Skip to main content

ரஜினி முதல்வர் வேட்பாளர்? ஓ.பி.எஸ். ஓ.கே. சசிகலா பிடி கொடுக்காவிட்டால்...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020
dddd

அரசியல் தொடர்பு! அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப் போகும் தேதி, பெங்களூரு விசிட், மன்ற நிர்வாகிகள் ஆலோசனை, பிறந்தநாள் விழா என ரஜினியை சுற்றும் பரபரப்பு தொடர்கிறது. உடல் நிலையைக் காரணம் காட்டித்தான் கொரோனா நேரத்தில் அரசியலுக்கு வரத் தயங்குவதாக ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால், தன் அண்ணன் சத்யநாராயணா மற்றும் குடும்பத்தாரிடம் அது குறித்து பேச, உடல்நலன் சீராக, திருவண்ணாமலையில் யாகம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

 

திருவண்ணாமலை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ சண்முகத்துக்கு ரஜினி தரப்பில் இருந்து யாகம் குறித்து தகவல் கூறப்பட்டதும், அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியரான ரமேஷ் மூலம் ஏற்பாடுகளை செய்தார் சண்முகம். கோயிலுக்குள் யாகம் நடத்த தற்போது அனுமதியில்லை என்பதால் முன்னோர்களுக்கு திதி தரும் ஐயங்குளம் எதிரேயுள்ள அருணகிரிநாதர் கோயிலில் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 9ந் தேதி மதியம் சத்தியநாராயணா, அவரது மகன் ராமு, மருமகள் சீத்தா லட்சுமி திருவண்ணாமலைக்கு வந்தனர். ரமணாஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம் எனச் சென்றவர்கள், டிசம்பர் 10ந்தேதி காலை அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். பின்னர் 10 சிவாச்சாரியர்கள் 1 மணி நேரம் நடத்திய மிருத்தியுஞ்ஜெய யாகத்தில் சத்தியநாராயணா குடும்பத்துடன் கலந்துக்கொண்டார்.

 

பின்னர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் பேசும்போது, ""திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவுங்களுக்கு இது இறுதிகாலம். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் அனுமதி கிடைத்ததும் கட்சி பதிவு செய்யப்படும்'' என்றார்.

 

dddd

 

இந்த யாகத்துக்கு பின்பு ரஜினி திருவண்ணாமலையில் போட்டியிடப்போகிறார் என்கிற தகவல்கள் தீயாய் பரவியது. இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் பேசியபோது, ""தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தெல்லாம் இன்னும் தலைவர் முடிவு செய்யவில்லை. கட்சி தொடங்கி, தனிப்பட்ட வலிமை, கூட்டணி வலிமை எல்லாவற்றையும் கணக்கிட்டுத் தான் செயல்படுவார். ஆனால் டெல்லியில் இருந்து அவரிடம் வேறுவிதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்கள்.

 

பா.ஜ.க.வை சேர்ந்த டெல்லியோடு தொடர்பில் உள்ள நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ""தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலங்கானாவில் காங்கிரஸ் காலி செய்யப்பட்டுவிட்டது. கர்நாடகா, கேரளாவில் ஓரளவு காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் அங்கும் இருக்காது. கேரளா, கர்நாடகாவைவிட தமிழகத்தில் செல்லாக்காசான காங்கிரசுக்கு உயிர் கொடுத்து வைத்திருப்பது தி.மு.க.வுடனான கூட்டணிதான். காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிடச் சொல்லி பலவிதங்களில் அழுத்தம் தந்தும் தி.மு.க. தலைமை அதனை ஏற்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் தென்னிந்தியாவில் காங்கிரஸை உயிர் பிழைக்க வைத்துவிடும். அது தேசிய அளவிலான பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணிக்கு வலு சேர்த்துவிடும். அதனால்தான் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம்.

 

dddd

 

தி.மு.க.வை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காகத்தான், கடந்த மாதம் வரை அரசியலுக்கு வரத் தயங்கிய ரஜினியை களத்துக்கு இழுத்து வருகிறோம். நக்கீரனில் ஏற்கனவே எழுதியபடி இந்த தேர்தல் களத்தை ஸ்டாலின் - ரஜினி என மாற்றவுள்ளோம். அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்திருந்தாலும், கூட்டணி சார்பில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக நிறுத்திட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஓ.கே. எடப்பாடி தயக்கம். சசிகலாவிடம் பேசப்பட்டு வருகிறது. பிடி கொடுக்காவிட்டால் வேறு வகையில் கையாள்வோம்'' என்றார்.

 

ரஜினி முதல்வர் வேட்பாளர் என்கிற திட்டத்தை அ.தி.மு.கவும் சசிகலாவும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இரண்டாவதாக மற்றொரு திட்டத்தை கையில் வைத்துள்ளது பா.ஜ.க.. அதாவது, பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்திக்கும். அந்த கூட்டணியில் ஒரு சில கட்சிகள் மட்டுமே இடம்பெறும். வடமாவட்டங்களில் மட்டும் ரஜினி தரப்பு கவனம் செலுத்துவதுடன், வடதமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ரஜினி போட்டியிடுவது பற்றியும் பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளதாம். வடதமிழகத்தில் தி.மு.க பலமாக இருப்பதால்தான் இத்தனை வியூகங்கள். அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள், தி.மு.க.வுக்கு பதில் ரஜினிக்கு போகும். இதன் மூலம் ஓட்டுகள் சிதறும். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது'' என்கிறார்கள்.

 

தேர்தல் திட்டமிடல், தேர்தல் செலவுகளை கவனிக்க தேசிய பா.ஜ.க.விற்குள் சாணக்கியன் என வர்ணிக்கப்படும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியாக உள்ள புபேந்தர் யாதவ்வை களமிறக்க ஆலோசிக்கிறது பா.ஜ.க. தலைமை. இவர் குஜராத், பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர். அவரை நியமிக்கும் பட்சத்தில் ஜனவரி இறுதியில் தமிழகம் வந்து வேலைகளை கவனிப்பார் என்றார்கள் பா.ஜ.க. தரப்பில்.

 


 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது