Skip to main content

ஒரு வேளை சாப்பாட்டைக் குறைச்சிக்கிட்டோம்... ஊரடங்கால் முடங்கிய விசைத்தறி தொழில்! கடனில் தத்தளிக்கும் நெசவாளர்கள்!!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

salem


கூனவேலம்பட்டியில் ஊரடங்கால் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கும் விசைத்தறிக்கூடம்

கரோனா ஊரடங்கால் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் குடும்பத்தின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கந்து வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். 


புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை வதைத்தாலும், இன்னொரு பகுதி அத்துயரில் இருந்து விடுபட்டிருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பேரிடரற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நிவாரணம் கோர முடியும். ஆனால், கரோனா தொற்று அபாயத்தால், ஒட்டுமொத்த தமிழகமும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கால் முடங்கிக் கிடக்கிறது.
 


தமிழத்தில் கணிசமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக விசைத்தறி தொழில் விளங்கி வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி சந்தைக்குத் தேவையான சேலைகள், வேட்டிகள், துண்டுகளை இம்மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் நெய்து கொடுக்கின்றனர். பலர், சிறு முதலீட்டில் வீட்டிலேயே இரண்டு விசைத்தறி இயந்திரங்களை நிறுவி சுயதொழிலாகச் செய்து வருகின்றனர். இன்னும் பலர் விசைத்தறிக்கூடங்களில் தினசரி கூலி அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர். 


ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பிறகு ஜவுளி சந்தைகள் ஏற்கனவே பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கரோனா ஊரடங்கு ஜாப் ஒர்க் அடிப்படையில் சேலை, துண்டு, வேட்டிகளை நெய்து கொடுக்கும் சிறு விசைத்தறியாளர்களை மிகக்கடுமையாகப் புரட்டி எடுத்திருக்கிறது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  விசைத்தறியாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.
 

amutha govindaraj-power loom owner

                                                         அமுதா கோவிந்தராஜ்


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதா கோவிந்தராஜ் (34), வீட்டில் சொந்தமாக 4 விசைத்தறி இயந்திரங்களை வைத்து இளம்பிள்ளை ரக பட்டு சேலைகளை நெய்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ளனர். 


அமுதா கூறுகையில், ''நாங்கள் கூலி அடிப்படையில் இளம்பிள்ளை ரக சேலைகளை நெய்து வருகிறோம். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகப் புதிதாக இரண்டு தறி மெஷின்களை வாங்கினோம். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் குழு மூலம் கடன் வாங்கியிருந்தோம். இந்த நிலையில் கரோனா ஊரடங்கு உத்தரவால், எங்கள் பொழப்பு அடியோடு நின்னுப்போச்சுங்க. இனி, பாவு நூல் வந்தால்தான் சேலை நெய்ய முடியும். ரெண்டு மாசத்துக்கு மேலாக மெஷின் ஓட்டமே இல்லீங்க.


வேலை இல்லைங்கறதுக்காக சும்மா இருக்க முடியுங்களா? அதனால் கடந்த ரெண்டு மாதமாக கீரைகளை வாங்கித் தெருத்தெருவாக விற்க ஆரம்பிச்சிட்டேன். செலவெல்லாம் போக 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதை மேல் செலவுக்காக வைச்சுக்கிட்டோம். ரேஷன்ல அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுக்கறதால ஏதோ சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம ஓடுதுங்க. பிள்ளைகளுக்கு வயிறார பொங்கிப் போட்டுடுவோம். நானும், வூட்டுக்காரரும் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைச்சிக்கிட்டோம். 


வெரிடாஸ்னு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தறி மெஷினுக்காக கடன் வாங்கியிருந்தோம். மூன்று மாதத்திற்குத் தவணை கேட்கக்கூடாதுனு அரசாங்கம் சலுகை கொடுத்திருக்கு. ஆனால் வெரிடாஸ் நிறுவனத்தார் வீட்டுக்கே வந்து, 'இந்த வருஷத்துக்குள்ள கடந்த மூன்று மாத தவணையும், இந்த ஆண்டுக்கான நிலுவையும் கட்டணும். இல்லையென்றால் அபராத வட்டி வசூலிப்போம்னு' சொல்லிட்டு போயிருக்காங்க. 


ஆரம்பத்துல, ஒரு சேலை நெய்தால் எங்களுக்கு 280 ரூபாய் கூலி கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறம் திடீர்னு கூலியைப் பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்தாங்க. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்போது கூலியை மேலும் 50 ரூபாயை குறைத்து, 220 ரூபாய்தான் தருவோம் என்கிறார்கள். கேட்டால் ஜிஎஸ்டி வரியால் தொழிலில் நஷ்டம் என்கிறார்கள். 


ஜவுளித்துறைக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லைனு பாவு நூல் கொடுக்கும் முதலாளிகள் சொல்கிறார்கள். ஏற்கனவே நெய்யப்பட்ட இளம்பிள்ளை ரக சேலைகள் மூன்று மாதமாக நகராமல் தேங்கிக் கிடப்பதால், சேலைகளின் மடிப்புகளில் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டன. அதனால் அசலாவது கிடைத்தால் பரவாயில்லை என்ற நிலையில்தான் பாவு கொடுக்கும் முதலாளிகளும் இருக்கிறார்கள்.


எங்களைப்போல சிறு விசைத்தறியாளர்கள் நலன் கருதி ஜவுளித்துறைக்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கி, தொழிலை ஊக்குவிக்க வேண்டும். கடன் தள்ளுபடி சலுகை வழங்க வேண்டும். ஜவுளி ஏற்றுமதிக்கான சலுகைகளை வழங்கினால்தான் எங்களால் மீண்டு வர முடியும்,'' என்கிறார் அமுதா கோவிந்தராஜ். 

 

saravanan-small power loom owner

                                                                  சரவணன்

கரோனா ஊரடங்கு, தொழில் முடக்கத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களையும் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதாகச் சொல்கிறார், நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டியைச் சேர்ந்த சரவணன். விசைத்தறி தொழிலின் இப்போதைய நிலை குறித்து உள்ளும் புறமும் அறிந்தவராக விரிவாகவே பேசினார்.
 


''சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளில் பெரும்பாலானோர் 50 தறிகளுக்கு மேல் வைத்திருக்கும் பெரும் விசைத்தறி அதிபர்கள். என்னைப்போல் 6 தறிகள் முதல் 20 தறிகளுக்குள் வைத்திருக்கும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள்தான் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் இருக்கிறார்கள். 
 

என்னுடைய தறிக்கூடத்தில் துண்டு ரகம் நெய்து வருகிறேன். முதன்முதலாக கரோனா ஊரடங்கு அறிவித்தபோது, எங்களிடம் பாவு நூல் இருப்பு இருந்தது. அதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் பத்து பதினைந்து நாள்களுக்கு வேலை இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு இப்போது வரை பாவும் இல்லாமல் கோனும் இல்லாமல் மெஷின்கள் சும்மாதான் இருக்கின்றன. 
 

Power loom


கூனவேலம்பட்டியில் ஊரடங்கால் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கும் விசைத்தறிக்கூடம்

ஏற்கனவே செய்து முடித்த வேலைக்கும் இன்னும் முதலாளிகளிடம் இருந்து கூலிப்பணம் வந்து சேரவில்லை. இதனால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேறு வழியின்றி கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். எனக்குத் தெரிந்த பல விசைத்தறி கூலித்தொழிலாளர்கள் மனைவியின் தாலி முதல்கொண்டு அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த ஊரடங்கு, வேலையிழப்பை மட்டுமின்றி கந்துவட்டிக்கு கடன் படும் சமூகத்தொற்றையும் உருவாக்கி இருக்கிறது. 


