Skip to main content

"தமிழ்நாடு பற்றி ராகுல்காந்தி சொன்ன அந்த வார்த்தை; பிரதமரின் இந்த நாடகத்துக்கு அதுதான் காரணம்..." - காந்தராஜ் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ரகத

 

கடந்த வாரம் வாரணாசியில் பிரதமர், இளையராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழை வளர்க்க பாஜக எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக சிலாகித்து வருகிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் இல்லாத நிலையில் இது தமிழை வளர்க்க நடத்தப்பட்ட விழாவா இல்லை பாஜக அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக நடத்தப்பட்ட விழாவா என்ற கேள்வியைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் மிகப் பிரபலமாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசிவருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

தமிழை வளர்க்க நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விழாவில் யார் யார் எல்லாம் கலந்துகொண்டார்கள். பிரதமர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா, உ.பி முதல்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? இளையராஜா தமிழர்தான். இவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திருவாசகம் பாடினாரே என்றால் அதெல்லாம் இப்போது அவருக்கு ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்ச் சமூகத்திலிருந்து நான்கு பேர் கூட தமிழ்நாட்டிலிருந்து வரவில்லையே ஏன்? இவர்கள் தமிழை எதற்காக வளர்க்கிறேன், வளர்க்கிறேன் எனக் கூக்குரல் இடுகிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது.

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி தமிழ்நாட்டில் எந்த குட்டிக்கரணம் போட்டாலும் உங்களால் வெற்றிபெற முடியாது என்று பாஜகவை பார்த்துக் கூறினார். இது அமித்ஷா மற்றும் மோடியின் பார்வைக்குச் சென்றதை அடுத்து அவர்கள் தமிழ்நாடு மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக மாதம் ஒருமுறை தமிழகம் வந்து ஆங்காங்கே விழாக்களில் பங்கெடுத்து தமிழ் உலகில் சிறந்த மொழி, மூத்த மொழின்னு கூறிவிட்டு ஒரு திருக்குறளை சொல்லிவிட்டு போறாங்க. நாங்களும் தமிழை காப்பாத்துறோம்ன்னு தற்போது இவர்கள் காசி தமிழ்ச் சங்கமம்னு நிகழ்ச்சி நடத்துறாங்க.

 

ஆனால் அதிலேயும் பாருங்க தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழ் மட்டும்தான் தமிழ், சங்கமம் கூட வட மொழிதான். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். தமிழை வளர்க்கப் போகிறேன், தமிழை வளர்க்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே எப்படி என்று இதுவரை ஏதேனும் கூறியிருக்கிறார்களா? அறிவியல் பூர்வமாகத் தமிழை வளர்ப்பேன் என்கிறார்களா இல்லை ஆன்மீக ரீதியாகத் தமிழை வளர்ப்பது பற்றிப் பேசுகிறார்களா என்று எதுவுமே இவர்கள் கூறுவது இல்லையே. அதைத்தானே நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தமிழை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளதாக நிறையப் பேர் பேசுகிறார்கள். அவருக்கு மிக்க நன்றி, ஆனால் அதை அவர் சொல்லியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம், மொழிபெயர்ப்புக்கு ஆவண செய்யலாம், தமிழை இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வுகளில் பயன்படுத்தலாம் என அறிவித்து அதை உறுதிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு வெறும் வாயில் முழம் போடக்கூடாது. ஆனால் அவர்கள் வாயில் மட்டுமே தமிழை வளர்ப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர்கள் வாயை வைத்துத்தான் இன்றைக்கு இந்த இடத்திற்கே வந்துள்ளார்கள்.


 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.