Skip to main content

அமலாக்கத்துறை காட்டிய ஆதாரம்! வெலவெலத்த டி.டி.வி. தினகரன்! 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சூழலில் சசிகலா அணிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசாரிடம் புகார் கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இந்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரையும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி டி.டி.வி. தினகரனையும் கைது செய்தது டெல்லி போலீஸ், இரண்டு மாத சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார் தினகரன்.


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுக்க, கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு தினகரன் ஆஜராக, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’பெண் தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர் டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார். பொருளாதார குற்றம் என்பதால் அமலாக்கத்துறையும் கடந்த 4-ந்தேதி சுகேஷ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரிடம் டெல்லி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச விவகாரமும் விசாரிக்கப்பட்டிருக்கிறது.


அந்த விசாரணையில், சின்னத்தைப் பெற்றுத்தர 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முன்பணமாக 25 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தார் என்றும், அதை வைத்தே தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க அணுகியதாக சொல்லியிருக்கிறார் சுகேஷ். இதனையடுத்தே, தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, ஆஜரானார் தினகரன். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் பிரசாந்த்குமார் ஐ.ஆர்.எஸ். மேற்பார்வையில் அவர் அமைத்த டீம் தினகரனிடம் விசாரணை நடத்தியிருக்கிறது.


விசாரணையில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார் தினகரன். குறிப்பாக, சுகேஷுக்கும் உங்களுக்கும் நட்பு எப்படி உருவானது என அதிகாரிகள் கேட்க, “அவரை நான் பார்த்தது கூட கிடையாது; நட்பு எப்படி உருவாகும்?” என தினகரன் கெத்தாக பதில் சொல்லியிருக்கிறார்.


அப்போது, “நீங்க சொல்ற பதில்கள் உங்களுக்கே எதிராகப்போகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால எல்லாத்துக்கும் தெரியாதுன்னு சொல்லாதீங்க. உண்மையைச் சொல்லுங்கள்” என்று அதிகாரிகள் சொன்னபோதும், சுகேஷை தெரியாது என்றே தினகரன் திரும்பத் திரும்பச் சொல்ல, கடுப்பான அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது கொடுத்த வாக்குமூலத்தையும், சில புகைப்படங்களையும் தினகரனிடம் காட்டினார்கள். அதில், ஒரு ஹோட்டலில் சுகேஷும் தினகரனும் சந்தித்த சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தன.


அதைப் பார்த்த தினகரன் வெலவெலத்துப் போயிருக்கிறார். அதன்பிறகு வாய் திறந்த தினகரன், “அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்த போது என்னை சந்தித்த அவர், அரசியல் பிரபலங்களையும் அதிகாரிகளையும் தனக்கு தெரியுமென்றும், இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு சாதகமாக பெற்றுத்தர என்னால் முடியுமென்றும், ஆனால் கொஞ்சம் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு விருப்பமில்லையென்பதால் மறுத்து விட்டேன். அப்படியிருக்க அந்த நபர் ஏன் மாற்றி மாற்றி பொய் சொல்கிறார்னு தெரியலை. என்னை மாட்டிவிட அரசியல் சதி நடக்கிறது. நான் நிரபராதி” என கெஞ்சியிருக்கிறார்.


“அரசியல் சதியை யார் செய்கிறார்கள்?” என அதிகாரிகள் கேட்க, பதில் சொல்லவில்லை தினகரன். அதேபோல, சென்னையை சேர்ந்த மோகன்ராஜ், கோபிநாத் (சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டவர்) குறித்த பல கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார். கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார் தினகரன். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கும் சுகேஷுக்குமான தொடர்புகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இதில் எந்த சூழலிலும் அவர் தப்பிக்க முடியாது” என்கின்றன டெல்லி தகவல்கள்.

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

தினகரனுக்கு எதிரான விவகாரங்கள் இப்படியிருக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவர் முடங்கிவிடுவார் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், “எனது ஆன்மிக பயணத்தை அரசியல் பயணமாக தொடரப் போகிறேன்; இனிதான் என் அரசியலை எடப்பாடி பார்க்கப்போகிறார்” என்று வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளார் சசிகலா.


இந்த நிலையில், எடப்பாடியை பலவீனப்படுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 30 பேரை வளைக்கும் திட்டத்தை போட்டுள்ளார் சசிகலா. முதல்கட்டமாக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இதனையறிந்துள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை, அ.தி.மு.க.வை உடைத்து அதே 30 எம்.எல்.ஏ.க்களை வளைத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார திட்டமிட்டுள்ளது. இதனை உணர்ந்து பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக களத்தில் குதித்துள்ளது தி.மு.க.


ஆக... முக்கோண சிக்கலில் அ.தி.மு.க.வின் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.