Skip to main content

"ராகுலின் தமிழக பேச்சே பாஜகவின் தீவிரத்துக்குக் காரணம்; எடப்பாடி எல்லோரும் ஓடி விடுவார்கள் என்ற பயத்தினால் இதை..." - மருத்துவர் காந்தராஜ்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

கர

 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அடிக்கடி வந்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் பாஜகவைச் சேர்ந்த பலர் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மோடி, அமித்ஷாவின் பயணங்கள் அதிகப்படியான கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்களின் பயணம் தேர்தல் அடிப்படையிலானதா என்பது குறித்து மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்ற நிலையில் அடுத்த நாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். இவர்களின் வருகையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் இருந்ததாகப் பரவலாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் பேசியதாகக் கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுதொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? 

 

தேர்தல் வரும் சமயத்தில் யார் வந்தாலும் இதைத்தான் கூறுவார்கள். சொந்தக்காரங்க வீட்டில் துக்க காரியத்துக்கு வந்தால் கூட கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழாமல் இருக்காது. அவர்களுக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைப் பரிசளித்து வரும் ஒரு இடம். ஆகையால் அவர்கள் இங்குத் தீவிரமாகக் கவனம் செலுத்தப் பார்க்கிறார்கள். இதனால் எப்படிப் போனால் யாரை வழிக்குக் கொண்டு வந்தால் வெற்றி வசப்படும் என்ற யோசனையிலிருந்து வருகிறார்கள். ஆகையால் தன்னால் ஆன சாம, பேத செயல்களை எல்லாம் செய்ய முயற்சி செய்கிறார்கள். 

 

அதையும் தாண்டி ராகுல்காந்தி சும்மா இல்லாமல் தமிழகத்தில் உங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார். அது அவர்களை வெகுவாக சீண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிக ஆக்ரோஷமாக ராகுல் பேசினார், உங்கள் ஜென்மத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்திருந்தார். அதைப் பொய்யாக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் கட்சியினருக்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அவர்கள் ஒவ்வொருவராகத் தமிழகம் வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்திலேயே அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் முடிவு என்ற ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

 

தமிழகம் வந்த பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேச எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முயன்றதாகவும், ஆனால் யாரையும் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது. அதிமுக எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இதில் நிறையக் கஷ்டத்தில் இருப்பவர் எடப்பாடி, அவருடைய நண்பர்கள் வீட்டில் அதிரடியான சோதனைகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சில சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் மலையளவு சொத்துக்களை வைத்திருந்தாலும் சிறிய கல் அளவு தற்போது கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அந்த சின்ன கல்லைப் பெயர்க்கும்போது பெரிய மலையே விழுந்துவிடும். அதனால்தான் சொல்கிறேன். எடப்பாடிக்குப் பெரிய சிக்கல் வர இருக்கிறது. இவர் பெரிய தலைவர்களைப் பார்ப்பதால்தான் எடப்பாடியிடம் உள்ள கூட்டமே அவரிடம் தொடர்ந்து இருக்கிறது. அந்த நம்பிக்கை போய்விட்டது என்றால் எடப்பாடியிடம் இருந்து அனைவரும் பிரிந்து வந்துவிடுவார்கள். 

 

அதனால்தான் எடப்பாடிக்கு மிகுந்த கஷ்டமான சூழ்நிலையாக தற்போது இருக்கிறது. தமிழகம் வரும் அவர்களைக் கட்டாயம் சந்தித்துப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. தான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடன் இருப்பவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் அவர்கள் சந்திக்க மறுத்தாலும் அவர்களைத் தேடி இவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பன்னீர் தரப்புக்கு அந்தத் தேவை இல்லை. ஒரு எம்பி இருந்தாலும் அதை வைத்துச் செய்ய வேண்டியதை அவர் செய்து கொள்கிறார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பன்னீர் தரப்பு செயல்படுவதால் அவர்களுக்கு உண்டான நெருக்கடி குறைந்துள்ளது.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.