Skip to main content

பொற்பனைக்கோட்டையில் அயலக தொடர்பை வெளிப்படுத்தும் குடுவையின் அடிப்பாகம், பிணைப்பு முகட்டு ஓடுகள் கண்டுபிடிப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் கடந்த வாரம் முதற்கட்ட அகழ்வாய்வுப் பணி நிறைவடைந்த நிலையில், தொடர் மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் கோட்டையின் வடக்கு வாயிலின் மேற்பரப்பில் செங்கல் சிதிலங்களுக்கு இடையே கோட்டையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சுடுமண் பிணைப்பு முகட்டு ஓட்டினைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, "பொற்பனைக்கோட்டையின் நான்கு புறவாயில்கள், வழிபாட்டு ஆலயங்கள், உயர்ந்த கோட்டைச் சுவர், கொத்தளத்தின் வடிவம், புற, அகக்கோட்டைகள், அக - புற அகழிகள், அகக்கோட்டையின் மையத்தின் மேற்புறமாக அரண்மனை மேடு, கிழக்குப்புறமாக வாவிகுளம் என ஒட்டுமொத்த கட்டுமான அமைப்பும் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாதவாறு சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அதே வடிவமைப்புடன் காணப்படுகிறது. 

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

கோட்டையின் செழுமைக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு சான்றுகள் தொடர்ச்சியாகக் கிடைத்துவருகின்றன. முன்னதாக பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப் பகுதியில் மேலாய்வு மேற்கொண்டபோது ஆம்போரா குடுவையை ஒத்த சுடுமண் குடுவையின் அடிப்பாகத்தைக் கண்டறிந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு இயக்குநர் முனைவர் இள. இனியன் அவர்களிடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

 

ஆம்போரா குடுவை:

ரோம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட திரவப்பொருட்கள் சிறப்பு வடிவிலான ஆம்போரா குடுவைகளில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வணிகம் செய்யப்பட்டுள்ளதற்கான ஏராளமான சான்றுகள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன. இந்தியாவில் குஜராத்தில் துவாரகா, கேரளாவில் பட்டிண, புதுச்சேரியில் அரிக்கமேடு, ஆந்திராவில் சந்தரவல்லி, தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் புகலூரிலும், ஆத்தூரிலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் சில இடங்களிலும்  இக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

திரவங்களை சேமிக்கும் உள்நாட்டுக் குடுவைகள்:

ஃபிரான்சில் டூர்நுஸ், குஜராத்தில் துவாரகா, புதுச்சேரியில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த ஆம்போரா குடுவைகளின் அடிப்புற அமைப்பைப் போன்றே பொற்பனைக்கோட்டையிலும் சுடுமண் குடுவையின் அடிப்பரப்பும் உள்ளது. இருப்பினும் குடுவையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட களிமண் வகையைப் பொறுத்தே வெளிநாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதா என உறுதி செய்ய இயலும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல்துறைத் தலைவர் பேராசிரியர் செல்வக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது உள்நாட்டு களிமண்ணில் தயாரிக்கப்பட்டு திரவப் பொருட்களை சேமிக்கும் குடுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

 

ஆம்போராவை ஒத்த சுடுமண் குடுவைகள்:

ரோம் உள்ளிட்ட மேலை நாடுகளில் ஒயின், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவும் சேமிக்கவும் கடைப்பிடித்த அதே தொழில்நுட்ப அறிவுடன் இங்கிருந்து உற்பத்தியான மருந்துப்பொருட்கள், வாசனை திரவியங்கள், எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட திரவப்பொருட்களை இவ்வகையான குடுவைகள் மூலம் உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்றிருக்கவும் வாய்ப்பிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

கோட்டை கட்டுமானங்களில்  சங்ககால  மேற்கூரை ஓடுகள்:

நான்கு வாயிற்பகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்களின் அடிப்பகுதியைக் காணமுடிகிறது. கோட்டையின் மேற்புறமதில் பகுதியில் எமது குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் கூரை ஓடுகள், ஆதிச்சநல்லூரில் 2020ஆம் ஆண்டு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதே வடிவத்துடனும் நீர்வடிவதற்கான வரிப்பள்ளம், ஆணிக்குமிழ் பொறுத்துவதற்கான துளை உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் கண்டெடுக்கப்பட்ட கூரை ஓடுகளின் வடிவமைப்பையொத்த கூரை ஓடுகள் பொற்பனைக்கோட்டையிலும் காணப்படுவது சங்ககால கட்டுமானத் தொழில்நுட்பத் தொடர்பில் ஒருமித்திருந்ததை உணர்த்துகிறது.

