Skip to main content

புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்து அசத்தும் கிராமத்து மாணவர்! - வேலை கொடுத்து அழகுபார்க்கும் ஐஐடி!

Published on 16/04/2021 | Edited on 17/04/2021

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் வேம்பங்குடி, மேற்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ். 18 வயதுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. 10- ஆம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துமுடித்த போது 'ரோபோ' சார்ந்த படிப்புக்கு ஆசைப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பைத் தேர்வு செய்து சேர்ந்தார். முதல் வருடம் முடித்த பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளை புதுக்கோட்டை  அருகில் உள்ள கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்கிறார். இறுதி ஆண்டு மாணவர்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

தனது வயது, படிப்பைக் கடந்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக எளிமையாக, மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் பயனுள்ளதாக பல அரியவகை கருவிகளை உருவாக்கிச் சாதனை படைத்து பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு பல நிறுவனங்கள் வேலைக்கும் அழைத்துள்ள நிலையில், தற்போது சென்னை ஐஐடி நிறுவனம் சிவசந்தோஷுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இந்த நிலையில், மாணவர் சிவசந்தோஷை அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, "சிறு வயதில் இருந்தே ரோபோ மேல அதிக பற்றுண்டு. அதனால தான் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) தேர்வு செய்தேன். தொடர்ந்து கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் இதே படிப்பை முடித்துள்ள எங்க ஊர் அண்ணன் சீனிவாசனுடன் இணைந்து புதிய கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். முதலில் பேசும் ரோபோவை உருவாக்கி கரோனா விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டேன்.

 

பலரது பார்வையும் எங்கள் மீது பட்டது. தொடர்ந்து கரோனா தொடங்கிய போது தானியங்கி உடல் வெப்பநிலை அறிந்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து ஒரு திருமண நிகழ்ச்சியில் வைத்தோம். பார்த்தவர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் செல்ஃபோன் மூலம் இயக்கக் கூடிய நகரும் ரோபோவை உருவாக்கி கரோனா வார்டுகளில் யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு போய் கொடுக்கும் வகையில் செயல்படுத்தினோம். பிறகு இதை உருவாக்கப் பொருளாதார உதவிகளை எங்கள் ஊர் அண்ணன்கள் பார்த்திபன் மற்றும் சரவணன் செய்துகொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன்பிறகு, திறந்த வெளியில் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றும் கிருமிகளை அழிக்கும் 'யுவி லைட்' மூலம், கரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். இதையும் இணையம் மூலம் வெளிப்படுத்திய போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் (பொருட்கள் விற்பனை செய்யும்) நிறுவனம் வாங்கிச் சென்று இப்போது பல ஆயிரம் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன் பிறகு வளிமண்டலத்தில் உள்ள தட்பவெப்ப நிலையை அறிய 2.5 செமீ சதுர அளவில் 18 கிராம் எடை கொண்ட சிறிய கருவியை உருவாக்கி அதன் மூலம் தட்ப வெப்பம் அறிந்து பயிர்சாகுபடி செய்வது குறித்த ஆய்வு செய்துள்ளேன். மேலும், விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய சொட்டு நீர் பாசனத்திற்கான கருவியை (சூரிய ஒளியில் இயங்கும்) உருவாக்கினேன். அதேபோல சூரிய ஒளி மூலமே நேரடியாக தண்ணீரை சூடாக்கும் கருவியைக் கண்டுபிடித்தேன். இதை அறிந்த சென்னை ஐஐடி நிறுவனம் என்னை அழைத்துப் பாராட்டி அந்த இயந்திரத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வேலை தர முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இதே போல இன்னும் பல உபகரணங்களை உருவாக்குவதும் கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோ பற்றிய வகுப்புகள் எடுப்பதுமே என் லட்சியம். இப்பவும் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையவழியில் ரோபோடிக் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன்" இவ்வாறு அந்த மாணவர் கூறினார். 

 

கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தினால், இதுபோல இன்னும் பல ஆய்வாளர்களை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 


 

 

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.