Skip to main content

பாஜகவைப்போல் காங்கிரஸ் செய்திருக்க வேண்டும்... முத்தரசன்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். 

 

rahul-mutharasan


பாஜக கூட்டணி அகில இந்திய அளவில் 300க்கும் அதிகமான இடங்களை பெற்றுள்ளது பற்றி...
 

நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முற்றிலுமாக விதி விலக்காக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மோடியும் வேண்டாம், எடிப்பாடியும் வேண்டாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணிக்கு நல்ல தீர்ப்பு வழங்கியதற்காக தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
 

வட மாநிலங்களில் மோடியின் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மத ரீதியாக பல பிரச்சனைகள் உருவானது. அது எல்லோருக்கும் தெரியும். வாக்கு வங்கியை கருத்தில் கொண்டுதான் இந்த பணியை மேற்கொண்டார்கள். வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு அதிகமாக பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு பேசினார்கள். 
 

கடந்த காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம் என்று நாடு தழுவிய அளவில் இரண்டு முறை முழங்கியிருக்கிறோம். அந்த முழக்கம் இன்றைக்கு மேலும் தேவைப்படுகிறது. 
 

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதே...
 

காங்கிரஸ் கட்சி மாநில அளவில் கூட்டணியை உருவாக்குவதில் அது காட்டிய முனைப்பு போதுமானதல்ல. கூட்டணி வைப்பதில் பாஜக எப்படி ஈடுபட்டதோ, அதைப்போன்று காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த பணிகளில் காங்கிரஸ் ஈடுபடவில்லை. அதன் விளைவு இன்று பாஜக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
 

எதிர்காலத்தில் பாஜக அரசை எதிர்த்து மிகத் தீவிரமாக போராட வேண்டிய நிலைமைகள்தான் வரும். கடந்த காலங்களில் பாஜக அரசு அப்படித்தான் நடந்து கொண்டது. இப்போது இன்னும் தொழிலாளர்களுக்கு எதிராக, சாமானியர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு வழிகளில் பாஜக அரசு ஈடுபடும். அதனை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும். 

 

இரண்டு தலைவர்கள் இல்லாத நேரத்தில் நடந்த தேர்தலில் திமுக, அதிமுகவின் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
 

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சிக்கான தலைமை உருவாகவில்லை. அக்கட்சியில் அமைப்பாளர்கள் இரண்டு பேர். பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது போல் இரண்டு பேரும் கையெழுத்துப்போட்டால்தான் அக்கட்சியில் எந்த முடிவும் எடுப்பதுபோல் உள்ளது. அக்கட்சியில் ஒரு தலைமையை உருவாக்குவதற்கு, ஒரு தலைமையை தேர்வு செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படி தேர்வு செய்வதற்குக்கூட அவர்களுக்கு நெருக்கடி இருப்பதுபோலத்தான் தெரிகிறது. 
 

திமுகவில் கலைஞர் மறைவுக்குப் பிறகு மிக சுமூகமான முறையில் அக்கட்சி பொதுக்குழுவை நடத்தியது.  ஒருமனதாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தது, அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தது,  கூட்டணிக்காக அவர் குரல் கொடுத்தது, திமுகவோடு கூட்டணிக் கட்சிகளையும் வெற்றி பெற வைத்துள்ளார். திமுகவுக்கு தலைமை தாங்க மு.க.ஸ்டாலினுக்கு தகுதி உள்ளது என்பது மட்டுமல்ல. இந்திய அளவில் அவர் மிகப்பெரிய தலைவராகியிருக்கிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.