Skip to main content

20 லட்சம் கோடியும், இடியாப்ப சிக்கலும்... அரசின் திட்டம் குறித்த அலசல்...

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

pros and cons of 20 lakh crore rupees economic relief fund plans


கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், அதன் தாக்குதலிலிருந்து இந்தியப் பொருளாதாரமும் தப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் நேற்று மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தை மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். சுமார் 220 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டத்தின் நடைமுறை சாத்தியங்கள் என்ன..? இதனை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை அலசுகிறது இத்தொகுப்பு. 

 

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது 20 லட்சம் கோடி ரூபாய் என்ற தொகையைத் தான். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த 20 லட்சம் கோடியில், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள சுமார் ஏழு லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களும் சேர்த்தே கணக்கிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கடத்த ஒரு மாதத்தில், ரிசர்வ் வங்கி சுமார் 5.2 லட்சம் கோடி ரூபாயைப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியாக அறிவித்துள்ளது. முதலாவது மார்ச் 27 அன்று ரெப்போ விகித மாற்றங்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி 3.74 லட்சம் கோடி ரூபாயையும், இரண்டாவது ஏப்ரல் 17 அன்று, மற்றொரு ரூ .1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப்புழக்க நடவடிக்கையையும் அறிவித்தது. இதனைக் கடந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மார்ச் மாதத்தில் ரூ .1.7 லட்சம் கோடிக்குப் பொருளாதார மீட்பு நிதியுதவியை அறிவித்தார். இவையல்லாமல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆக, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிதி தொகுப்பு சுமார் 7.1 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, மேலும் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மட்டுமே மத்திய அரசு புதிதாகச் செயல்படுத்த உள்ளது. 

அடுத்ததாக இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணி, இந்தத் தொகை எவ்வாறு மக்களைச் சென்றடையும் என்பதே. இந்தத் தொகையின் பெரும்பான்மை பகுதி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், தொழில்துறைக்குக் கடன் உதவி வழங்கவுமே செலவிடப்பட உள்ளது. இதில் சில நீண்ட கால நடைமுறைகளைக் கொண்டவை ஆகும். நடப்பு நிதியாண்டில் அரசாங்கத்தின் நிதி தேவைகளைப் பாதிக்கப்படாததை உறுதி செய்யும் வகையில், இந்த நீண்ட கால நடைமுறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணத்தை உட்செலுத்தி பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான நிதி ஆதாரம் மத்திய அரசிடம் இல்லாத நிலையில், மீதமுள்ள இந்த உதவித்தொகை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி உத்தரவாதங்கள், மறுநிதியளிப்பு வசதிகள் மற்றும் தொழில்களுக்கான நீண்ட வரி விலக்கு ஆகியவற்றின் மூலம் மறைமுகமாகவே வெகுஜன மக்களிடையே சென்றடையும் வாய்ப்புள்ளது. 

 

pros and cons of 20 lakh crore rupees economic relief fund plans

 

பிரதமரின் இந்த அறிவிப்பில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், எப்படி இவ்வளவு பெரிய தொகையைத் திரும்ப ஈட்ட மத்திய அரசு திட்டமிடும் என்பதே. ஏற்கனவே இந்த ஆண்டின் நிதி செலவுகளுக்காக மத்திய அரசு மேலும் 4.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டிற்கான ரூ.12 லட்சம் கோடி தேவையில் ரூ .7.8 லட்சம் கோடிக்கு மட்டுமே அரசின் வசம் உள்ளது. இதனைச் சரிசெய்யவே 4.2 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. இந்தச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையைச் சந்தைக்குள் செலுத்தி அதன் விளைவுகளை அரசு எவ்வாறு கையாளும் என்பதும் கேள்விக்குறியே. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா தொழில்கள் என அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், இந்தக் காலாண்டிற்கான மத்திய அரசின் வருவாயும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கருத்தில்கொள்ளும் போது, பணப்புழக்க அதிகரிப்புக்கும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்கும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்தக் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் பாதை நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது நிதர்சனம். 

பொருளாதார அறிஞர்களும் இதே கருத்தை முன்வைக்கும் இந்தச் சூழலில், மத்திய அரசோ மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே 5 அன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு முறையே லிட்டருக்கு ரூ .10 மற்றும் ரூ .13 உயர்த்தியது. இது மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டில் சுமார் 1,75,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு தயாரிப்புகளின் மீதான வரியை லிட்டருக்கு ரூ .3 முதல் 6 வரை மத்திய அரசால் இன்னும் உயர்த்த முடியும் எனும் இந்த நிலையில், இதன் மூலம் கூடுதலாக ரூ .50,000-60,000 கோடியை அரசு வருவாயாகப் பெரும். ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.2,25,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் மத்திய அரசு இந்தப் புதிய காலால் வரி மூலமாகக் கூடுதலாக இரண்டு லட்சம் கோடி வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும், கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகளவு ஈவுத்தொகையைப் பெற்ற அரசு, இந்த ஆண்டும் அதையே செய்யும் எனவும் கணிக்கப்படுகிறது. மொத்தத்தில் பணப்புழக்கம், நிதியாதாரம், பணவீக்கம், வளர்ச்சி விகித பாதிப்பு என இப்படிப் பல இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட இந்த 20 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை, மக்களையும், ரிசர்வ் வங்கியையும் நம்பியே மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல மத்திய அரசின் துணிச்சலான இந்தத் திட்டத்தின் மொத்த வெற்றியும், இந்த உதவிகள் மக்களுக்கு எப்போது? எப்படி? போய்ச் சேருகிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பதும் மறுக்கமுடியாததாக உள்ளது. 

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.