 

ரோமாபுரி பாணியிலான சுடுமண் பிணைப்பு ஓடு கண்டுபிடிப்பு:

பழமையான ரோமாபுரி கட்டுமானங்களில் தெக்குலா எனப்படும் சுடுமண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓடுகளின் பக்கவாட்டு பிணைப்பு பகுதியில் நீள் வாக்கிலமைந்த இம்ரெக்ஸ் என்றழைக்கப்படும் சிறிய முகட்டு ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் ஸ்கிப்டன் நகரிலுள்ள கிரவென் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதே அமைப்பிலான சுடுமண் இணைப்பு ஓட்டினை பொற்பனைக்கோட்டையின் வடக்குப்புற வாயிற் மேட்டில் கண்டுபிடித்துள்ளோம். இதன் நீளம் 6.2 செ.மீ, 3.3 செ.மீ முகட்டின் உயரம், 6 செ.மீ அடிப்புற அகலம் கொண்டதாக உள்ளது. கோட்டையின் மேற்புறகூரை அமைப்புகளில், சுடுமண் ஓடுகள், ஆணிக்குமிழ்கள் மற்றும் மரச்சட்டங்களில் பிணைக்கப்பட்டிருந்ததையும், நீள்வரிசைகளில் அமைக்கப்பட்ட ஓடுகளில் நீர் கசியாத வண்ணம் இரண்டு ஓடுகளைப் பிணைக்கும் இடத்தில் மேலிருந்து கீழாக நீள்வரிசையில் அடுக்கி சிறிய வடிவிலான பிணைப்பு முகட்டு ஓடுகள் பயன்படுத்தியிருப்பதை இக்கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்ய முடிகிறது.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

கோட்டை வீரர்களுக்கான பாதுகாப்பு அறைகள்:

இதன் மூலமாகக் கோட்டையின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகள், கொத்தளங்களில் ஓட்டினாலான கூரை வேயப்பட்டு கோட்டை பாதுகாப்பு வீரர்கள் மழை, வெயில் உள்ளிட்ட எவ்வித காரணங்களாலும் பாதுகாப்புப் பணியை தளர்வின்றி செய்திட, உரிய கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

 

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்:

பொற்பனைக்கோட்டையில் வசித்த மக்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் கிடைத்துக்கொண்டே உள்ளன. முழுமையான விரிவான தொடர் அகழாய்வுகளை பொற்பனைக்கோட்டை அரண்மனை மேட்டுப்பகுதியில் மேற்கொள்ளும்போது சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரண் மற்றும் கோட்டை குறித்த அனைத்து கருத்துகளுக்கும் வலுசேர்க்கும் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுசார்ந்து தொடராய்வுகளை தமிழ்நாடு அரசும் மத்திய, தமிழ்நாடு தொல்லியல் துறையும்  செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொற்பனைக் கோட்டை அகழாய்வில் அரண்மனை கழிவு நீர் வாய்க்கால் கண்டுபிடிப்பு?

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Palace construction discovery in Porpanaikottai excavation?

 

சங்க கால கோட்டையான பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், தினசரி ஏராளமானோர் அகழாய்வு இடத்தை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பொற்பனைக் கோட்டை அகழாய்வு தளத்தினை சனிக்கிழமை திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்தவர்களும், சாரணர் இயக்கத்தினை சேர்ந்த மாணவர்களும் காண வந்தனர். பார்க்க வந்த மாணவர்களுக்கு பொற்பனைக் கோட்டை அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, அகழாய்வின் முக்கியத்துவம், பொற்பனைக் கோட்டை அகழாய்வு குறித்தும் விளக்கம் அளித்தார்.

