Skip to main content

எம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

raja kannapan political journey

 

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, போக்குவரத்துத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் மிகநீண்ட வரலாற்றைக் கொண்ட ராஜா கண்ணப்பன் எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் 1972 ஆம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். கட்சி பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்றிய இவர், படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர் ஆகியிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மறைவு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்திருந்தது. இதில் ஜெயலலிதா பக்கம் நின்ற ராஜகண்ணப்பன், 1989 தேர்தலில் ஜெ அணி சார்பாகத் திருப்பத்தூரில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். 

 

ஆட்சி கலைப்புக்குப் பின்னர் 1991 -ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பாகத் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஜெயலலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். மூன்று துறைகளையும் சிறப்பாகக் கையாண்டதோடு கட்சி பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டதற்காக ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றதோடு, 'கம்ப்யூட்டர் கண்ணப்பன்'  என ஜெயலலிதா அழைக்குமளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் கண்ணப்பன். அதன் பின்னர் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், அக்கட்சியிலிருந்து விலகிய இவர், 2000 ஆவது ஆண்டு மக்கள் தமிழ்த் தேசம் என்ற தனிக்கட்சியைத் துவக்கினார். இதற்காக இவர் 25 லட்சம் தொண்டர்களைக் கூட்டி சென்னையில் நடத்திய மாநாடு, அக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இவர், 2006 ஆம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்ற இவர், பிப்ரவரி 2009 -ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க -விலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் இவர் தோல்வியைத் தழுவினார். 

 

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும், 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை அதிமுக வென்றதில் முக்கிய பங்காற்றியவர் இவர். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்த்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவில் இணைத்தார். இவரது அரசியல் மீது நம்பிக்கை கொண்டு இந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தீவிர களப்பணி ஆற்றிய இவர், இத்தேர்தலில் 94784 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 1991 சட்டசபையில் அமைச்சராக அங்கம் வகித்த இவர் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.