Skip to main content

போஸ்டரை பார்த்து ரசித்த எடப்பாடி... கே.சி.பழனிசாமி 

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

 

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், பொதுச்செயலாளர் தேந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன் ஜூன் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சில அறிவுரைகள் மட்டும் வழங்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர்கள் சிலர், தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்தனர். 

 

admk - ops - eps


 
பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்தது செல்லாது, மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற விதிகளும் அதிமுக பைலாவின்படி பொருந்தாது என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
 

''ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரன் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியதற்கு, ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’  என  போஸ்டர்கள் ஒட்டியதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை ரசித்தார்கள். நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முயற்சிகள் நடந்திருக்கலாம். 
 

தர்மயுத்தம் நடத்தியதாக கூறிய ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் இணைந்த பிறகு தேனியில் பேசியபோது, பிரதமர் சொல்லித்தான் சேருகிறேன் என்று கூறியிருந்தார். ஜூன் 11ஆம் தேதி தங்கமணி, வேலுமணி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக பாதுகாத்துவிட்டதாக தோன்றுகிறது. 
 

ஜூன் 12ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 250 பேரை தவிர அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் பொதுச்செயலாளர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜகவை விட்டு தனியாக இயங்க வேண்டும். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 
 

தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று இவர்கள் எடுத்திருக்கக்கூடிய முடிவு இன்னும் ஒரு சில மாதங்கள் ஓடும். அவ்வளவுதான். திமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளது. அதற்கான ஓட்டெடுப்பு வரும். ஆகையால் இப்போதிலிருந்தே சில பணிகளை செய்துகொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவி வேணும், வேண்டாம் என்ற வாதம், பிரதிவாதத்தை வைத்துக்கொண்டே வருகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் வேண்டும் என்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் வைத்துக்கொள்வோம் என்று முடிவு எடுப்பார்கள். பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என்று இவர்கள் நினைத்திருந்தால், முடிவு செய்திருந்தால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரியவர்கள் மீதும், போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 
 

தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக உள்ள பாஜகவை விட்டு தள்ளி நிற்க வேண்டும், பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்க வேண்டும் என்றுதானே சொன்னேன். பாஜகவால்தான் தோற்றோம் என்று அமைச்சர் சிவி சண்முகம் சொன்னார், பாஸ்கர் சொன்னார், மேலும் பலர் சொன்னார்கள். நான் சொன்னதைத்தானே அவர்களும் சொன்னார்கள். என் மீது நடவடிக்கை எடுத்தார்களே? ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

kcpalanisami



விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்கின்றனர். அதில் பிரபு, ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 
 

சசிகலா இன்றைய நிலைமையில் தண்டனை குற்றவாளி. சிறையில் உள்ளார். அவரது தண்டனைக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க முடியும். தண்டனை பெற்ற குற்றவாளிகள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். அப்படிப் பார்க்கும்போது சசிகலா தலைமை பொறுப்புக்கு வருவது சாத்தியமில்லாதது''. 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.