Skip to main content

ஆப்பு வைக்கிறாரா பப்பு?

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
rahul gandhi


காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற மரியாதைகூட இல்லாமல், ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டல் செய்வது பிரதமர் மோடிக்கு வழக்கம். அதாவது மோடி என்னவோ மிகப்பெரிய மேதை போலவும், நிர்வாகப்புலி போலவும், ராகுல் சின்னக் குழந்தை போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க மோடியும் பாஜகவினரும் முயற்சித்தனர்.
 

ஆனால், மோடியைப் போல கார்பரேட்டுகளின் வேலைக்காரராக இல்லாமல், மக்களுக்கான வேலைக்காரனாக தன்னை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருந்தார். இந்தியாவின் ஏழை எளிய மக்களோடு அவர் நின்றார். மோடியின் கோமாளித்தனங்களால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் சுகதுங்கங்களில் பங்கேற்பவராக இருந்தார்.
 

அற்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிப்பான் என்ற பழமொழிக்கு உதாரணமாக மோடி உலகநாடுகளை வலம்வரத் தொடங்கினார். பத்து லட்சம் ரூபாய்க்கு உடை அணியவும், ஒருமுறை பயன்படுத்திய உடையை மறுமுறை பயன்படுத்தாமலும் ஆடம்பரமாக வலம்வரத் தொடங்கினார். ராகுலோ, தனது முன்னோரைப் போல கதராடையுடன் எளிமையாக மக்களோடு உறவாடினார்.
 

மோடியின் நிர்வாகத்திறமை பல விஷயங்களில் பல்லிளித்துவிட்டது. அவருடைய முடிவுகளால் இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக பின்னடைவைச் சந்தித்தது. சிறு மற்றும் குறுந்தொழில்கள் நசிவடைந்து, கார்ப்பரேட்டுகளின் கை ஓங்கத் தொடங்கியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று பல வகைகளில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கையை சீரழித்து, அம்பானி, அதானி உள்ளிட்ட பெருமுதாலாளிகளின் பாக்கெட்டுகளை நிறைத்தது.
 

விவசாயிகளையும், விவசாயத்தையும்கூட மோடி கருத்தில் கொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்சனையை பேசியே ஆட்சிக்கு வந்த மோடி, விவசாயக் கடன் தள்ளுபடிக் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தார். போராடிய விவசாயிகள் நாடுமுழுவதும் பைத்தியக்காரர்களைப் போல நடத்தப்பட்டனர். ம.பி.யிலும், ராஜஸ்தானிலும், உ.பி.யிலும் கேவலமாக ஒடுக்கப்பட்டனர். ஒரு பைசா கடன் தள்ளுபடி என்ற கேவலமான நிகழ்வுகளும் நடந்தேறின.
 

மக்களின் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி சாமியார்களுக்கும், அகோரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மக்களை மத அடிப்படையில் பிரித்தாளும் முயற்சிகளை பாஜக தீவிரப்படுத்தியது. மாடுகளைக் காட்டிலும் மனிதர்கள் கேவலமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.
 

கடந்த நான்கரை ஆண்டு மோடி அரசாங்கத்தின் ஆகப்பெரிய நிர்வாகம் என்பது சாமானிய மக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாத்தித்ததுதான். அதற்கான விலையைத்தான் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்கள் இப்போது கொடுத்திருக்கின்றன.
 

மோடியால் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்தி, மோடிக்கு வைத்த ஆப்பாகவே இந்த தேர்தல் முடிவுகளை பார்க்க வேண்டும்.

 

 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.