Skip to main content

ஏழைகளுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும்? ராகுல் - ரகுராம் ராஜன் உரையாடல் முழு விவரம்

Published on 30/04/2020 | Edited on 30/04/2020



 

Rahul Gandhi - Raghuram Rajan



அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பிரபல பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் வீடியோ காலில் உரையாடினார்.
 

ராகுல்: வணக்கம்.
 

ரகுராம்: வணக்கம். நலமா?
 

ராகுல்: நான் நலம். உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 

ரகுராம்: நானும்தான்.

ராகுல்: பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி என்பதே மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. அல்லது மீட்டெடுக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன?
 

ரகுராம்: ஊரடங்குக்கு பின்னேயும் மக்கள் சமூக விலகலை எப்படி கடைபிடிப்பார்கள். வேலை செய்யும் இடங்களில் போக்குவரத்தில் எப்படி சமூக விலகல் சாத்தியமாகும். பொதுப் போக்குவரத்தாக இருந்தால், சமூக விலகல் எப்படி சாத்தியமாகும்.?  
 

ராகுல்: அதைத்தான் பெரும்பாலான மக்கள் சொல்கிறார்கள். சுழற்சி முறையில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு மறுபடியும் முழு ஊரடங்கை அறிவித்தால், அது பொருளாதார நடவடிக்கைகளில் பேரழிவைத்தான் உருவாக்கும்.  
 

ரகுராம்:   இரண்டாவது முறை ஊரடங்கை அமல்படுத்தினால், முதல் முறை வெற்றி பெறவில்லை என்றுதான் அர்த்தம். எனவே மூன்றாவது ஊரடங்கை பிறப்பித்தால், அது நம்பகத்தன்மையை குறைக்கும்.  முற்றிலும் நோய் தொற்றை ஒழித்துவிட முடியாது. ஊரடங்கின்போது இருந்த நோய் தொற்றையாவது நாம் தடுக்க வேண்டும்.
 

ராகுல்: அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அதிகபட்ச பரிசோதனை வசதிகள் நம்மிடம் இல்லை. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 

ரகுராம்:   அமெரிக்காவில் தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனைகளை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பரிசோதனைகளை செய்யும் நடவடிக்கையில் அமெரிக்காவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகள் நடக்கின்றன. இதனை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.  
 

ராகுல்: விவசாயத்துறை, தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர்களது நிதி நிலை குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?
 

ரகுராம்: இந்த நேரத்தில் நேரடி பணி பரிவர்த்தனை நடவடிக்கையை அவசியம். அனைத்து வகை உதவித் தொகை பெறுவோர், வேலையில்லாதோர், வாழ வழியில்லாதோருக்கு அடுத்த 4 மாதங்களுக்கு நாம் நிதியுதவி செய்து ஆதரவளிக்க வேண்டும். பண உதவியோடு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் உணவும் வழங்க வேண்டும்.
 

ராகுல்: ராஜன், ஏழைகளுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும்?
 

ரகுராம் ராஜன்: தோராயமாக 65 ஆயிரம் கோடி தேவைப்படும். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி 200 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் 65 ஆயிரம் கோடி ரூபாய் பெரிய தொகை அல்ல. ஏழைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
 

ராகுல் : அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது பிரச்சனை என்று  நினைக்கிறீர்களா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்ததால், உரையாடல் நின்றுபோனது. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரையாடல்தான் உதவிகரமாக இருக்கும். 
 

ரகுராம்: அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற முக்கியத்தை நானும் நம்புகின்றேன். மக்களுக்கு அதிகாரம் தரப்பட வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துகளுக்கும், மாநில அரசுகளுக்கும் குறைந்த அளவிலான அதிகாரமே உள்ளது. உங்களிடம் நான் அதே கேள்வியை கேட்க விரும்புகின்றேன். பஞ்சாயத்து ராஜை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மாற்றங்களும் பலனும் என்ன?

ராகுல்: பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்வேறு முற்போக்கு இயங்கங்கள் பஞ்சாயத்து ராஜில் பங்கேற்றன. ஆனால், மீண்டும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் அதிகாரிகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக அதனை நகர்த்திவிட்டோம். இவ்வாறு பின்வாங்கியதற்காக நான் வருந்துகின்றேன்.  தென் மாநிலங்களைப் பார்த்தீர்களேயானால், அதிகாரத்தை பரவலாக்கியதால் நன்கு செயலாற்றியிருக்கிறார்கள். வடமாநிலங்களில் ஒரே இடத்தில் அதிகார குவியல் இருப்பதால், பஞ்சாயத்து ராஜ் மற்றும் அதன் ஆணிவேர் அமைப்புகளின் அதிகாரத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள். 


