Skip to main content

ராகுல் ராஜினாமா கோழைத்தனமா?

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது நிச்சயமாக கோழைத்தனம் இல்லை. இது காங்கிரஸுக்கு நல்லதே செய்யும். அதுமட்டுமின்றி, ராகுலின் இமைஜை அதிகரிக்கவும், மோடிக்கு சிக்கலையும் ஏற்படுத்த ராகுலின் இந்த பிடிவாதம் உதவும்.
 

rahul gandhi


ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது தவறு என்று அந்தக் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிக்குள்ளும் கருத்துகள் இருந்தாலும், தனது முடிவில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார்.

அதேசமயம், புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திடம் இருந்து விடுவிக்கும் முயற்சியாகவே ராகுலின் முடிவை கருத வேண்டும். ஆனால், நேரு குடும்பத்தை அட்டாக் செய்யாமல் மோடி தனது சாதனைகளை சொல்லி ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில்கூட, காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவே காரணம் என்று அமித் ஷாவும் கூறியிருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்கும் முயற்சியில் நேருவின் பேச்சைக் கேட்காமல் முடிவெடுத்தது பட்டேல். அந்த முயற்சியில், பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை தனதுவசம் வைத்துக்கொண்டது.

1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியப் படைகள் பாகிஸ்தானை விரட்டி அடித்தபோதும், சர்வதேச தலையீட்டின்படி, அவரவர் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முடிவாக இருந்தது.
 

rahul gandhi


அதாவது, காஷ்மீர் இன்றுவரை சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதியாகவே இரு நாடுகளிடமும் நீடிக்கிறது. அந்தச் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கத் துடிப்பது பாஜக. அப்படி அந்த சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 பிரிவை நீக்கினால், காஷ்மீர் இந்தியாவோடு இருக்காது என்று பரூக் அப்துல்லா பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

அவரை இந்திய அரசியல் சட்டப்படி தேசத்துரோக குற்றத்தில் கைது செய்யமுடியாது என்பதே இன்றைய எதார்த்தம். அப்படி இருக்கும்போது எதற்கெடுத்தாலும் நேரு குடும்பத்தையும், இந்திரா குடும்பத்தையும் குறைகூறியே தங்கள் அரசியலை நடத்தும் மோடி இனி யாரை குறைகூறுவார்?
 

rahul gandhi


இனியும் நேரு குடும்பத்தைத்தான் மோடி குறைகூறுவார். காங்கிரஸின் தலைவராக யார் வந்தாலும், அவர்களை நேரு குடும்பத்தின் பொம்மைத் தலைவர்களாகத்தான் மோடி கூறுவார். மன்மோகன் சிங்கையும் பாஜக அப்படித்தான் அழைத்தது. இனி யார் வந்தாலும் அவர்களையும் அப்படித்தான் அழைக்கப் போகிறது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மோடி அரசுக்கு எதிராக மக்களை திரட்டவும் ராகுல் தொடர்ந்து ஏதேனும் செய்தே ஆகவேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கட்சிப்பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்த நிலையில் ராகுல் மக்களிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். மக்களைச் சந்திக்கும் தலைவர்கள் என்றுமே தோற்றதில்லை. ராகுல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும். மோடியே அந்த நிலையை உருவாக்குவார் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.