Skip to main content

உங்க அம்மாகிட்ட இப்படி பேசுவியா!!! கொதிக்கும் பொன்வண்ணன்

Published on 10/05/2018 | Edited on 10/05/2018

சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாசமான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் அத்திரைப்படத்தை தடைசெய்யக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன.  இயக்குனர் பாரதிராஜா,தயாரிப்பாளர் சங்கிலி கருப்பன், விஜய்மில்டன் என திரைத்துறையில் இருப்பவர்களும் எதிர்த்து வருகின்றனர். குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன் இதுபற்றிய கருத்துக்களை நக்கீரனுடன் பகிர்ந்துள்ளார்.

 

 

நானும் இளைய வயதை கடந்து வந்தவன்தான் எனக்கும் தெரியும் 16 வயதிலிருந்து 22 வயது வரை உடல் மாற்றம் பெரும், குரல் உடையும், மீசை அரும்புவிடும், உடையில், சிகை அலங்காரத்தில் கவனம் வரும் இந்த மாற்றத்தை  எல்லாம் நம் உடலே டிசைன் பண்ணுகிறது. நான் படிக்கும் வயதிலேயே சில நண்பர்கள் புகைபிடிப்பார்கள், சிலநாள் தண்ணி அடிப்பார்கள் அப்படி செய்தால்தான் ஆம்பள என்று சொல்லுவார்கள். இந்த மனப்போக்கு அப்போது எல்லோரிடமும் இருந்தது, ஆனால் எனக்கு அப்போதே அந்த கருத்தில் வேறுபாடு இருந்தது. நான் ஆண் என்பதை காட்டிக்கொள்ள வேறு ஒரு தளத்தை தேர்ந்தெடுத்தேன்.

 

எனக்கும் சிறுவயதிலேயே படம் பார்க்கும் ஆர்வம் இருந்தது நான் சிறுவயதில் பார்த்து இன்றுவரை நினைவிருக்கும் படம் துலாபாரம். அதன் பிறகு பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், மகேந்திரன் சாரோட மெட்டி, புதிய வார்ப்புகள், பாலச்சந்தருடைய அரங்கேற்றம் இப்படி எல்லா படங்களும் எனக்கு சினிமாவில் ஈர்ப்பை தந்தது. அப்பொழுதே "எங்க பாட்டன் சொத்து'' என்ற படம் வந்தது, கர்ணன் எடுத்தப்படம். அந்த படத்தின் ஒரு காட்சியில் ஃபுல் வைய்ட் லென்ஸில் ஒரு ஷார்ட் வந்தது. ஒரு பாடல் காட்சி அதில் ஹீரோயின் உடல் தெரியும்படி லேசான சீலையை அணிந்துகொண்டியிருப்பார். அந்த போஸ்டர்தான் எல்லா இடத்திலும் ஒட்டப்பட்டது. அந்த படத்தை பார்க்க பசங்க எல்லாரும் ஓடுவார்கள்,12 மணிக்கு ஸ்கூல கட்  அடிச்சிட்டு. அந்த பீரியட்ல அந்தப்படம். அதேபோல் நெஞ்சிலே துணிவிருந்தால் சந்திரசேகர் எடுத்த படம். அதுல கபடியை மையமா வெச்சு வந்த அந்த படத்துல கை டச் ஆகுற ஒரே ஒரு ஷார்ட் வரும் அந்த ஷார்ட்தான் போஸ்டரா ஒட்டப்பட்டு ஊரே பொய் போஸ்டருக்காக படம் பாத்துச்சு.



 

IAMK

 

நான் சென்தாமஸ் மௌண்ட்ல தங்கியிருந்தேன். அப்போ அங்கே பரங்கிமலை ஜோதி அப்பிடிங்கற ஒரு கான்சப்ட் இருந்தது. அன்று  ஜோதின்னு ஏற்றப்பட்டது இன்று தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஜோதி ஏற்றப்பட்டிருக்கு. இதன் பிறகு கோபத்தில் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டது. பல நல்ல படங்கள் கொடுத்தேன் மக்கள் ஏத்துக்கலயா, இந்தா  இந்த மோசமான படம் பாரு என இயக்குனர்களால் இதுபோன்ற படம் எடுக்கப்பட்டது. ஆனால் இப்போ இதுதான் வியாபாரம், இதுதான் கான்செப்ட் இதைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் என்றாகிவிட்டது. 

