Skip to main content

ராகுல் ராஜினாமா கோழைத்தனமா?

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது நிச்சயமாக கோழைத்தனம் இல்லை. இது காங்கிரஸுக்கு நல்லதே செய்யும். அதுமட்டுமின்றி, ராகுலின் இமைஜை அதிகரிக்கவும், மோடிக்கு சிக்கலையும் ஏற்படுத்த ராகுலின் இந்த பிடிவாதம் உதவும்.
 

rahul gandhi


ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது தவறு என்று அந்தக் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிக்குள்ளும் கருத்துகள் இருந்தாலும், தனது முடிவில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார்.

அதேசமயம், புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திடம் இருந்து விடுவிக்கும் முயற்சியாகவே ராகுலின் முடிவை கருத வேண்டும். ஆனால், நேரு குடும்பத்தை அட்டாக் செய்யாமல் மோடி தனது சாதனைகளை சொல்லி ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில்கூட, காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவே காரணம் என்று அமித் ஷாவும் கூறியிருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்கும் முயற்சியில் நேருவின் பேச்சைக் கேட்காமல் முடிவெடுத்தது பட்டேல். அந்த முயற்சியில், பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை தனதுவசம் வைத்துக்கொண்டது.

1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியப் படைகள் பாகிஸ்தானை விரட்டி அடித்தபோதும், சர்வதேச தலையீட்டின்படி, அவரவர் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முடிவாக இருந்தது.
 

rahul gandhi


அதாவது, காஷ்மீர் இன்றுவரை சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதியாகவே இரு நாடுகளிடமும் நீடிக்கிறது. அந்தச் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கத் துடிப்பது பாஜக. அப்படி அந்த சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 பிரிவை நீக்கினால், காஷ்மீர் இந்தியாவோடு இருக்காது என்று பரூக் அப்துல்லா பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

அவரை இந்திய அரசியல் சட்டப்படி தேசத்துரோக குற்றத்தில் கைது செய்யமுடியாது என்பதே இன்றைய எதார்த்தம். அப்படி இருக்கும்போது எதற்கெடுத்தாலும் நேரு குடும்பத்தையும், இந்திரா குடும்பத்தையும் குறைகூறியே தங்கள் அரசியலை நடத்தும் மோடி இனி யாரை குறைகூறுவார்?
 

rahul gandhi


இனியும் நேரு குடும்பத்தைத்தான் மோடி குறைகூறுவார். காங்கிரஸின் தலைவராக யார் வந்தாலும், அவர்களை நேரு குடும்பத்தின் பொம்மைத் தலைவர்களாகத்தான் மோடி கூறுவார். மன்மோகன் சிங்கையும் பாஜக அப்படித்தான் அழைத்தது. இனி யார் வந்தாலும் அவர்களையும் அப்படித்தான் அழைக்கப் போகிறது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மோடி அரசுக்கு எதிராக மக்களை திரட்டவும் ராகுல் தொடர்ந்து ஏதேனும் செய்தே ஆகவேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கட்சிப்பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்த நிலையில் ராகுல் மக்களிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். மக்களைச் சந்திக்கும் தலைவர்கள் என்றுமே தோற்றதில்லை. ராகுல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும். மோடியே அந்த நிலையை உருவாக்குவார் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

 

 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.