Skip to main content

இந்த அதிகாரம்தான் வலிமையானது..! - உறுதியாக இருக்கும் ஓ.பி.எஸ்.! 

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை முடித்து திரும்பிய சசிகலாவுக்கு அலப்பறையான வரவேற்புகள் கொடுத்து அசத்தியது தினகரன் தரப்பு. ஆனாலும், சசிகலாவுக்கு இதில் முழுதிருப்தி இல்லை. எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

 

இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "உங்களை வரவேற்க தமிழக எல்லைக்கு ஓ.பி.எஸ். வருவார். அங்கு வர முடியாமல் போனாலும் நீங்கள் தங்கும் தி.நகர் இல்லத்திற்கு வருவார்' என சசிகலாவிடம் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார் தினகரன். அது நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியால் பழிவாங்கப்பட்ட மற்றும் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களை அழைத்து வருவதாக தினகரன் சொன்னதும் நடக்கவில்லை.

 

எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பேசிய தினகரன், "நம்முடைய சமூகத்தினரெல்லாம் ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. நம் வலிமையைக் காட்டினால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுவார். அதனால் நீங்கள், உடனடியாக சின்னம்மாவை வந்து பாருங்கள்'' என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், மணிகண்டனோ, "அம்மாவால் (ஜெ.) பாதுகாக்கப்பட்ட நம் கட்சி பலகீனமாகும் பிரச்சனைக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்'' என சொல்லி மறுத்துள்ளார். தினகரன் வீசிய வலையில், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் என சிலர் சிக்கியிருந்தாலும் தற்போது வெளிப்படையாக வருவதற்குத் தயங்குகின்றனர். சசிகலா வருகையை ஒட்டி அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி காட்டிய கெடுபிடிகள், நடவடிக்கைகளில் இவர்களுக்கு உடன்பாடில்லைதான். என்றாலும், "சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு உருவாக நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்'' என பலரும் தினகரனிடம் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் வியூகங்கள் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே இவர்களின் முடிவு இருக்கும்'' என்கின்றனர் நம்மிடம்.

 

சசிகலா வருகைக்கு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிக்கு அமர்க்கள வரவேற்பு கொடுக்கப்பட்ட பிறகு, தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை மீண்டும் துவக்கிவிட்டார். "10சி செலவு செய்து திரட்டிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட வரவேற்பு' என உளவுத்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ். உட்பட கட்சியின் மிக முக்கிய சீனியர்கள் சிலர் சசிகலா பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என நினைத்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் போக மாட்டார்கள் என உறுதிப்படுத்திக்கொண்டதும்தான் சசிகலாவுக்கு எதிரான அஸ்திரங்களை எடுத்தார். இன்னும் 25 நாட்களுக்குள் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும். தேதி அறிவித்துவிட்டால் ஆட்சி அதிகாரம் எதுவும் ஆட்சியாளர்களிடம் வலிமையாக இருக்கப்போவதில்லை. அப்போது கட்சிதான் வலிமையானது. கட்சியின் சின்னமான இரட்டை இலையை அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரம் ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் இருக்கிறது. அதனை இழக்க ஓ.பி.எஸ். விரும்பவில்லை.

 

வேட்பாளர்கள் தேர்வில் இருவரும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது, அ.தி.மு.க. போட்டியிடும் இடங்களை சரிபாதியாக பிரித்துக்கொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். கோரிக்கை வைப்பார். எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையெனில், 40 சதவீத இடங்களுக்கு குறைவாக ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ள மாட்டார். 40 சதவீத வேட்பாளர்கள் ஓபிஎஸ்சின் ஆட்களாகவும், 60 சதவீத வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்களாகவும் இருப்பார்கள். இதில் அமைச்சர்களின் சிபாரிசுகளுக்கு இரு தரப்புமே கணிசமான இடங்களை விட்டுத்தர சம்மதித்துள்ளனர்.

 

அதனால், ‘சசிகலாவின் பின்னால் செல்வது எந்தவிதத்திலும் எதிர்கால அரசியலுக்கு உதவாது' என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், சசிகலா தொடர்பாக டெல்லியிடமிருந்தும் தெளிவான தகவல்கள் அவருக்கு எதுவும் தரப்படாததால், அங்கிருந்து கிடைக்கும் அட்வைஸைப் பொறுத்தே, முடிவெடுக்கலாம் என்பதிலும் ஓ.பி.எஸ். உறுதியாக இருக்கிறார். இதனை சீனியர்கள் மூலம் அறிந்ததையடுத்தே, சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வேகமாக இயங்குகிறார்'' என்று விவரிக்கிறார்கள் அழுத்தமாக.

 

இதற்கிடையே, "22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் ஆட்சிக்கான பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு செய்துகொண்டிருந்த மாத நன்மைகளை நிறுத்திவிட்டார். இதனால் எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். வெகுமதிகள் விரைவில் கிடைக்கும்” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

சசி - இ.பி.எஸ். இடையிலான முரண்பாடுகளை வைத்து சீட் ஷேரிங்கில் காய் நகர்த்துகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியில் திருத்தப்பட்ட விதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கில் சசிகலா மூலம் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதகமான முடிவை தேர்தல் ஆணையத்தில் எடுக்க வைக்க மத்திய அரசால் முடியும். இதனைச் சுட்டிக்காட்டி சில காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது பா.ஜ.க. 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.