அறிவியல் வளராத, ஒரு முன் உதாரணம் கூட இல்லாத ஆதிமனிதன் வாழ்ந்த காலகட்டத்திலேயேகூட மனிதன் உடலில் இரண்டு விஷயங்களை  மறைக்க நினைத்தான் அதனால்தான் இலைகளையும், தளைகளையும் உடையாக உடுத்தினான்.  அப்படி மறைக்க படவேண்டும் என்பது யாராவது சொல்லிக்கொடுத்து வந்ததா? என் உடலில் எது தெரிந்தாலும் பரவாயில்ல ஆனா இது மறைவு பகுதி என்ற எண்ணம் தானாகவே மனிதனுக்கு தோன்றியது இது நீங்களோ நானோ கண்டுபிடிச்சதில்ல.

 

 

உடலுக்கென மறைக்கும் பகுதி என படிப்பும் அறிவியலும் இல்லாத காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இது.  ஆனால் இன்று அறிவியல் வளர்ந்துவிட்டது என்பதற்காக அதை எடுத்து எறிவேன் என்றால் எடுத்து எறியுங்க. பக்கத்திலுள்ள கேரளாவில் மார்பு சேலைக்கு வரிவிதிக்கப்பட்டது. மார்பு சேலை என்பது சாதாரணமல்ல அதுவொரு பரிணாமவளர்ச்சி நீ சினிமா மூலம் காசுப்பாக்க அத தூக்கி எறியணும்னு நெனச்சா முதல்ல செய்ய வேண்டியது உன் வீட்டு பெண்களுக்கு இதை செய்யணும். சொந்த வீட்டுல இருந்து தொடங்கு என் அம்மா மார்பு சேலைய எடுப்பேன், என் தங்கச்சியோட மார்பு சேலைய எடுப்பேன், என் அம்மாகிட்ட டபுள் மீனிங்ல பேசுவேன். அம்மா போடும்மா.... சோறும்மா.. உன் தங்கச்சிகிட்ட சொல்லு. இப்பவோரு ட்ரைலர் விட்ருக்கீங்களே அந்த ட்ரைலர உன் தங்கச்சிகிட்ட பேசுற தைரியம் இருக்கா கேட்டு பாரு கேட்டுட்டு உன் காத சொன்னம்மா'னு சொல்லு, நீ சொல்லிப்பாரு.

 

இந்த சமூகம் எல்லாத்தையும் அக்செப்ட் பண்ற மனநிலையில் இருக்கு, ஆனால் வரைமுறையோட.. உங்களோட தவறுகளை அங்கீகரிக்குது. உங்க வக்கிரத்தையும் அங்கீகரிக்குது. ஆனால் எல்லைமீறும்போது இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க அப்படிங்கிறது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது'னு அர்த்தம் இல்லை.

 

IAMK

 

இந்த படம் ஒரு அடல்ட் படம்தானே அவர்கள் மட்டும் பாருங்கள் என்றுதானே படக்குழுவே சொல்லுது இதை ஏன் எதிர்க்கணும் அப்டீன்னு சொல்லுறவங்களுக்கு... நான் சொல்லுவது ஒண்ணுதான். எடுத்துப்பாக்க உங்களுக்கு தைரியம் இருக்கும்பொழுது எதிர்த்து பார்க்க எனக்கு உரிமை இருக்கு. நான் ஒன்னும் தியேட்டர்ல படம்பார்க்க போறவங்களோட சட்டைய பிடிச்சு கேட்கலையே. எடுக்க அவங்களுக்கு உரிமை இருக்கும்போது எதிர்க்க எனக்கு உரிமை இருக்கு.   

