய போது, "ஆளவிடுங்க சாமிகளா' என தெறித்து ஓடினார்கள். காலை 10.45 மணிக்கு மண்டபத்திற்குள் எண்ட்ரியானார் ரஜினி. வழக்கமாக ரஜினியின் இடதுபுறம் ர.ம.ம. தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர்தான் உட்கார்ந்திருப்பார். ஆனால் அன்றைய கூட்டத்திலோ மண்டப நிர்வாகி சிவா உட்கார்ந்திருந்தார். ரஜினியின் வலப்பக்கம் சற்று தள்ளி சுதாகர் உட்கார்ந்திருந்தார்.

 

 

rajini



எப்போதும் மாறாத புன்னைகையுடன் மா.செ.க்களிடம் நலம் விசாரித்த ரஜினி, எடுத்த எடுப்பிலேயே, "இந்தக் கூட்டத்தை கூட்டுவது பற்றி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

அது உடனே டி.வி. மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆகுது. உங்களுக்கு ரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியல. சரி அதவிடுங்க, ரெண்டு வருஷமா மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதில் ரொம்பவே மந்தமாகிட்டீங்க. அதே மாதிரி மக்கள் பிரச்சனைக்காக ஏதாவது போராட்டம் பண்ணீருக்கீங்களா, போராட்டம் பண்ணலாமான்னு தலைமையிடம் அனுமதியாவது கேட்டீங்களா. சித்திரை ஒண்ணாம் தேதி கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு, இதோ உட்காந்திருக்காரே மதுரை ரஃபீக் சொல்றாரு. அப்படி எதுவும் நான் சொன்னேனா'' என ரஃபீக்கைப் பார்த்து ரஜினி கேட்டதும் கப்சிப்பாகிவிட்டார் ரஃபீக். இது போன்று இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் மா.செ.க்களை நோக்கி பறக்கவிட்டார் ரஜினி.


கட்சிப் பெயர், கொடி பற்றி அனைத்து மா.செ.க்களும் ஆர்வமுடன் ரஜினியிடம் கேட்ட போது, "என்ன பேரு வைக்கலாம், கொடி எப்படி இருக்கலாம்னு நீங்களும் யோசனை சொல்லுங்க'' என ரஜினி கொக்கியைப் போட்டதும், "அண்ணாத்த' என அசந்துவிட்டனர் மா.செ.க்கள். "இஸ்லாம் மதகுருமார்கள் என்னைச் சந்தித்த பின்தான் சி.ஏ.ஏ. குறித்த பல விஷயங்கள் எனக்கு தெளிவாக புரிந்தது. நீங்களும் உங்க ஏரியா ஜமாத் தலைவர்களை சந்திங்க, தெளிவுபடுத்துங்க. விரைவில் மீண்டும் சந்திப்போம்'' எனக் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ரஜினி.

தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின் மட்டும், ரஜினியின் அனுமதியின் பேரில் மீடியாக்களைச் சந்தித்து தலைவர் எங்களிடம் பல விஷயங்களை விரிவாகப் பேசினார், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது'' என சுருக்கமாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

மக்கள் மன்றத்தினருடன் ரஜினி விரிவான ஆலோசனை, தேர்தலுக்கு ரெடியாகும் ரஜினி’ என மீடியாக்களில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே, "இஸ்லாம் மத தலைவர்களுடன் நடந்த சந்திப்பு இனிமையாக இருந்தது. கட்சி ஆரம்பிப்பது பற்றி விரைவில் சொல்வேன். எனக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. அதை பிறகு சொல்கிறேன்'' என போயஸ்கார்டன் வீட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.

என்ன ஏமாற்றம் என ரஜினி ஏரியாவில் சிலரை நாம் தொடர்பு கொண்ட போது,

"அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து ரொம்பவே யோசிக்கிறாரு. உறுப்பினர் சேர்ப்பு, பூத் கமிட்டி அமைப்பு போன்றவைதான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அப்படியே ஆரம்பிச்சாலும் இப்ப இருக்கும் 37 மா.செ.க்களில் 7 மா.செ.க்களுக்குத்தான் கட்சியில் மா.செ. பொறுப்பு கொடுப்பார். ஏ.சி.சண்முகத்தின் மகன் அருண்குமார், திருச்சி காங்கிரஸ் வி.ஐ.பி.அடைக்கலராஜின் மருமகன் பிரான்சிஸ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உறவினர் ஒருவர், சினிமா தயாரிப்பாளர் திருவண்ணாமலை தணிகைவேலின் உறவினர் எனப் பலரும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் மாநில-மாவட்ட பொறுப்புகளையும் தேர்தல் சீட்டையும் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றியும் ரஜினி தயக்கத்துடன் யோசிக்கிறார். 04—ஆம் தேதி நைட் சிங்கப்பூரிலிருந்து ராஜு மகாலிங்கம் வந்திருப்பதைப் பார்த்தா ஏதோ ஒரு முடிவுக்கு ரஜினி வந்துட்ட மாதிரி தெரியுது'' என்றனர்.

இந்த மாத இறுதியில் "அண்ணாத்த' ஷூட்டிங் முடிவடைகிறது. ஏப்ரலில் அப்படத்தின் ஆடியோ ரிலீஸ், அதற்கடுத்ததாக கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் படம் என சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ரஜினி, அரசியல் கமிட்மெண்டுகளையும் கமெண்டுகளையும் அவ்வப்போது ரிலீஸ் பண்ணுவார். வெற்றி 100% என்றால் அரசியலில் கலக்குவார் என்கிறார்கள்.

- து.ராஜா 

 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.