Skip to main content

கன்னட திரைப்படத்தில் மோடி!

Published on 27/04/2018 | Edited on 28/04/2018

கர்நாடகாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது, பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்த நேரத்தில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி கன்னட திரைப்பட உலகில் கால் பதிக்கவுள்ளார். இப்படி சொன்னவுடன் மோடி அலை திரைப்படத்திலும் வீசப்போகிறதா, அவர் திரைப்படம் நடிக்கவுள்ளாரா, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இதுவும் ஒரு யுக்தியா என்றெல்லாம் என்று ஆயிரம் கேள்விகளை நீங்கள் வீச நினைப்பதற்குள் நாங்களே அதற்கான விடையை சொல்கிறோம். அது மோடி நடிக்கும் படமல்ல, மோடி பற்றிய படம். மோடி கருப்புப்பணத்தை ஒழிப்பதாகக் கூறி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்து 120 கோடி மக்களையும் ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார். இந்த முயற்சியால்  சில கருப்பாடுகளின் பணம் மட்டும் வெளியே வந்தது. இந்த நிகழ்வைத்தான் கன்னடத்தில் படமாக்கப்போகிறார்கள். படத்தின் தலைப்பு "ஸ்டேட்மென்ட் 8/11". இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்ற ஆர்வமும் இருக்கும்.
 

modi acting movie

மோடியின்  கதாபாத்திரத்தில் நடிப்பவர் கேரளாவைச் சேர்ந்த  64 வயது நிரம்பிய ராமச்சந்திரன். இவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சமூக வலைத்தளங்கள்தான். சென்றாண்டு ஜூலை மாதம் கேரளாவில் உள்ள பையனூர் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனை பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் புகைப்படம்  எடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி போலவே இருக்கிறார் என்று அந்தப் புகைப்படத்தை எடுத்து பதிவிட அது வைரல் ஆனது. அந்தப் புகைப்படத்தில்  ராமச்சந்திரன் கண்ணாடி போட்டுக் கொண்டு தோளில் ஒரு பேக்குடன், ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தார். சமூகவலைத்தளங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைய, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அவர் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். 'என்னடா இது தொல்லையாகப் போச்சு' என்றெண்ணிய ராமச்சந்திரன், முகத்தை க்ளீன்-ஷேவ் பண்ணிவிட்டு தன் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.  

எப்படி ஒளிந்தாலும் விடாமல் தேடிப்பிடித்து படத்தில் நடிக்க  வைத்துவிட்டார்கள் கன்னடிகாஸ். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ராமச்சந்திரன் "நான் சுருக்கெழுத்தாளராக 30 ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் 51 வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றேன். இயக்குனர் அப்பி பிரசாத் என்னிடம் வந்து கதை கூறினார். நான் மோடியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தத் தோற்றத்தினால் பலர் என்னை அரசியல் பிரச்சாரம் செய்யவெல்லாம் அழைத்தார்கள், நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. மோடியின் மீது வைத்திருந்த மரியாதையினால்தான் படத்திலேயே நடிக்கிறேன்" என்று கூறினார். 

தனது பிம்பம் பற்றி மிகத் தீவிரமான கவனம் கொண்டவர் பிரதமர். இப்படி ஒரு படம் எடுப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பவில்லையா என்று விசாரித்தால்தான் தெரிகிறது, படம் மோடியின் ஆட்சியை விமர்சிப்பது போல இல்லையாம். பணமதிப்புநீக்க நடவடிக்கையை ஆதரித்துப் பேசுகிறதாம். எனினும் படம் வெளிவந்தால்தான் உண்மை தெரியும். தன்னைப் போலவே இருக்கும் ராமச்சந்திரனை  இன்னும் பிரதமர் மோடி பார்க்கவில்லை போல. பார்த்தால், 'நீ இந்தியாவைப் பார்த்துக்கொள் நான் மற்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றாலும் சென்றுவிடுவார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகிவிட்டது. கூடிய விரைவில் மீண்டும் திரையில் மீண்டும் ஒரு டீமானிடைசேஷனைப் பார்க்கலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.