Skip to main content

தமிழகத்திற்கான 'ராஜஸ்தான் ஆபரேஷன்'! சிக்கப்போகும் திமுக, அதிமுக விஜபிக்கள்!!! கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
admk

 

 

ஆபரேஷன் ராஜஸ்தானை தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கு சச்சின் பைலட்டை பாஜக களம் இறக்கியது. சச்சின் பைலட்டிடம் 32 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வா என உத்தரவிட்டது. அவரால் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் இழுக்க முடியவில்லை. ஆனாலும் சச்சின் பைலட் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் பாஜக அவரை இயக்குகிறது. அசோக் கெலாட் ஒரு பலவீனமான தலைவர் என்கிற இமேஜை பாஜக நிறுவியிருக்கிறது. கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு ஆபரேஷன் ஆறு மாதத்திற்கு பிறகு பலன் அளித்தது. அதுபோல பாஜக ராஜஸ்தானில் ஒரு விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அதே ஆட்டம் தமிழகத்திலும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள். 

 

பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா தன்னை ஒரு பலம் மிக்க தலைவராக முன்னிறுத்தி, அமித்ஷாவிற்கு அடுத்தபடியாக கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு தமிழகத்தின்மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அவர் முதலில் வீழ்த்தியது சசிகலா புஷ்பா என்கிற அ.தி.மு.க. உறுப்பினரைதான். அவரை தமிழக பாஜக தலைவர்கள் மதிக்கவில்லை என்றாலும் ஜே.பி.நட்டாவின் ஆதரவில் அவருக்கு வேண்டப்பட்ட காரியங்கள் டெல்லியில் நடந்தேறி வருகின்றன.

 

முருகனை பாஜக தலைவராக்கியதும் ஜே.பி. நட்டாதான். அந்த முருகனிடம்தான் தமிழகத்திற்கான ராஜஸ்தான் ஆபரேஷனை ஒப்படைத்திருக்கிறார் என்கிற பாஜக தலைவர்கள். இந்த ராஜஸ்தான் ஆபரேஷனின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி ஜே.பி.நட்டா, முருகனுக்கு கொடுத்த கட்டளைகளையும் விவரிக்கிறார்கள்.

 

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை பலவீனப்படுத்தியதைப்போல தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், அடுத்த பத்து வருடத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளராக வரத் தகுதியுள்ள கனிமொழி அதிருப்தியில் இருக்கிறார்.

 

 

dmk

 

கனிமொழியின் அதிருப்தியை பயன்படுத்தி திமுகவை பலவீனப்படுத்த வேண்டும். ராஜஸ்தானைப் போலவே ஒரு வெயிட் அண்டு கேம் விளையாடி திமுக அதிகாரத்தில் வருவதை தடுக்க வேண்டும். அதற்காக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை பாஜகவிற்கு கொண்டுவர வேண்டும். அந்த வகையில்தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் பாஜகவிற்கு அழைத்து வரப்பட்டார்கள். மேலும் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றவர்களை வளைக்க காய் நகர்த்தப்படுகிறது.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை வாங்கி காங்கிரஸ் கட்சி திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி என்கிற இமேஜை பெற்றது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த இடத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது. அந்த பேரத்தில் அதிமுக கவிழ்த்துவிடும் என்கிற சிந்தனையும் இந்த ஆபரேஷன் ராஜஸ்தானில் இருக்கிறது. அதற்காக திமுக பிரமுகர்களைப் போலவே, அதிமுக விஜபிக்களை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

 

பாஜகவின் இந்த வலையில் அதிமுக அமைச்சர் ஒருவர் வீழ்ந்துவிட்டார், அவர் ராஜேந்திரபாலாஜி. அவருக்கு அடுத்தடுத்த நகர்வுகளில் ராஜ்ய சபா எம்.பி., மத்திய அமைச்சர் என ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. விரைவில் அவர் பாஜகவில் சங்கமமாவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திர பாலாஜியோடு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து பாஜகவுக்கு வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரஜினியோடு தொடர்பு வைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் என ஒரு படையையே அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் ஜே.பி.நட்டா.

 

இவையெல்லாம் இன்னமும் ஆரம்பகட்ட நிலையிலேயேதான் இருக்கிறது. பாஜகவின் இந்த ஆபரேஷன் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்காக ஒரு பெரிய வலையை வீசி அதில் சிக்கப்போகும் திமுக, அதிமுக விஜபிக்களை எதிர்நோக்கி பாஜக காத்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.