Skip to main content

ரபேலில் ஊழல்... சின்ன புள்ள கூட நம்பாதுங்க... ஜோதிமணி சிறப்பு பேட்டி

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

rafale



ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் பொய் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த சூழ்நிலையிலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது. திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.
 

நாட்டினுடைய பொருளாதார சூழல் மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது. 91க்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ, அந்த மாதிரியான சூழலில் இன்று இந்திய பொருளாதார சூழல் உள்ளது. இந்த மாதிரி சிக்கலான நேரத்தில் ஒரு நிதியமைச்சராக இருப்பவர், பிளாக் எழுதுவது, டிவிட் போடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
 

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் கம்பெனியுடன் காங்கிரஸ் அரசாங்கம் 2012ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம்போட முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய். இந்திய ராணுவம் 126 விமானம் வேண்டும் என்று கேட்கிறது. 126 விமானத்தையும் வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படுகிறது. அதில் 18 விமானங்களை அவர்கள் கொடுப்பார்கள்.

 

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் அரசு நிறுவனம். 70 வருடமாக இந்த நிறுவனத்திற்கு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது, விமானம் கட்டுவதில் முன்அனுபவம் உள்ளது. ஆகையால் மற்ற விமானங்களுக்கான டெக்னாலஜிகளையும் இங்கே கொடுப்பார்கள். இங்கு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் அந்த டெக்னாலஜிக்களை பயன்படுத்தி விமானங்களை உருவாக்குவார்கள்.
 

மேலும் அடுத்த தலைமுறைக்கான விமானங்களையும் தாங்களே உருவாக்குவோம் என்று இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் சொல்லுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு அந்த டெக்னாலஜி வேண்டும், இந்தியா வளர வேண்டும், மேலும் விமானம் தயாரிப்பதற்கான லைசென்ஸ்சையும் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக இதனை சொல்லுகிறது.
 

எத்தனை விமானங்களை பிரான்ஸ் விற்பனை செய்கிறதோ, அத்தனை விமானங்களையும் வாழ்நாள் முழுவதும் அவர்களே பராமரிக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் உள்ளது. இது அத்தனையும் ஒப்புக்கொண்டுதான் பிரான்ஸ் அரசாங்கம் இந்தியாவுக்கு விமானங்களை விற்க முடிவு செய்தன. 

 

Jothimani



2007ல் ஆரம்பித்த இந்த ஒப்பந்த பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விமானம் வாங்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. அதற்கு நிறைய செயல்முறைகள் உள்ளது. ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி, விலை பேச்சுவார்த்தை கமிட்டி, பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு என இந்த மூன்று கமிட்டி மூலமாகத்தான் போக முடியும். இவையெல்லாம் முடிந்த பின்னர் மோடி அரசு பதவியேற்கிறது. இதனால் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. 
 

ஆட்சி மாறலாம், நாடு ஒன்றுதானே, விமானப்படை ஒன்றுதானே, ஒரு அரசாங்கம் செய்ததை அடுத்த அரசு வந்தால் அதனை அப்படியே தொடரவேண்யதுதானே. அதுபோன்று நடக்காமல் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்தை போடுகிறார்கள்.
 

ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி, விலை பேச்சுவார்த்தை கமிட்டி, பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு என இந்த மூன்று கமிட்டி மூலமாகத்தான் போக முடியும். இதனைத் தவிர்த்துவிட்டு, எதனையும் செயல்படுத்தால் புதிய ஒப்பந்த்தை பிரதமர் மோடி போடுகிறார். இதுதான் ஊழலுக்கு ஆரம்பம்.
 

பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு விமானத்தின் விலை ரூபாய் 1670 கோடி. ஏறக்குறைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாங்க நினைத்ததோடு பார்த்தால் மூன்று மடங்கு அதிகம். டெக்னாலஜி டிரான்ஸர் கிடையாது. வாழ்நாள் பராமரிப்பு கிடையாது.
 

காங்கிரஸ் ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ் நிறுவனம் விமானத்திற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பராமரிப்பு பண்ண வேண்டும். ஆனால் மோடி அரசு அனில் அம்பானி கம்பெனிக்கு பராமரிப்புக்காக ஒரு லட்சம் கோடி கொடுப்பதாக உள்ளது.
 

இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்திற்கு பதில் அனில் அம்பானி நிறுவனத்திற்கு கொடுக்கின்றனர். மோடி அரசாங்கம் பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போடும் பத்து நாட்களுக்கு முன்புதான் அனில் அம்பானி நிறுவனம் உருவாகிறது.
 

இதற்கு முன்பு அனில் அம்பானியின் நிறுவனம் பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட எந்த ஒரு ராணுவ தளவாடத்தையும், விமானத்தையும் தயாரிக்காத நிறுவனம் என்பதோடு மட்டுமல்ல, 40 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு வங்கிகளில் கடன் வைத்திருக்கிற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த விவகாரத்தில் ஒரு நிறுவனத்திற்கு கான்ராக்ட் கொடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குறைந்தது மூன்று வருடம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்கான ஆடிட் ரிப்போர்ட் இருக்க வேண்டும். 10 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு நிறுவனத்திற்கு மூன்று வருடத்திற்காக ஆடிட் எப்படி தயாராக இருக்க முடியும்.
 

காங்கிரஸ் அரசு இருந்தபோது இந்த ஒப்பந்ததை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதைப்போன்றே இப்போது வெளியிடுங்கள் என்று ராகுல் காந்தி கேட்டார். ஆனால் தற்போதைய மோடி அரசு அதனை வெளியிட முடியாது என்கிறது.
 

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும் படி கூறியது இந்தியாதான் என்று கூறியுள்ளார்.
 

விமானத்தின் விலையை ரகசியம் என்று சொன்னது மோடி அரசாங்கம், ஆனால் டசால்ட் ஏவியேசன் நிறுவனமும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் தங்களது இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறது. அப்படி ரகசியம் என்று சொன்ன விலையை இந்த இரு நிறுவனங்களும் எப்படி வெளியிட முடியும். ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று சொன்னால் சின்ன புள்ள கூட நம்பாது.

 

Jothimani


ஊழல் நடந்தது மட்டும் அல்ல, இதில் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டிருக்கிறார். சவப்பெட்டியில் இருந்து போர் விமானம் வரை ஊழல் செய்ய பாஜக முன்னேறியுள்ளது. 126 விமானங்களை ராணுவம் கேட்கிறது. ஆனால் 36 விமானங்களைத்தான் வாங்கி தருவதாக அரசு சொல்கிறது. இது பாதுகாப்புத்துறையை சமரசம் பண்ணுவதாக ஆகாதா?.
 

ஒரு தேசத்தின் பாதுகாப்பையே சமரசம் பண்ணி, ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே அழித்து, ஒரு தனி நபரை முன்னுறுத்தி ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் பண்ணிய பணம் அம்பானிக்கு மட்டும் போகுதா?. பாதுகாப்புத்துறை அமைச்சர் இருக்கிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி, எல்லாவிதமான விதிகளையும் மீறி, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்துவிட்டு ஏன் மோடி இதனை செய்கிறார்?.
 

ரபேல் பிரச்சனையை அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது. யாரும் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது, ராகுல் காந்தி பேசுகிறார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பியபோதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.

 

 


 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.