Skip to main content

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது - பேராசிரியர் சிவ பிரகாசம் பேட்டி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020


கரோனா காரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த லாக் டவுன் தோல்வி அடைந்த ஒன்று என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த லாக் டவுன் தொடர்பாகவும், பொருளாதார நிலை தொடர்பாகவும் பேராசிரியர் சிவ பிரகாசம் நம்மிடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,
 


இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. முதல் கட்டமாக 20 லட்சம் கொண்ட ஒரு பேக் கேஜ்-ஐ அறிவித்துள்ளார். அதில் சிறு, குறு விவசாயிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது பற்றி விரிவாகக் கூறியிருக்கிறார்கள். மேலும் எந்தத் துறைகள் தனியார்மயத்தை அனுமதிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

முதலில் இந்த லாக் டவுன் முறையையாவது ஒழுங்காகக் கொண்டுவந்தார்களா என்றால் அதிலேயே ஏகப்பட்ட பிழைகளை இந்த அரசு செய்துள்ளது. அமெரிக்காவில் மார்ச் 17இல் லாக் டவுன் கொண்டு வந்தார்கள். நாம் 25இம் தேதி அறிவித்தோம். ஏதாவது ஒரு முன்னறிவிப்பைச் செய்தோமா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டில் இருந்தவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கேயே மாட்டிக்கொண்டார்கள். ஒரு நான்கு நாட்கள் டைம் கொடுத்து மக்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்குச் செல்ல வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம். 
 

 


ஆனால் இது எதையுமே மத்திய அரசு செய்யவில்லை. மக்களை நட்டாற்றில் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பணமதிப்பிழப்பு சம்பவத்தைப் போல இதையும் அவசரக் கதியில் முடிவு செய்து நான்கு மணி நேரத்தில் அறிவித்தார்கள். அரசு நிர்வாகத்தை முறையாகச் செய்யத் தெரியாத காரணத்தாலேயே இந்தத் தனியார் மய முடிவுகளைக் கால நேரம் பாராமல் எடுக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்கள் முன்பு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும். 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை இந்தியாவில் மிக மோசமாக இருக்கின்றது. முன் எப்போது இல்லாத அளவுக்கு அவர் கஷ்டப்படுகிறார்கள். சாலைகளில் சாரைசாரையாக மக்கள் ஒரு மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்குச் செல்வதைத் தற்போது பார்த்துவருகின்றோம். இதற்கு முன்பு இது எப்போதும் நடந்ததில்லை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது தொழிலாளர்கள் இவ்வாறு நடந்தார்கள். ஆனால் தற்போதைய அளவுக்கு நிலமை மோசமாகவில்லை. இந்தியாவில் இந்த மாதிரியான தொழிலாளர்கள் 47 கோடி பேர் இருக்கிறார்கள் என்று தற்போது கூறுகிறார்கள். தற்போது மூன்று கோடி பேர் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
 

http://onelink.to/nknapp


இந்திய அரசின் முதுகெலும்பாக இருக்கும் நான்கு மாநிலங்கள் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைக் கூறுகிறார்கள். அதில் சொற்ப வருவாய் தான் மத்திய அரசு திரும்பவும் மாநிலத்திற்கு வழங்குதிறது, 100 ரூபாய் அவர்களிடம் நாம் கொடுத்தால் 58 சதவீதத்தை அவர்களே வைத்துக்கொள்கிறார்கள். மீதி இருக்கின்ற 42 சதவீதத்தைத்தான் எல்லா மாநிலங்களுக்கும் அவர்கள் பிரித்துக்கொடுக்கிறார்கள். பிகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் 100 ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு மத்திய அரசு 200 ரூபாயைத் திருப்பித் தருகிறார்கள். உத்திர பிரதேசத்தில் பணத்தைத் தள்ளுபடி செய்கிறார்கள் என்றால் அது நாம் வழங்கும் பணம்தான். அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இருக்கக் கூடாது. அது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுகோள்.