Skip to main content

"திருக்குறளில் கடவுள் பற்றிய கருத்துக்கள் இருந்தாலும்.." - வள்ளுவரை விவரிக்கும் புலவர் ப.வீரமணி

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருக்குறள் தொடர்பாகவும், திருவள்ளுவர் தொடர்பாகவும் புலவர் ப.வீரமணி அவர்கள் நம்மோடு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துக்கள் பின்வருமாறு,

கடந்த சில நாட்களாக திருக்குறள் பற்றிய சர்ச்சைகள் அதிகம் எழுவதை பார்த்திருப்பீர்கள். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர் தான். கடவுள் வாழ்த்தை எழுதியவரும் கூட. அப்படியிருந்தும் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களுக்கானவராக திருவள்ளுவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

திருக்குறளில் கடவுள் பற்றி சில இடங்களில் கூறப்பட்டுள்ளது உண்மை. புராணக் கருத்துக்களும் சில இடங்களில் சொல்லப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அதை வைத்து மட்டும் அவர் கடவுளை பற்றிதான் அதிகம் பேசினார் என்பது தவறான ஒன்று. அவர் எந்த தனிப்பட்ட கடவுளை பற்றியும் அவர் பேசவில்லை. அவரை தங்கள் பக்கம் திரிக்க நினைப்பவர்கள் அவர் இவ்வாறு சொன்னார், என்று தங்களுக்கு சாதகமானவற்றை சொல்கிறார்கள். பல திருக்குறள்களில் பண்பு நலன்களை வைத்துத்தான் அவர் கருத்தை தெரிவிக்கிறாரே அன்றி எந்த தனிப்பட்ட கடவுளை பற்றியும் அவர் பேசவில்லை. அதில் அவரின் பொதுமை பண்பை நாம் காணலாம்.

ஆனால் மூவாயிரம் வருங்களுக்கு முன்பு எந்த கடவுள் இருந்தது, எந்த மதம் இருந்தது என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறதே?

அவருடைய காலத்தில் சமணம் இருந்தது, பௌத்தம் இருந்தது. இதர சமயங்கள் எல்லாம் அதற்கு பிறகு வந்தது. ஆதிகாலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதன் எப்போது இயற்கைக்கு பயந்தானோ அப்போது இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. இறை நம்பிக்கை இருப்பதாக திருவள்ளுவர் நம்பினரே அன்றி, அவர் ஒரு சமயத்தை சார்ந்தவர் என்று எப்போதும் அவர் நினைக்கவில்லை. ஆனால் தற்போது அதனை பொய்யாக்க முயற்சி செய்கிறார்கள்.
 

hh



இறை நம்பிக்கை உடையவர்களாக திராவிடர்கள் இருந்தார்கள் என்றால் அதனை பெரியாரிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்வார்களா? பெரியார் ஏற்றுக்கொண்டாரா? அங்கு நீங்கள் முரண் படுவதாக தெரிகிறதே?

பெரியாருக்கு அதில் கருத்து வேறுபாடு உண்டு. வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார், திருக்குறளில் சமய கருத்துக்கள் கூட சில இடங்களில் வருகிறது. அது ரொம்ப சிறும்பான்மை கருத்தாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் வருகிறது. மீதி 98 சதவீதம் திருவள்ளுவர் சமூதாயத்தை பற்றித்தான் கவலைப்படுகிறார். கடவுள்தான் உன்னை ஆக்குபவர் என்று வள்ளுவர் ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் கடவுளா, மனிதனா என்ற கேள்வி வரும் வேளையில் வள்ளுவர் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதில், ஒரு மனிதன் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், இந்த உலகத்தை படைத்த கடவுள் அழிந்து ஒழிவானாக என்று ஒரு குறளில் அவர் சொல்கிறார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர் இவ்வாறு சொல்ல முடியாது. அவர் இந்த உலகில் இயற்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடகவே இதனை நாம் கருத வேண்டியுள்ளது. முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று கூறுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆமாம், எல்லா எழுத்துக்களும் அகரத்தை அடிப்படையாக கொண்டு ஒலிப்பதுதான். அதை தவிர மனித உழைப்புக்கோ, முன்னேற்றத்துக்கோ இறைவன்தான் காரணம் என்று திருவள்ளுவர் எங்கேயும் கூறவில்லை. இதுதான் உண்மை. மனிதத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால் தான் பெரியார் போன்றவர்கள் அவரை போற்றி பாராட்டினார்கள். பிறப்பை கொண்டோ, தொழிலை கொண்டோ மனிதர்களை பிரிக்கக் கூடாது என்றும் அவர் தெளிவாக கூறுகிறார். பகவத்கீதையில் உள்ளதை போன்று எந்த கருத்துக்களும் திருக்குறளில் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மையான ஒன்றாகும்.

 

 

 

 

 

 

 

 

 

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.