Skip to main content

நம்பிக்கை கொடுத்த ரஜினி! பின்வாங்கிய அதிமுக அமைச்சர்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கத் துடிப்பதாக அமைச்சர் சம்பத்தின் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அறக்கட்டளையின் அலுவலகம் சூறையாடப்பட்டதில் அதிர்ந்து கிடக்கிறது கடலூர்.

 

admk



கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பெரிய வடவாடி கிராமத்தில் செந்தில் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனை என பரந்து விரிந்து கிடக்கிறது செந்தில் அறக்கட்டளை. கிட்டத்தட்ட 2000 மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். அறக்கட்டளையின் சேர்மனாக இருப்பவர் டாக்டர் இள வரசன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர். மேலும் ரஜினி மன்றத்தின் மாநில அமைப்பாளராகவும் இருந்து பிறகு விலகியவர் டாக்டர் இளவரசன். தனது மகனுக்கு தி.மு.க.வை சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் மகளை மணமுடித்துள்ளார். இளவரசனின் சகோதரர் இளங் கோவனுக்கு (முன்னாள் ஐ.ஜி.) இரண்டு மகள்கள். ஒருவரை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகனுக்கும், மற்றொரு மகளைபங்காரு அடிகளார் மகனுக்கும் கொடுத்துள்ளார் இளங்கோவன்.

 

admk



இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் அறக்கட்டளை அலுவலகத்திற் குள் நுழைந்து இளவரசனின் அறையை உடைத்தெறிந்து அங்கிருந்த டாக்குமெண்டு களையெல்லாம் வெளியே தூக்கி வீசி ரகளை யில் ஈடுபட்டிருக்கின்றனர். அலுவலக ஊழி யர்களை அடித்தும் மிரட்டியும் வெளியேற்றி யுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையறிந்து இளவரசனின் ஆட்களும் அவரது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் அறக்கட்டளை வளாகத்திற்குள் திரண்டதால், அமைச்சரின் ஆட்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

மறுநாள் காலையில் அமைச்சரின் ஆதர வாளர்களான விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரும், டாக்டர் இளவரசன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் திரண்டதால் அறக்கட்டளையில் பதட்டம் தொற்றிக்கொண்டது. இதனால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரடெண்ட் தீபா சத்யா தலைமையில் காவல்துறையினர் குவிந்தனர்.

 

admk



இந்த தகவல் அமைச்சர் சம்பத்துக்கு தெரிவிக்கப்பட, ""சட்டமன்றம் முடிந்ததும் நேரில் வருகிறேன்'' என டாக்டர் இளவரசனிடம் அமைச்சர் சம்பத் கூறியதைத் தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களும் அறக்கட்டளை வளாகத்தைவிட்டு வெளியேறினார்கள். இதற்கிடையே, சம்பத் ஆட்களால் தாக்கப்பட்ட இளவரசனின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மங்களம்பேட்டை காவல்நிலையத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், தீபாசத்யாவின் உத்தரவின் பேரில் அந்த புகார் பதிவு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

 

rajini



அமைச்சரின் தூண்டுதலில் இந்த வில்லங்கம் நடந்திருப்பதாக கடலூர் மாவட்டம் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில், இது குறித்து டாக்டர் இளவரசனை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, எனது மகன் செந்திலின் பெயரில் இந்த அறக்கட்டளையை 2005-லிருந்து நடத்தி வருகிறேன். எனது கல்வி நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். கல்வியில் மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும்ங்கிறது அறக்கட்டளையின் நோக்கம். இதில் நான் சேர்மனாகவும் எனது மனைவி சந்திரவடிவு, மகன் செந்தில் உள்ளிட்டவர்கள் உறுப்பினராகவும் இருக்கிறோம். தற்போது எங்களது கல்வி நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய்.

