Skip to main content

எம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

raja kannapan political journey

 

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, போக்குவரத்துத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் மிகநீண்ட வரலாற்றைக் கொண்ட ராஜா கண்ணப்பன் எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் 1972 ஆம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். கட்சி பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்றிய இவர், படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர் ஆகியிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மறைவு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்திருந்தது. இதில் ஜெயலலிதா பக்கம் நின்ற ராஜகண்ணப்பன், 1989 தேர்தலில் ஜெ அணி சார்பாகத் திருப்பத்தூரில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். 

 

ஆட்சி கலைப்புக்குப் பின்னர் 1991 -ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பாகத் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஜெயலலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். மூன்று துறைகளையும் சிறப்பாகக் கையாண்டதோடு கட்சி பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டதற்காக ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றதோடு, 'கம்ப்யூட்டர் கண்ணப்பன்'  என ஜெயலலிதா அழைக்குமளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் கண்ணப்பன். அதன் பின்னர் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், அக்கட்சியிலிருந்து விலகிய இவர், 2000 ஆவது ஆண்டு மக்கள் தமிழ்த் தேசம் என்ற தனிக்கட்சியைத் துவக்கினார். இதற்காக இவர் 25 லட்சம் தொண்டர்களைக் கூட்டி சென்னையில் நடத்திய மாநாடு, அக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இவர், 2006 ஆம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்ற இவர், பிப்ரவரி 2009 -ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க -விலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் இவர் தோல்வியைத் தழுவினார். 

 

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும், 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை அதிமுக வென்றதில் முக்கிய பங்காற்றியவர் இவர். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்த்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவில் இணைத்தார். இவரது அரசியல் மீது நம்பிக்கை கொண்டு இந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தீவிர களப்பணி ஆற்றிய இவர், இத்தேர்தலில் 94784 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 1991 சட்டசபையில் அமைச்சராக அங்கம் வகித்த இவர் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.