 

 

 

தமிழ் சினிமாவில் கொச்சையாக பேச பயன்படுத்தப்படுற கிரவுண்ட் எது தெரியுமா அது காமெடிதான். எனக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி சார் மேல அளவு கடந்த மரியாதை இருக்கு ஏன்னா அவர் தனிப்பட்ட முறையில ஒரு படிப்பாளி, புத்திசாலி ஆனா அவர் படங்களில் பேசுற டபுள் மீனிங் வசனத்துல எனக்கு உடன்பாடு இல்ல. சாதாரண வசனங்களை டபுள் மீனிங் வசனங்களா மாத்தினதுல அவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கு. ஆனா அத அவரு தனக்கு கிடைச்ச அங்கீகாரமா நேனச்சிகிட்டு இருக்காரு. அவோரோட பாயிண்ட் ஆப் வியூவ்ல அதுக்காகவே அவர படத்துல நடிக்க கூப்புடுறாங்க'னு கூட வெச்சுக்கலாம். ஆனால் அவருக்கு முன்னவே நடிக்க வந்த கலைவாணரும், தங்கவேலுவும் ''நாசமா போ'' அப்டிங்குற வார்த்தைகள கூட பேசி நடிக்கமாட்டோம்'னு ஆளுமையா இருந்தாங்க. ஏன் நம்ம கவுண்டமணி செந்தில் அண்ணா இருந்தாங்க, வடிவேலு இப்படி பல நடிகர்கள் காமெடி செய்தாலும் அதில் டபுள் மீனிங் இல்லாம தானே பண்ணுனாங்க, இன்னு எவ்வளவோ பேரு இருக்காங்க. சினிமாவில் காமெடி தான் டபுள் மீனிங்கும், கொச்சையும்  சாதாரணமா பயன்படுத்தப்படுகிற இடம். சீரியஸ் படத்துல அத பண்ண முடியாது. காமெடி என்பது ஒரு ஆர்ட் அந்த ஆர்ட்ட வெளிக்காட்டி புதிய முகம் கொடுத்து உலகம் முழுவதும் சார்லி சாப்ளின் எடுத்துக்கொண்டுபோனான். அவரை நீ உதாரணமா எடுத்துக்கொள்ள வேண்டாம் ஆனா அதே காமெடிங்குற அந்த ஆர்ட்டுக்கு கொச்சையான  வடிவம் கொடுக்கறதுதான் இப்போ இங்க நடக்குது.

 

இதுமாதிரி விஷயங்கள் இங்க நடக்கலையா,இனிமேல் நடக்காம இருக்காதா, இனி இந்த மாதிரி படங்கள் வெளிவராம இருக்குமா, நெட்ல அத்தனை படங்கள் இருக்கே அதெல்லாம் அவன் பார்த்தவன்தானா, யங்ஸ்டர்ஸ் வெளில பேசறதெல்லாம் நீங்க கேட்டதில்லையா அதெல்லாம் உங்களுக்கு தெரியலையா இப்படியெல்லாம் என்னிடம் கேட்டா,  ''எனக்கும் தெரியும்'' ஆனால் என்னளவில் நான் அதை செய்யமாட்டேன் என சொல்லும்பொழுது எதிர்ல அதையே ஒருத்தன் செய்யுறான் என்றால் எடுக்கிற உரிமை அவனிடம் இருக்கு, எதிர்க்குற உரிமை எனக்கு இருக்கு அவ்வளவுதான் முடிஞ்சுபோச்சு. நீ ஏத்துக்கிறியா போய் பாரு, ஆனா நான் எதிர்ப்பேன். இத அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. மலேசியாவில் இந்த படம் ரிலீஸ் ஆகல என்பது தகவல். காரணம் இந்தப்படம் டபுள் மீனிங்ல இருக்கு ஆனா இங்க நம்ம தமிழக அரசாங்கம் இது உரிமை நாங்க மூணு ''ஏ'' சேர்டிவிக்கேட் கொடுத்து வெச்சிருக்கோம் விருப்பம் இருந்தா உள்ளபோ'னு சொல்லி அங்கீகரிக்குது.