அரசியலில் நீண்ட காலமாக நானும் இருப்பதால் சம்பத்தை ரொம்ப காலமாக தெரியும். அமைச்சர் ஆவதற்கு முன்பு சாதாரணமாக இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். நெருங்கிய நண்பர்தான். கல்வி நிறுவனங்களில் அடிக்கடி உதவி கேட்பார். அதனை செய்து கொடுப்பேன். இந்த சூழலில், பல ஆண்டுகளுக்கு முன்பு, தனது மைத்துனர் தங்கராசு, சகலை வைத்தியநாதன், வைத்தியின் மகன் பிரசன்னா மூவரும் கஷ்டப்படுவதாகச் சொல்லி, அவர்களுக்கு ஏதேனும் வேலைபோட்டு கொடுங்கள் என கேட்டார் சம்பத். நானும் போட்டுக்கொடுத்தேன். ஒரு கட்டத்தில் வேலைப் பளு காரணமாக அறக்கட்டளையில் சேர்த்துக்கொண்டேன்.


ரஜினி மன்றத்தில் நான் முழுமையாக ஈடு பட்ட சூழலில், அறக்கட்டளையை நான் கவனிக்காததை பயன்படுத்தி இதனை முழுமையாக கைப்பற்ற சம்பத்திடம் விவாதித்திருக்கிறார் தங்கராசு. அதன்படி சம்பத்தின் யோசனையின்படி, அவரது மகள் திவ்யாவும் மகன் பிரவீனும் அடிக்கடி அறக்கட்டளைக்கு வந்து போனார்கள். தெரிந்தவர்கள்தானே என நானும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் என்னால் நியமிக்கப்பட்ட அனை வரையும் நீக்கிவிட்டு அவர்களின் ஆட்களை நியமித்தனர். இதனையெல்லாம் கவனத்துக்கொண்டு வந்தார் என்னுடைய உதவியாளர் பன்னீர்செல்வம். இதன் பின்னணியை நான் ஆராய்ந்தபோது, அறக்கட்டளைக்கு சொந்தமான 100 கோடி சொத்தையும் அபகரிக்கவும் அறக்கட்டளையிலிருந்து என்னை விரட்டவும் அவர்கள் திட்டமிடுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இதனையடுத்து, சம்பத்தின் குடும்பத்தினரை நான் எச்சரிக்க, "இந்த சொத்து எங்களுக்கு வேண்டும். நாங்க கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு முழுமையா ஒப்படைச் சிட்டுப் போய்டு. இல்லைன்னா, வேறு மாதிரி நாங்க டீல் பண்ண வேண்டியதிருக்கும்' என என்னை பகிரங்கமாகவே மிரட்டினார் சம்பத்தின் மகள் திவ்யா. இதனால் எனக்கும் அந்த பொண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதனை சம்பத்திடம் நான் கூறியபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், எனது பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிவிடுவேன் என மிரட்டினார் தங்கராசு. "உடைச்சுப் பார்' என சவால் விட்டேன். இதனையும் சம்பத்திடம் சொன்ன போது, "பேசாம தங்கராசு சொல்றபடி நடந்துக்கோ. எதுக்குப் பிரச்சனை? உன்னுடைய நல்லதுக்குத்தான் சொல்றேன்' என கோபம் காட்டினார். இதனைத் தொடர்ந்து சம்பத் உள்பட அவரது குடும்பத்தினரிடம் பேசுவதை நிறுத்திக்கொண் டேன். அதேசமயம், உரசல்கள் இருந்துகொண்டே இருந்ததால், அறக்கட்டளையிலிருந்து அவர்களை நீக்குவதற்கான முயற்சியை நான் எடுப்பதையறிந்து, என்னை ஒழித்துக்கட்டுவதற்காக எனது அறையை முதலில் கைப்பற்ற நினைத்து அதனை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த முக்கிய டாக்குமெண்டுகளையெல்லாம் எடுத்துக் கொண்டனர் சம்பத்தின் அடி ஆட்கள்.

