Skip to main content

உங்க பாச்சா இங்க பலிக்காது... பவார் காட்டிய பவர்... பவரை இழந்த அமித்ஷா, மோடி... 

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

குஜராத்திலிருந்து வந்த உங்களுக்கே இவ்வளவு என்றால், இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தனான எங்களுக்கு எவ்வளவு இருக்கும், இது கோவா இல்ல... எங்கள் மகாராஷ்டிரா... உங்க பாச்சா இங்க பலிக்காதுன்னு அமித்ஷாவிடம் கூறியிருக்கிறது சிவசேனா கூட்டணி.
 

மகாராஷ்டிரா அரசியலில் சரத்பவார் ஆடிய ஆட்டம் கண்டு நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சி எப்படி வந்தது என்ற பின்னணியை பார்ப்போம்.
 

சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராவதை தடுக்க ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் மோடி. இதனால் சிவசேனா கடும் கோபம் அடைந்தது. பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியது. 
 

'அப்பாவிடம் (பால் தாக்கரே) நான் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவேன் என்று அவர் இறப்பதற்கு முன் உறுதி கொடுத்துள்ளேன், எனவே உயிரே போனாலும் இந்த முறை சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்' என்று பாஜகவுக்கு எதிராக உத்தேவ் தாக்கரே கொந்தளித்தாராம். 
 

மூத்த அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்களிடம் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில்  இருக்கும்போது எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது. மீறி கோரினால் அதை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு கிடையாது. மோடி நினைத்தால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியை எடுக்க முடியும். அதனால் ஜனாதிபதி ஆட்சியை விலக்க வைக்க என்ன செய்வது? என்று பாருங்கள், அதனைப் பற்றி ஆலோசனை நடத்துங்கள் என்றும், சரத்பவாரிடம் சில விஷயங்களை பேசுங்கள் என சில ஐடியாக்களையும் கூறியுள்ளனர்.
 

modi


 

இதையடுத்து உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார். பாஜகவுக்கு மிகப்பெரிய அடி கொடுக்கணும். அது உங்களால்தான் முடியும் என்று கூறியுள்ளார். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்துங்கள். உங்களுக்கான இமேஜ் மகாராஷ்டிரா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயரும். அதற்கு முன்பு எங்கள் கட்சி எம்எல்ஏக்களை நாங்கள் பத்திரப்படுத்தியுள்ளோம். அதேபோல் உங்கள் கட்சி எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்துங்கள். எந்த வகையிலும் ஒரு எம்எல்ஏ கூட எதிரணிக்கு போகக்கூடாது என்று கூறியுள்ளார். 
 

மேலும் சரத்பவாரிடம் பேசிய உத்தவ் தாக்கரே, எங்களை வேண்டாம் என்று பாஜக எப்போது முடிவு எடுத்ததோ, அதிலிருந்து உங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அஜித்பவாரிடம் பாஜக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த வேண்டும். நீங்க மோடியை சந்திக்கிற வாய்ப்பு இருந்தால், அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் என்று சரத்பவாரிடம் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதன்படி செய்தார் சரத்பவார். 
 

அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சரத்பவார் சொன்னதை உண்மை என்று நம்பிய பாஜக, அஜித்பவாரை வைத்து ஆட்டம் ஆடியது. தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு என அஜித்பவார் கொடுத்த கடிதத்தை வாங்கிய பாஜக, அதனை ஆளுநரிடம் கொடுத்தது. இதையடுத்து ஜனாதிபதி ரூல் விலக்கப்பட்டு, முதலமைச்சரானார் தேவேந்திர பட்னாவிஸ். துணை முதலமைச்சரானார் அஜித்பவார். அதோடு மட்டுமல்ல அஜித்பவார் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 30ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிருபிக்க சொன்னார் ஆளுநர். 

 

maharashtra


 

சரத்பவார் சொல்லித்தான் அஜித்பவார் பாஜகவுடன் சென்று பதவியேற்றுள்ளார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில், அதனை மறுத்தார் சரத்பவார். அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 53 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். விரைவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்றார் சரத்பவார். 
 

இதையடுத்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.என் பின்னால் எந்த எம்எல்ஏவும் இல்லை என்று அஜித்பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். 


 

 

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும். அவர் சொன்னதை நம்பிதான் பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தது என்றார் தேவேந்திர பட்னாவிஸ். 
 

பட்னாவிஸ் பதவி விலகியதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

நவம்பர் 28ஆம் தேதி மாலை 6.40-மணிக்கு சிவாஜி பார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்ரே பதவியேற்க உள்ளார்.  பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க்கில்தான் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்ரே குடும்பத்தில் இருந்து முதல் மந்திரியாக பதவியேற்கும் முதல் நபர் உத்தவ் தாக்ரேதான்.


 

 

 முதல்வராக தேர்வு செய்யப்பட்ட உத்தவ்தாக்கரே, நான் இந்த தருணத்தில் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 30 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் 30 ஆண்டுகளாக யாருக்கு எதிராக போராடினோமோ அவர்கள் என்னை நம்புகிறார்கள். நான் பதவியேற்ற பின்னர் முதலமைச்சராக பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார்.  
 

எல்லாக் கட்சியினரும் சந்தர்ப்பவாத அரசியல்தான் செய்கின்றன. ஆனால் அமித்ஷாவின் அரசியல் வித்தியாசமானது. தங்களது சந்தர்ப்பாத அரசியலுக்காக அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா விதமான சித்து விளையாட்டுக்களையும் செய்கிறார். குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதற்காக பெரும்பான்மை இல்லாத கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிருபிக்க 15 நாள் அவகாசம் அளிப்பது, அதனை நீதிமன்றம் தலையிட்டு திருத்தி எழுவது போன்றவை தொடர்கதையாகி வந்தாலும் அமித்ஷா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. 
 

மூன்று கட்சிகளில் இருந்து எப்படியும் அதிருப்தி எம்எல்ஏக்கள் முளைப்பார்கள். அவர்கள் எப்படியும் விவசாயிகள் நலன் என்ற பெயரில் மோடி, அமித்சாவை சந்திப்பார்கள். அவர்களுக்காக அந்த மாநிலத்தில் சொகுசு விடுதிகள் தயாராக இருக்கும். பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து சட்டமன்றத்தை முடக்குவார்கள். ஏதோ ஒரு விதத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது