Skip to main content

2019- லும் தொடர்ந்த மோடியின் பொய்கள்…

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

குடியுரிமை பறிக்கப்பட்டோருக்கு முகாம்கள் இல்லை! 

2019ல் மீண்டும் பிரதமரான பின்னரும் மோடி தனது பொய் சொல்லும் பழக்கத்தை கைவிடவில்லை. 

குடியுரிமைச் சட்டத்தின் கீழ் நாடற்றவர்களாக மாற்றப்படும் மக்களை அடைத்து வைக்க சிறப்பு முகாம்களை பாஜக அரசு கட்டுவதாக வெளிவந்த செய்திகள் உண்மையில்லை. காங்கிரஸும், அர்பன் நக்ஸல்கள் என்று அழைக்கப்படும் அறிவுஜீவிகளும் தான் இதை பரப்புகிறார்கள் என்று மோடி 2019, டிசம்பர் 22- ஆம் தேதி கூறினார்.

prime minister narendra modi speech


ஆனால், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆம் என்று பதிலளித்தார். பல்வேறு ஆதாரங்களுடனும் படங்களுடனும் நிரூபிக்கப்பட்ட செய்தியை, பொய் என்று பேசினார் மோடி. அசாமிலும்,பெங்களூருவிலும் கட்டி முடிக்கப்பட்ட முகாம்களின் படங்கள் வெளியாகின. எல்லா முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற முகாம்கள் கட்டுவதற்காக மாதிரி வடிவமைப்பை அரசுகளுக்கு அனுப்பியிருப்பாதகவும் நிரூபிக்கப்பட்டது.
டிசம்பர் 22, 2019

என்.ஆர்.சி. குறித்து பாஜகவோ நானோ பேசியதே இல்லை!
என்ஆர்சி எனப்படும் குடியுரிமையை பதிவு செய்யும் திட்டம் குறித்து ஏராளமான பொய்கள் பரப்பப்படுகிறது. ஆனால், அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவே இல்லை. அதைப் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே இல்லை என்று மோடி கூறினார்.

prime minister narendra modi speech


ஆனால், பாரதிய ஜனதாக் கட்சி தனது 2019 மக்களவைத் தேர்தலுக்கு தயாரித்த வாக்குறுதிகள் புத்தகத்தில் இந்தியா முழுவதும் குடியுரிமைக் கணக்கெடுக்கப் போவதாக கூறியிருக்கிறது. இதுதொடர்பாக பிரச்சாரக் கூட்டங்களில் மோடி, அமித் ஷா ஆகியோர் பலமுறை பேசியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவர், மோடி, அமித்ஷா ஆகியோர் குடியுரிமை கணக்கெடுப்பு தொடர்பாக அறிவிப்பு வரும் என்று பேசியிருக்கிறார்கள். இதை மறைத்து பொய் பேசினார் மோடி. 

டிசம்பர் 22, 2019
என்.ஆர்.சி.யை காங்கிரஸ் கொண்டு வந்ததா?
தேசிய குடியுரிமை கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று மோடி கூறினார். இதுவும் அப்பட்டமான பொய் ஆகும்.  தேசிய குடியுரிமை பதிவேடு என்பதை அசாம் மாநிலத்துக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது.

prime minister narendra modi speech


1985- ஆம் ஆண்டு அசாமில் உள்ள வெளிநாட்டவரை கணக்கிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்போடு, அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். மதங்களுக்கு அப்பால், அசாமில் ஊடுருவியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஆனால், பாஜக இந்தியா முழுவதும் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 22, 2019

புதிய குடியுரிமை சட்டத்தால் 130 கோடி இந்தியருக்கும் பாதிப்பில்லையா?
பாஜக அரசு நிறைவேற்றிய புதிய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவால் 130 கோடி இந்தியருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மோடி பேசினார். ஆனால், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்திய அரசியல் சட்டத்தோடு தொடர்புடையவர்கள். அரசியல் சட்டத்தை பாதுகாக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

prime minister narendra modi speech


பாஜக நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, அரசியல் சட்டத்தின் 14, 15 மற்றும் 19 ஆவது பிரிவுகளுக்கு எதிரானது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க இந்த பிரிவுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. பாஜகவின் இந்தச் சட்டம் குறித்து சட்ட வல்லுநர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கு நேரடியாக மோடி பதில் சொல்லவில்லை.
டிசம்பர் 22, 2019

காஷ்மீர் வளர்ச்சி தடைக்கு 370 ஆவது பிரிவே காரணம்!
ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின் கீழ் அந்த மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்துதான் காரணம் என்று மோடி சொன்னார். ஆனால், அவர் மூன்று முறை முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தின் சமூக வளர்ச்சியைக் காட்டிலும் காஷ்மீரின் வளர்ச்சி நன்றாகவே இருப்பதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கி மக்களவையில் பேசிய அமித்ஷா கூறிய புள்ளி விவரங்களும் பொய் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆகஸ்ட்8, 2019

modi


டாக்டர் அம்பேத்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களின் கனவு இப்போது நனவாகி இருக்கிறது என்று மோடி கூறினார். காஷ்மீர் குறித்து அம்பேத்கர் கூறியதாக மோடி சொன்னது சுத்தப் பொய் ஆகும்.