 

IAMK

 

 

 

எவ்வளவோ விஸ்காம் ஸ்டூடென்ட்ஸ் பல ஆர்வம், கனவுகளை சுமந்துகொண்டு சினிமாவிற்கு வருகின்றனர். பேய் படங்களில் உதாரணமாக எடுத்துக்கொண்டால் காஞ்சனா, பீட்ஸா மிக முக்கியமான படங்கள். என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் சென்னை 28, வெயில், பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்ரமணியபுரம் போன்ற படங்களெல்லாம் பத்து வருடத்திற்கான தமிழ் சினிமாவின் லீட் படங்கள் என நினைக்கிறேன். அதேபோல் காதல் மற்றும் ஆட்டோகிராஃப். ஆர்ட் ரீதியா செக்ஸ் என்ற விஷயத்தை அணுகுவதும் கொச்சையாக அணுகுவதும் தவறு. ஆர்ட்டில் செக்ஸ் சொல்வதற்கும், கொச்சையாக செக்ஸ் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கு, தாசி என்பவள் நெற்றியில் ஒரு பொட்டு வைத்துக்கொண்டு பாட்டுப்பாடி வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு, வீணை வாசித்துக்கொண்டு தன்னால் குடும்ப வாழக்கை வாழமுடியாமல் அப்படி ஒரு வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கும், ரோட்டில் வாயில் வெத்தலைய போட்டுக்கிட்டு நின்னு வா வா'னு சொல்றதுக்கு வித்தியாசம் இல்லையா. கலையாய் செக்ஸை காமிப்பதற்கும் கொச்சையாய் காமிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. இரண்டும் ஒன்றுதான் ஆனால் கலை என்பது வேறு, கொச்சை என்பது வேறு. வடிவேல் சொல்றாரு, பெண்கள் பலபேர் திரும்ப திரும்ப பார்க்குறாங்க அதுனால அந்த மாதிரி பேசிறக்கூடாது, பேசி நடிக்க கூடாது'னு இத்தனைக்கும் அவரும் பம்'காட்டி நடிச்சருக்காரு. பம்'ல அடிபட்ட மாதிரி கூடையெல்லாம் கட்டிக்கிட்டு நடிச்சி காமெடி பண்ணிருக்காரு. அதுவெல்லாம் டபுள் மீனிங் இல்லாத ஆர்ட்டாதான் தெரியுது. அதுல கலைஞனோட மனசு தெரியுது. ஆனா இந்த மாதிரி படத்தை பார்க்கும் போது எடுத்தவர்களின் நோக்கம் சரியில்லை'னு எனக்கு தெரியுது. நீ இளைஞர்களோட வக்கிரத்த அல்லது அந்த பகுதியை காசாக்கணும்'னு நெனைக்கிற உன் நோக்கம் தப்பானது எனவே எதிர்க்கிறேன்.  

 

எஸ்.ஜெ.சூர்யா எடுத்த ''வாலி'' படம் பல சிக்கலான கதைக்களம் கொண்டது ஆனால் அதை சிறப்பா கையாண்டு அதை நல்லா காட்சிபடுத்தினார் மனுஷன். அதேமாதிரி ''குஷி'' ஆனா அதெல்லாம் தாண்டி எடுத்த தன் சொந்த படமான  ''நியூ'' ல அந்த இமேஜ தவறவிட்டார். இப்போவர அதுல இருந்து மீள முடியல, போராட வேண்டியிருக்கு. இந்த சொசைட்டி அப்படியெல்லாம் எல்லாருக்கும் தூக்கி கொடுக்காதுங்க அப்படி கொடுத்தால் தூக்கிவச்சு கொண்டாடுவார்கள். ஒருவேளை இந்த படத்தோட இயக்குனர் இதுதான் தன்னோட இமேஜ் அப்டீ'னு  நெனச்சிடான்னா, இந்த இமேஜ்'ல ட்ராவல் ஆனா இதுக்கான விலைய அவனுக்கு வாழ்நாள் முழுவதுக்கும் கொடுக்கவேண்டியிருக்கும்.

Next Story

“தரம் தாழ்ந்த மனநிலை”; அமீர் - ஞானவேல் பிரச்சனை குறித்து பொண்வண்ணன்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

ponvannan about ameer gnanavel raja paruthiveeran issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். 

 

இப்படி திரை பிரபலங்கள் ஒவ்வொருத்தராக இந்த விவகாரம் தொடர்பாக பேசி வரும் நிலையில், பருத்திவீரன் படத்தில் நடித்த பொண்வண்ணன், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேலின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. 

 

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்துக் கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான்  வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. 