இதனையறிந்து ஓடோடி வந்த எனது உதவியாளர் பன்னீர்செல்வம், "எதற்கு இந்த அராஜகம் பண்றீங்க?' என கேள்வி கேட்க, அவரை அடித்து உதைத்தனர். தடுக்க வந்த கலியமூர்த்தி என்பவரையும் தாக்கியிருக்கிறார்கள். இதனை என்னிடம் பன்னீர்செல்வம் சொல்ல, போலீசில் புகார் கொடு என வலியுறுத்தியதை அடுத்து புகார் கொடுத்துள் ளார் பன்னீர். அதனை பதிவு செய்யாமல் வைத்திருக் கிறார்கள். இதற்கிடையே, என் மீது ஒரு பொய் புகார் கொடுத்து உள்ளே வைக்க முயற்சிகள் நடக்கிறது.

இந்த நிலையில், என்னை அடித்துவிட்டதாக செய்தி பரவியதையடுத்து, மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் 500 பேரும் எனது நலன்விரும்பிகள் 1000 பேரும் கல்வி வளாகத்துக்குள் திரண்டு வரவும் சம்பத்தின் ஆட்கள் இங்கு வருவதை போலீஸ் தடுத்துவிட்டது. அதேசமயம், இதனை யறிந்து என்னை தொடர்புகொண்ட அமைச்சர் சம்பத், "13-ந்தேதி நேரில் வருகிறேன். பேசி தீர்த்துக்கலாம்' என சொல்ல, ’"இதில் பேச என்ன இருக்கிறது? அறக்கட்டளையை விட்டு வெளியேறுங்கள். அது போதும் எனக்கு' என நான் கூற, "நேரில் வருகிறேன்' என சொல்லி தொடர்பை துண்டித்துக்கொண்டார் சம்பத். ஆட்சி அதிகார பலத்தையும் ஆள் பலத்தையும் வைத்து என்னுடைய 100 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார் சம்பத். இதற்கு உடந்தையாக செயல்படுகிறார்கள் அவரது குடும்பத்தினர். யாருடைய சொத்துக்களை எவர் அபகரிப்பது? மோதிப் பார்த்துவிடுவது என நானும் களத்தில் இறங்கியிருக்கிறேன்'' என்கிறார் மிக ஆவேசமாக டாக்டர் இளவரசன்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் சம்பத்திடம் நாம் கேட்ட போது, "அறக்கட்டளையில் இளவசரன் குடும்பத்தினர் 3 பேரும், எனது உறவினர் கள் 3 பேரும் உறுப்பினர்களாக இருக் கிறார்கள். அறக்கட்டளையை அவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடி யாது. எனது உறவினர்களுக்கும் சரிசம மான உரிமை இருக்கிறது. இளவரசன் தரப்பினரால் நிர்வாகக் குளறுபடிகள் நிறைய நடந்திருக்கிறது. அதனை சரி செய்யவே எனது உறவினர்கள் முயற்சித் தார்களே ஒழிய, யாரையும் மிரட்ட வில்லை; சொத்துக்களை அபகரிக்கவும் நினைக்கவில்லை. அறக்கட்டளை வில்லங் கங்களை கோர்ட் மூலம் தீர்த்துக்கொள்ள எங்களால் முடியும். அப்படிப்போனால், மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப் படுமே என அந்த முயற்சியை எடுக்க வில்லை. எனது புகழுக்கு களங்கம் ஏற் படுத்துவதற்காக எனக்கு எதிராக பொய் யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார் இளவரசன்'' என்கிறார் அழுத்தமாக.

இந்த நிலையில், நடந்ததை கேள்விப்பட்டு இளவசரனிடம் விசாரித்திருக்கிறார் ரஜினிகாந்த். அமைச்சரின் அடாவடிகளை விவரித்துள்ளார் இளவரசன். அப்போது, "நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் சொத்துக்களை யாரும் அபகரித்துவிட முடியாது. உங்களுக்கு நான் இருக்கிறேன்''’என நம்பிக்கை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதேசமயம், இந்த விவகாரத்தை அறிந்து சம்பத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரிக்க, நம்மிடம் பேசியதையே எடப்பாடியிடமும் சொல்லியிருக்கிறார் சம்பத். அமைச்சர் தரப்பும் இளவரசன் தரப்பும் வலிமையானதுதான் என்பதால் இரு தரப்பிலும் உறுமல் சத்தம் அதிகமாக இருக்கிறது.
 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.