காஷ்மீர் குறித்து அம்பேத்கர் எழுதிய கருத்துகளை படிக்காமல் அல்லது தவறாக புரிந்துகொண்டு பொய்யை பரப்புகிறார் மோடி. காஷ்மீர் பிரச்சனைக்கு எனது சரியான தீர்வு அதைப் பிரிப்பதுதான். இந்துக்களும் பவுத்தர்களும் நிறைந்த பகுதியை இந்தியாவுக்கு கொடுத்துவிட வேண்டும்.

modi3



இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட வேண்டும். நாம் முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியைப் பற்றி கவலைப்படவே மறுக்கிறோம். முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைதான் இது. காஷ்மீர் முஸ்லிம்கள் அவர்கள் இஷ்டப்படி முடிவெடுக்கலாம். அல்லது காஷ்மீரை மூன்று பகுதிகளாக நீங்கள் பிரிக்கலாம். போர் நிறுத்தப் பகுதி, சமவெளி, ஜம்மு- லடாக் பகுதி என்று பிரித்து சமவெளியில் மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றுதான் அம்பேத்கர் கூறியிருக்கிறார். இதையே தங்கள் இஷ்டத்துக்கு திரித்து கதை அளக்கிறார் மோடி.
ஆகஸ்ட் 8, 2019

எனது ஒரு நிகழ்ச்சி கூட ரத்தாகவில்லை என்று பொய்!
2019- ஆம் ஆண்டு மே மாதம் கடந்த ஐந்தாண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். அவர் பேச வந்ததை பேசினார். அப்போது, தனது ஒரு நிகழ்ச்சியைக் கூட ரத்து செய்ததில்லை என்றார். ஆனால், ஒரு மாதத்திற்கு முன், அதாவது, ஏப்ரல் மாதம் 10- ஆம் தேதிதான் மராட்டிய மாநிலம் பாராமதியில் நடக்க வேண்டிய அவருடைய பொதுக்கூட்டம் ரத்தாகியிருந்தது. ஆக, அவர் பொய் சொல்வதை நிறுத்தவே இல்லை. 

மே 17, 2019 

modi8


2014- ஆம் ஆண்டு தான் பிரதமரான பிறகு இந்தியாவில் எங்காவது குண்டு வெடித்ததா என்று கேட்டார் மோடி. 2019- ஆம் ஆண்டு மே மாதம் 16- ஆம் தேதி இதைக் கேட்டார். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், தேசியவெறியை ஏற்றும் வகையிலேயே அவர் பேசினார். அதிலும் உண்மைக்கு புறம்பாகவே பொய் பேசினார். உண்மை என்னவெனில், தெற்காசிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான இணையதளத்தின் கணக்குப்படி, 2014- ஆம் ஆண்டு முதல் மோடி ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில், 418 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்திருப்பதாக பதிவாகியிருக்கிறது.

அவற்றில் முக்கியமான தாக்குதல்களில் சில…

1. டிசம்பர் 2014- பெங்களூரு குண்டுவெடிப்பு
2. டிசம்பர் 2014-  புல்வாமா தாக்குதல்
3. ஜூன் 2015- நானிபூர் திடீர் தாக்குதல்
4. ஜூலை 2015- குருதாஸ்பூர் தாக்குதல்
5. ஜனவரி 2016- பதான்கோட் தாக்குதல்
6. செப்டம்பர் 2016- உரி தாக்குதல்
7. அக்டோபர் 2016-  பாரமுல்லா
8.  பிப்ரவரி 2017- ஸோபியன் தாக்குதல்
9.  மார்ச் 2017- போபால் – உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பு
10. ஜூலை 2017- அமர்நாத் யாத்திரையில் குண்டுவெடிப்பு
11.  பிப்ரவரி 2018- சுஞ்சுவான் தாக்குதல்
12.  நவம்பர் 2018- மணிப்பூர் சட்டமன்றத்தில் தாக்குதல்
மே 16, 2019

modi13


துல்லியத் தாக்குதல் குறித்து பொய் பிரச்சாரம்!
துல்லியத் தாக்குதல் நடத்தியதை விமர்சிப்பவர்கள் தியாகிகளையே எதிர்க்கிறார்கள் என்று மோடி பேசினார். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசாங்களின் போதும் சுமார் ஆறுமுறை துல்லியத் தாக்குதல் நடந்திருக்கிறது. வாஜ்பாய் அரசிலும் துல்லியத் தாக்குதல் நடந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் அரசுகளில் நடந்த துல்லியத் தாக்குதல்களை மோடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். காகிதங்களிலும் வீடியோ கேம்ஸ்களிலும் தான் இது நடக்கிறது என்று படையினர் சொல்லியதாக முதல்வராக இருக்கும்போது மோடி பேசியிருக்கிறார்.
மே 16, 2019


 

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர். 

Next Story

‘தமிழ்நாடு எதிலும் முதலிடம்’ - மத்திய அரசின் தரவுகளுடன் சுட்டிக்காட்டிய திமுக!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிகாட்டி திமுக சார்பில், ‘தமிழ்நாடு எதிலும் முதலிடம். ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி’ என்ற தலைப்பின் கீழ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள், சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.

அதன்படி உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 - 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது. இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான விவரங்களை நிர்யாத் என்ற ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம், தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், குஜராத் 12.72 புள்ளிகளையும், பீகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

ஆண்டு வாரியாக சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின் படி, நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. 

'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.