Skip to main content

அதிகாரிகள் அம்புதான்... அம்பை எய்தவர்கள் யார்? முத்தரசன் கேள்வி!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
cpi mutharasan interview

 

தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததுள்ளதாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையான விவசாயி பலன் அடையவில்லை என்கிறபோது, உண்மையான விவசாயி பலன் அடைய என்ன செய்திருக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடு நடக்க யார் காரணம்? இதுபோல மற்ற திட்டங்களிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனவும் பொதுமக்கள் கூறுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் கேட்டோம். 

 

நம்மிடம் பேசிய அவர், "மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. அதனை மூன்று தவணையாக ஒரு தவணைக்கு ரூபாய் 2 ஆயிரம் தருவதாக அறிவித்தது. இது மத்திய அரசின் அறிவிப்பு, பணமும் மத்திய அரசுதான் தருகிறது. இது மாநில அரசு பணம் கிடையாது. 

 

விவசாயிகளுடைய பட்டியல் எல்லா கிராம அடங்களிலும் உள்ளது. ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரியிடமும் நிலம் யாரிடத்தில் இருக்கிறது? எவ்வளவு நிலம் இருக்கிறது? சர்வே நம்பர் என்ன? என்ன சாகுபடி செய்கிறார்கள்? என்ற விவரம் முழுவதும் இருக்கிறது. உண்மையான பட்டியல் மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசிடம் தான் இருக்கிறது. பட்டியல் தயார் செய்து, உரிய பணத்தை உரிய விவசாயிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. 

 

இந்த கடமையை சரியாக செய்யாத காரணத்தினால், அந்த கடமையில் உரிய கவனத்தை செலுத்தாத காரணத்தினால் அந்தப் பணம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தியபோது, அதிகாரிகள் தவறாக பயன்படுத்திவிட்டார்கள் என்பதும், 70 அதிகாரிகள், 80 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல.

 

அதிகாரிகள் அம்புகளாக பயன்பட்டிருக்கிறார்கள். அம்பை எய்தவர்கள் யார்? என்பது கண்டறியப்பட வேண்டும். அம்பை எய்தவர்கள் அதிகாரம் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள்தான். அதிகாரம் செலுத்தக்கூடியவர்களின் உதவியில்லாமல் இதனை செய்ய முடியாது. வாய்ப்பே கிடையாது.

 

பட்டியலை தயார் செய்தது அதிகாரிகள். பணம் வெளியே போய்விட்டது. இந்த பணத்தை இந்த அதிகாரிகளிடத்திலேயும், அதிகாரிகளை இயக்கியவர்களிடம் இருந்தும் வசூல் செய்ய வேண்டும். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் ரூபாய் 110 கோடி வரை மோசடி செய்துள்ளதாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகிறார். இந்த முறைகேட்டில் யாரேனும் தற்காத்துக்கொள்ள முயற்சித்தால் அதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒரு முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அம்பை எய்தவர்கள், துணைபோனவர்கள் யார்? என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

கிராம அடங்கல் அடிப்படையில் உண்மையான பட்டியலை தயார் செய்து உரிய விவசாயிகளுக்கு நிதிகளை பெற்றுத்தர மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டம் மட்டுமல்ல, இதுபோன்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதிகளை ஒதுக்கும். முறைகேடு நடக்காமல் உரியவர்களுக்கு சென்றடைய மாநில அரசுதான் பொறுப்போடு இருக்க வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டும்" என்றார். 

 

 

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.