 

இதனால் தான்,பணத்துக்காக தனது படைப்பிற்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும்  கிடைத்த தேசிய விருது அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயரியது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

 

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

 

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

"தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" - பொன்வண்ணன் 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

actor ponvannan talks about true farmers sacrifice  

 

சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பொன் வண்ணன் பேசியதாவது...

 

"நீண்ட நெடிய பாரம்பரியமிக்க விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். அந்த விவசாய குடும்பத்தில் முதலில் படித்த பையனும் நான். படிப்பு என்பது பள்ளி பாட புத்தகத்தை தாண்டியும் நூலகமே கதி என்று இருந்தவன். அது ஒரு முரண்பாடான வாழ்க்கை. என்னுடைய தந்தை கிராமத்துச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர். விண்மீன்களின் நகர்வுகளையும், பறவைகளின் ஒலிகளையும் வைத்து நேரத்தைக் கணக்கிடும் அளவுக்கு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்.

 

அவரிடம் பெரும்பாலும் மூணு அல்லது நாலு வேட்டி தான் இருக்கும். என்னுடைய அப்பாவை நான் பெரும்பாலும் கோவணத்தோடு தான் பார்த்து உள்ளேன். அவர்  எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், அந்த கோவணத்தின் மேல் ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு தோளில் துண்டை போட்டுக்கொண்டு செல்வார். மாட்டு வண்டியில் போகும் கிராம வாழ்க்கை சூழல் இருந்தது. என்னுடைய அம்மா காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு காலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு சென்று விடுவார்.

 

மாலை நாலு மணிக்கு எல்லாம் பள்ளி முடிந்து வரும் போது நேராக தோட்டத்திற்குச் சென்று அங்கு அம்மாவிற்கு உதவியாக அங்குள்ள வேலைகளைச் செய்வேன். புதன்கிழமை அன்று எங்கள்  ஊரில் சந்தை கூடும் நாட்களில் காய்கறிகளை எங்க அம்மா தலையில் சுமந்து கொண்டு செல்வார். அவருக்கு பின்னாலேயே நானும் காய்கறிகளைச் சுமந்து கொண்டு செல்வேன். இப்படி செல்லும் போது பள்ளி நண்பர்கள் யாராவது நம்மை பார்த்து விடுவார்களா என்று நினைத்துக் கொண்டே செல்வேன். இவ்வாறு செல்வதை சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாகக் கூட கருதி இருக்கிறேன்.

 

வயது வயது கூடக் கூட எனக்கு விவசாயம் ஒத்து வரவில்லை. படிப்பும் கனவும் என்னை வேறு பக்கம் இழுத்துச் சென்றது. கம்யூனிச வாழ்க்கை, நாடகத்துறை, திரைத்துறை என  வந்த பிறகும் கூட என்னுடைய அப்பா கடைசி வரைக்கும் விவசாய சூழலில் இருந்து மடிந்து விட்டார். ஆனால் என்னுடைய படிப்பு கற்று கொடுத்தது விவசாயத்தை விட்டு விட்ட நீ ஒரு முட்டாள் என்று. அதற்குள் வாழ்க்கை சூழல் மாறிவிட்டது. நான் மீண்டும் கிராமத்திற்குச் செல்லும் போது எதை இழந்தேனோ அதை  உறவினர்கள்  மற்றும்  நட்பின் மூலம்  அதை மீண்டும் பெற முயற்சிக்கிறேன்.

 

மனித இனம் கண்டுபிடித்த மிக கொடூரமான, பரிதாபமான ஒரு தேர்வு முறை விவசாயம். விவசாயம் என்பது மற்ற தொழில்களை போன்று சாதாரணமானது  இல்லை. இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்தோடு இழப்புகளையம் சந்திக்க வேண்டி இருக்கிறது. பிரசவத்தில் ஆடு, மாடு இறந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். வறட்சியால் பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்காக எல்லாம் என் தந்தை வீட்டையோ, சமையல் அறையையோ மாற்றியது இல்லை. நிலத்தை வியாபாரத் தன்மையோடு அடையாளம் காட்டும் சூழல் வந்து விட்டது. இளைஞர்கள் முகநூலில் விவசாயத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் விவசாயம் செய்வது என்பது  ஒருவர் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு பெரிய தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" என்றார்.