Skip to main content

20 லட்சம் கோடியும், இடியாப்ப சிக்கலும்... அரசின் திட்டம் குறித்த அலசல்...

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

pros and cons of 20 lakh crore rupees economic relief fund plans


கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், அதன் தாக்குதலிலிருந்து இந்தியப் பொருளாதாரமும் தப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் நேற்று மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தை மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். சுமார் 220 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டத்தின் நடைமுறை சாத்தியங்கள் என்ன..? இதனை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை அலசுகிறது இத்தொகுப்பு. 

 

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது 20 லட்சம் கோடி ரூபாய் என்ற தொகையைத் தான். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த 20 லட்சம் கோடியில், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள சுமார் ஏழு லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களும் சேர்த்தே கணக்கிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கடத்த ஒரு மாதத்தில், ரிசர்வ் வங்கி சுமார் 5.2 லட்சம் கோடி ரூபாயைப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியாக அறிவித்துள்ளது. முதலாவது மார்ச் 27 அன்று ரெப்போ விகித மாற்றங்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி 3.74 லட்சம் கோடி ரூபாயையும், இரண்டாவது ஏப்ரல் 17 அன்று, மற்றொரு ரூ .1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப்புழக்க நடவடிக்கையையும் அறிவித்தது. இதனைக் கடந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மார்ச் மாதத்தில் ரூ .1.7 லட்சம் கோடிக்குப் பொருளாதார மீட்பு நிதியுதவியை அறிவித்தார். இவையல்லாமல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆக, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிதி தொகுப்பு சுமார் 7.1 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, மேலும் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மட்டுமே மத்திய அரசு புதிதாகச் செயல்படுத்த உள்ளது. 

அடுத்ததாக இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணி, இந்தத் தொகை எவ்வாறு மக்களைச் சென்றடையும் என்பதே. இந்தத் தொகையின் பெரும்பான்மை பகுதி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், தொழில்துறைக்குக் கடன் உதவி வழங்கவுமே செலவிடப்பட உள்ளது. இதில் சில நீண்ட கால நடைமுறைகளைக் கொண்டவை ஆகும். நடப்பு நிதியாண்டில் அரசாங்கத்தின் நிதி தேவைகளைப் பாதிக்கப்படாததை உறுதி செய்யும் வகையில், இந்த நீண்ட கால நடைமுறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணத்தை உட்செலுத்தி பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான நிதி ஆதாரம் மத்திய அரசிடம் இல்லாத நிலையில், மீதமுள்ள இந்த உதவித்தொகை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி உத்தரவாதங்கள், மறுநிதியளிப்பு வசதிகள் மற்றும் தொழில்களுக்கான நீண்ட வரி விலக்கு ஆகியவற்றின் மூலம் மறைமுகமாகவே வெகுஜன மக்களிடையே சென்றடையும் வாய்ப்புள்ளது. 

 

pros and cons of 20 lakh crore rupees economic relief fund plans

 

பிரதமரின் இந்த அறிவிப்பில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், எப்படி இவ்வளவு பெரிய தொகையைத் திரும்ப ஈட்ட மத்திய அரசு திட்டமிடும் என்பதே. ஏற்கனவே இந்த ஆண்டின் நிதி செலவுகளுக்காக மத்திய அரசு மேலும் 4.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டிற்கான ரூ.12 லட்சம் கோடி தேவையில் ரூ .7.8 லட்சம் கோடிக்கு மட்டுமே அரசின் வசம் உள்ளது. இதனைச் சரிசெய்யவே 4.2 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. இந்தச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையைச் சந்தைக்குள் செலுத்தி அதன் விளைவுகளை அரசு எவ்வாறு கையாளும் என்பதும் கேள்விக்குறியே. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா தொழில்கள் என அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், இந்தக் காலாண்டிற்கான மத்திய அரசின் வருவாயும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கருத்தில்கொள்ளும் போது, பணப்புழக்க அதிகரிப்புக்கும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்கும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்தக் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் பாதை நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது நிதர்சனம். 

பொருளாதார அறிஞர்களும் இதே கருத்தை முன்வைக்கும் இந்தச் சூழலில், மத்திய அரசோ மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே 5 அன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு முறையே லிட்டருக்கு ரூ .10 மற்றும் ரூ .13 உயர்த்தியது. இது மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டில் சுமார் 1,75,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு தயாரிப்புகளின் மீதான வரியை லிட்டருக்கு ரூ .3 முதல் 6 வரை மத்திய அரசால் இன்னும் உயர்த்த முடியும் எனும் இந்த நிலையில், இதன் மூலம் கூடுதலாக ரூ .50,000-60,000 கோடியை அரசு வருவாயாகப் பெரும். ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.2,25,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் மத்திய அரசு இந்தப் புதிய காலால் வரி மூலமாகக் கூடுதலாக இரண்டு லட்சம் கோடி வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும், கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகளவு ஈவுத்தொகையைப் பெற்ற அரசு, இந்த ஆண்டும் அதையே செய்யும் எனவும் கணிக்கப்படுகிறது. மொத்தத்தில் பணப்புழக்கம், நிதியாதாரம், பணவீக்கம், வளர்ச்சி விகித பாதிப்பு என இப்படிப் பல இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட இந்த 20 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை, மக்களையும், ரிசர்வ் வங்கியையும் நம்பியே மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல மத்திய அரசின் துணிச்சலான இந்தத் திட்டத்தின் மொத்த வெற்றியும், இந்த உதவிகள் மக்களுக்கு எப்போது? எப்படி? போய்ச் சேருகிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பதும் மறுக்கமுடியாததாக உள்ளது. 

 

 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.