ரகுராம் : நான் ஏன் அதிகாரம் கொண்டவராக இருக்கக் கூடாது என்ற எண்ணமே மேலாங்கி இருக்கிறது. அதிகார குவியலே அவர்களது ஆசையாக இருக்கிறது. மாநிலங்களுக்கு நிதி கொடுத்தால், அதை மாநில அரசுகள் மதித்து பெற வேண்டும். நிதி தராவிட்டால், மாநில அரசுகள் கேள்வி எழுப்பக் கூடாது என்ற என்ற நிலையே உள்ளது. 

ராகுல்: அடிப்படை கட்டமைப்பு மக்களை இணைக்கிறது என்றும், அது அவர்களுக்கு வாய்ப்பு தருகிறது என்றும் நீங்கள் கூறுவது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பிரிவினையும், வெறுப்புணர்வும் மக்களை துண்டித்துவிட்டது. பிரிவினை கட்டமைப்பும், வெறுப்புணர்வு கட்டமைப்பும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

ரகுராம் : நிச்சயமாக. சமூக நல்லிணக்கம் மிகவும் அவசியம். நாம் இந்த கட்டமைப்பில் ஒரு பகுதி என்றும், கட்டமைப்பில் சரிசமமாக பங்கேற்பது அவசியம் என்றும் ஒவ்வொருவரும் எண்ணவேண்டும். தற்போது நமது சவால்கள் பெரிதாக உள்ளன. நம் நாட்டை கட்டமைத்த தேசத் தந்தைகள், அரசியல் சாசனத்தை எழுதியவர்கள், ஆரம்ப கால அதிகாரிகள்  ஆகியோரிடம் இருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள நேரத்தை ஒதுக்க வேண்டும். சிலர் பிரச்சனைகளை அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு தொடாமல் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த பிரச்சனைகள் வரும்போது, அவற்றை எதிர்த்துப் போராட ஒவ்வொருவரும் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறோம்.

ராகுல் :  பொருளாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம், உணர்வை பகிர்ந்தோம் மற்றும் அதன் மீது நம்பிக்கை வைத்தோம் என்று நினைக்கும் போதும் ஆச்சர்யமடைகிறேன். நம்பிக்கை வைப்பதுதான் உண்மையான பிரச்சனை என்பதை கரோனா பிரச்சனையின்போது நான் கண்டறிந்தேன். இந்த பிரச்சனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என மக்களுக்கு தெரியவில்லை. நமது அமைப்பின் மீதே மக்களுக்கு பயம் வந்துவிட்டது. வேலை வாய்ப்பின்மையை நீங்கள் பேச வேண்டும். நாம் பெரிய அளவில் அதிகபட்ச வேலையின்மையை சந்தித்து வருகிறோம். இது இன்னும் பெருமளவு அதிகரிக்கவுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வேலையின்மை எந்த அளவுக்கு போகும், எந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்?
 

ரகுராம் : வேலையின்மை எண்ணிக்கை நிச்சயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில், கரோனா பாதிப்பால் மேலும் 10 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும், 6 கோடி பேர் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரம் சரி என்றோ தவறு என்றோ விவாதம் எழுந்தாலும், இந்த தரவுகள்தான் தற்போது நம்மிடம் உள்ளன. தற்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வேலை இழந்தவர்களுக்கு விரைந்து வேலை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.  
 

ராகுல் காந்தி:   பிரச்சனைகளின் அளவுகோல் மற்றும் சமமற்ற நிலை. சாதி போன்ற கட்டமைப்புகளால் அமெரிக்காவிலிருந்து இந்தியா முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா? நம் நாட்டில் ஏராளமான சமுதாய மாற்றம் தேவைப்படுகிறது. சமுதாய மாற்றம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடுகிறது. அரசியல், கலாச்சாரம், தமிழ் மொழி என தமிழ்நாடு மாறுபட்டிருக்கிறது. தமிழ் மக்களின் சிந்தனையும், உத்தரப்பிரதேச மக்களின் சிந்தனையும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. எனவே, இவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் திட்டங்களைத்தான் வகுக்க வேண்டும். ஒரு தீர்வு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் எடுபடாது.
 

ரகுராம்: அடித்தளத்தையே நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாம் வழிவகை செய்ய வேண்டும். 
 

ராகுல்: நல்லது, நன்றி, நன்றி. டாக்டர்.ராஜன்.
 

ரகுராம்: மிக்க நன்றி. உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் மகிழ்ச்சியாக இருந்தது.
 

ராகுல்: பாதுகாப்பாக இருங்கள்.
 

ரகுராம்; நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நல்லதே நடக்கும். 
 

நன்றி, வணக்கம்.
 

 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.