இப்போது கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டாலும்கூட, வேறு புதிய பிரச்னைகளும் உருவாகி இருக்கிறது. எங்களைப் போன்ற ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்குப் பெரிய பெரிய நூற்பு ஆலைகளில் இருந்துதான் பாவு நூலும், கோனும் சப்ளை ஆகின்றன. இந்நிலையில் ஊரடங்கின்போது நூற்பாலைகளில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இப்போது உடனடியாக நூல், கோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, ஊரடங்கு அறிவிப்புக்கு பத்து நாள்களுக்கு முன்பே ஈரோடு ஜவுளி சந்தை மூடப்பட்டது. அதனால் ஏற்கனவே உற்பத்தி ஆன சரக்குகள் பெருமளவில்  தேக்கம் அடைந்துள்ளன. அப்போதே எங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டன. இதற்கு முன்பு, 60 நாள்கள் வரையிலான கடன் அடிப்படையில்கூட பாவு நூல், கே ன் சப்ளை செய்து வந்தனர். இப்போதோ, கையில் பணம் கொடுத்தால் மட்டுமே ஜாப் ஒர்க் தர முடியும் என்கிறார்கள். 


மத்திய, மாநில அரசுகள் சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பாவு நூல் வாங்கி தொழிலை ஆரம்பிக்க முடியும். எங்கள் பகுதி மட்டுமின்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டுமே 10 ஆயிரம் சிறு விசைத்தறிக் கூடங்கள் ரெண்டு மாதமாக வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றன.


அமைப்புசாரா நலவாரியம் மூலம் நெசவாளர்களுக்கு அரசு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்னும் 90 சதவீதம் பேருக்கு இத்தொகை வந்து சேரவில்லை. இத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்,'' என்கிறார் கூனவேலம்பட்டி சரவணன்.
 

elanjiyam krishnan-power loom owner

                                                            இலஞ்சியம் கிருஷ்ணன்


அடுத்து நாம் சேலம் மாவட்டம் சின்ன வீராணத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் இலஞ்சியம் கிருஷ்ணனைச் சந்தித்தோம். இவர், கேரளா ரக சேலைகளை நெய்து வருகிறார். 


''நாங்கள் வீட்டிலேயே சிறிய அளவில் விசைத்தறி பட்டறை வைத்து இருக்கிறோம். கரோனா ஊரடங்கு உத்தரவு போட்டபோது கூட ஒரு வாரத்திற்கு வேலை இருந்தது. அதன்பிறகு பாவு நூல் இல்லாததால் 50 நாள்களாக பட்டறையில் வேலை இல்லாமல் சும்மாதான் இருக்கிறோம். 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் புதிதாக இரண்டு தறி மெஷின்களை வாங்கினோம். இப்போது வேலை இல்லாததால் கடனை எப்படிக் கட்டி முடிப்போம் என்றே தெரியவில்லை.
 

http://onelink.to/nknapp

 


கேரளா ரக சேலை நெய்தால், ஒரு சேலைக்கு 55 ரூபாய் கூலி கிடைக்கும். கேரளாவிலும் கரோனா பாதிப்பால் இங்கிருந்து அனுப்பிய சரக்குகள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. நாங்கள் இரண்டு மகன், மருமகள்கள், மகள், பேரப்பிள்ளைகள் என ஒன்றாக இருப்பதால் எங்கள் குடும்பம் கொஞ்சம் பெருசுங்க. அதனால் கடன் வாங்கித்தான் குடும்பத்தின் அத்தியாவசியச் செலவுகளைச் சமாளித்து வருகிறோம். களஞ்சியம் மகளிர் குழு 10 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துச்சு. அதுவுமில்லாமல் வெளியிடத்தில் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித்தான் குடும்பச் செலவுகளைச் செய்து வருகிறோம்.

 


தொழில் அபிவிருத்திக்காக வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டித் தள்ளுபடி சலுகையாவது அரசு வழங்கினால்தான் எங்களால் ஓரளவுக்கு எழுந்து வர முடியும்,'' என்கிறார் இலஞ்சியம் கிருஷ்ணன்.


சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய கடன்களை வழங்க சில முன்னெடுப்புகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களை இழுத்தடிக்காமல் புதிய கடன்களை வழங்க வேண்டும்; அதேநேரம், அவர்கள் ஏற்கனவே பெற்ற தொழில் கடனுக்கு வட்டித் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட அளவிலான சிறு கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வதன் மூலம் மட்டுமே சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களை முற்றாகக் காப்பாற்ற முடியும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.