Skip to main content

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நதிநீர் இணைப்பிலேயே ரஜினி நிற்பது ஏன்?

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எனது அரசியல் நிலைப்பாட்டை முன்பே தெரிவித்துவிட்டேன்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. கமலுக்கு ஆதரவா என்று கேள்வி கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்” என்றார்.

 

Rajini angry speech on Cauvery Issue

 

இதனை அடுத்து பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும். நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்தேன். பாஜக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

 

இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை, மதவாதம், பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சனை ஆகிய பிரச்சனைகள்தான் இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பேசப்படுகின்றன. தமிழக அளவில் பார்த்தால் ஊழல், வேலைவாய்ப்பு, காவிரி, விவசாயிகள், ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சனைகள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. ஆனால், இந்த முக்கிய பிரச்சனைகளைத் தாண்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் இந்திய நதிகள் இணைப்பது என்ற திட்டத்தை ரஜினி வரவேற்றுள்ளார். பலர் இது ரஜினியின் கனவுத் திட்டம் என்றும் சொல்கின்றனர். ரஜினிக்கும் நதிகள் இணைப்புக்கும் உள்ள பிளாஸ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

 

கடந்த 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என பல தமிழக அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழக சினிமா பிரபலங்களும் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலையில் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். அந்தப்  போராட்டத்தில், அவர்கள் நமக்கு நீர் கொடுக்கும் வரை மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று அனைத்து பிரபலங்களும் தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த் மட்டும் கலந்துகொள்ளவில்லை. ரஜினிகாந்த்தை மேடையிலேயே பாரதிராஜா கடுமையாக சாடினார்.

 

நெய்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த்  காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். ரஜினி இவ்வாறு திடீரென போராட்டத்தை நடத்தியதால் பல பிரபலங்கள் நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாக போராட்டத்தை முடித்துவிட்டு பேசிய ரஜினி, “ இதுபோன்ற நீர் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது தேவையானது. அதுபோன்ற திட்டத்தை யார் கொண்டுவந்தாலும் என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் அளிக்கிறேன்” என்று கூறினார்.

 

இந்தியா முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டத்தை தன்னுடைய கனவு திட்டமாக கருதியவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். ரஜினியும் வாஜ்பாயிடம் நேரடியாக சென்று இந்த திட்டம் குறித்து பேசியும் இருந்தார். இந்த திட்டத்திற்கு பகீரத் என்றும் பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்துவிட்டு வந்தார். இதன் பின் இந்தத் திட்டத்தை யாரும் செயல்படுத்தும் நோக்கில் இல்லை. பலரும் ரஜினியிடம் ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னீர்களே இன்னும் தரவில்லை என்று தற்போதும் பலர் தங்களின் விமர்சனத்தை ரஜினியின் மீது வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், ரஜினி இன்று வரை இந்த திட்டத்தை நம்புகிறார் என்பது நேற்று அவர் கொடுத்த பேட்டியிலேயே தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் 'பூமராங்' படத்தில் இரண்டு கிராமங்களில் ஓடும் வெவ்வேறு நதிகளை இணைப்பது போன்று கதைக்களம் அமைத்து படம் எடுத்ததால் அந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து  பலரும் பல கோணத்தில் தங்களின் ஐடியாக்களை சொல்லிக்கொண்டு வருகின்றனர். பலரும் ரஜினியை போல இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நதிநீர் இணைப்பு இந்தியாவை வளமாக்கும் என்று ரஜினி தீர்க்கமாக நம்புகிறார். அதனால்தான் இன்றுவரை அது குறித்துப் பேசிவருகிறார்.  

 

 

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்