 

தொல்பொருட்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தினை சேர்ந்த மாணவர்கள் அகழாய்வு குறித்து  பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இதில் ஆசிரியர் சித்திரலேகா மற்றும் சாரணர் இயக்கத்தின் மாஸ்டர்  அன்பழகன் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். 

 

Palace construction discovery in Porpanaikottai excavation?

 

ஒவ்வொரு அகழாய்வுக் குழிகளிலும் கிடைத்த தொல்பொருட்களை பற்றி ஆய்வு மாணவர்களான சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். நிகழ்வின் முடிவில் ஆசிரியர், சாரணர் இயக்கத்தின் மாஸ்டர் மற்றும் பள்ளி மாணவர்கள் இங்கு பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

 

மேலும், கடந்த வாரம் வட்டச்சுவர் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த அகழாய்வில் வட்டச் சுவரை ஒட்டிய பகுதியில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அடுத்தடுத்த குழிகளில் காணப்பட்டுள்ளது. அதனால் இது சிதைந்த அரண்மனை கட்டுமானத்தின் அடிப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு குழியில் சுமார் 10 அடி ஆழத்தில் ஒரு பானை கிடைத்துள்ளது. மேலும் சுமார் 15 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் கிடைத்துள்ள பானை ஓடுகள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வாழ்விடமாக இருந்ததற்கு சான்றாக உள்ளது. அதாவது இந்தப்பகுதியில் சங்ககாலம் முதல் வரலாற்றுக்காலம் என கி.பி 16, 17ம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. மேலும் அகழாய்வில் பல சான்றுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மூக்குத்தி, தோடு

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

தமிழக அரசு தொல்லியல்துறை பொற்பனைக்கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு (LIDAR) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததைக் கண்டறிந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு பணியினை மே மாதம் 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

 

பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரராஜன் என்பவர் நிலத்தில்  4 குழிகளும் மாரிமுத்து, கருப்பையா, பழனியப்பன், ரங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழிகளும் தோண்டப்பட்டு வருகிறது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோருடன் அகழாய்வு பணிகளானது நடைபெற்று வருகிறது அகழாய்வு பணிக்கு 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.  இதுவரை வட்டச்சில்லுகள் (Hopscotch)-  49, கென்டி மூக்குகள்(Spout)- 2, கண்ணாடி வளையல்கள்(Glass Bangle)- 4, கண்ணாடி மணிகள் (Beads)- 95, சுடுமண் விளக்கு (TC Lamp)- 1, தக்களிகள்  (spindle whorl)- 2, காசு (Coin)- 1, சூதுபவளமணி (carnelian Bead)- 1 மெருகேற்றும் கற்கள் (rubbing Stone)- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு (Graffiti )2ம்  கிடைத்துள்ளது.

 

மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள் (Glazed Ware), கருப்பு நிற பானை ஓடுகள் (Black Ware ), கருப்பு- சிவப்பு நிற பானை ஓடுகள் (Black and Red Ware), மேற்கூரை ஓடுகள் (roof tile), துளையிடப்பட்ட பானை ஓடுகள் (perforated Ware)-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளது.அதை தொடர்ந்து பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் இன்று பொற்பனைக்கோட்டை அகழாய்வில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

H2 எனும் குழியில் 133.cm ஆழத்தில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு Nose Stud / ear studs ஒன்றும், B1 எனும் குழியில் 140.cm முதல் 145.cm ஆழத்தில் எலும்பு முனை கருவி (Bone point) மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய  150.cm முதல்160.cm ஆழத்தில் கார்னீலியன் (carnelian bead)  பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது. 

 

எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்ககூடியவை. தற்போது இங்கு கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆறு இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுடைய தண்டு உடைந்த தங்க மூக்குத்தி / தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

 

மேலும் அகழாய்வுக் குழிகள் ஆழப்படுத்தும் போது ஏராளமான தொல் பொருட்கள் கிடைப்பதுடன் பண்டை தமிழர்களின் நாகரீகம் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.