Skip to main content

2021ல் ரஜினி கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்! - சொல்கிறார் பொங்கலூர் இரா. மணிகண்டன்

Published on 13/03/2020 | Edited on 14/03/2020

போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களை   தெரிவித்தார்.

 

PONGALUR MANIKANDAN



ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ''ரஜினி விரும்பும் அரசியல் எழுச்சி உருவாக எல்லோரும் திரளுவோம். அரசியல் புரட்சி உருவாக மக்களிடையே புரட்சியை ஏற்படுத்துவோம். ரஜினியை ஆதரித்து கொங்கு மண்டலத்தில் புதிய இயக்கம் தொடங்குவோம்' என்று பொங்கலூர் இரா. மணிகண்டன் நக்கீரன் இணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதையடுத்து பொங்கலூர் இரா. மணிகண்டனை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் கட்சித் தொடங்குவதற்காக ரஜினி வைத்துள்ள மூன்று திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமாகும். அது சாத்தியமானால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்.

சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது. இந்தத் திட்டங்கள் எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனரே?

தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகளும் சாதாரண கட்சி கிடையாது. இந்தத் திட்டங்களை முன்பே கூறியிருந்தால் அதை திசை மாற்றி இருப்பார்கள். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதில் ஒரு நல்லதும் இருக்கிறது. 
 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே கட்சியில் இருப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு அது தேவை இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆட்சி அமைப்பதற்காக ஒரு அமைப்பு தேவை. ஆட்சி அமைத்தபிறகு மக்களுக்கு எது தேவையோ, அது ஆட்சியின் மூலம் செய்யப்படும். அதன் பிறகு கட்சி அமைப்பு தேவையில்லையே. அந்த அமைப்பு அடுத்த தேர்தலுக்குத்தான் தேவைப்படும்.

இது உங்களுடைய நிலைப்பாடாக இருந்தால் அரசியல் கட்சிக்கு நிர்வாகிகள் வருவார்களா?

கண்டிப்பாக வருவார்கள். இது வரை இல்லாத ஒரு புது மாதிரியான விஷயம் இதுதான். வெளிநாடுகளில் இப்படித்தான் உள்ளது. 24 மணி நேரமும் கட்சிதான் தொழில் என்று இருக்க கூடாது. அதை மாற்றுவதற்காகத்தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய அரசியல் கட்டமைப்புதான் இருக்கும் என்றால் ரஜினி தேவையில்லையே. புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது நடைமுறை சாத்தியமும் கூட. கட்சி நிர்வாகிகளும் கட்சி பதவி எதுவும் தேவையில்லை, ஒரு மாற்றம் நடந்தால் மட்டும் போதும் என்றுதான் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் 30 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராமல் இருக்கிறார்கள். அவர்கள் செலுத்தும் வாக்குத்தான் இரண்டு கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சிக்கு கொண்டுவருகிறது. அவர்கள் மத்தியில் ரஜினி கூறிய செய்தி சென்றிருக்கும்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு என்று தெரிவித்திருக்கிறார். தேர்தலில் ரஜினி ஒரு இளைஞரை நிறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சிக்கு வர மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவும், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் ஒரு வல்லவரை வேட்பாளராக நிறுத்தும் போது, அந்த இளைஞரின் வெற்றி எப்படி சாத்தியமாகும்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பண விநியோகம் நடத்தியது. ஆனால் மக்கள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதே போல் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்தார்கள். ஆனால் மக்கள் பணம் கொடுத்தவரை தோற்கடித்து விட்டு, பணம் கொடுக்காதவர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆரம்பித்தில் மக்கள் பணத்திற்காகத்தான் வாக்களித்தார்கள். அனைவரையும் சொல்லவில்லை. ஆனால் தற்போது மாற்றம் வந்துவிட்டது. கட்சிக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற அளவிற்கு மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் கமல் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளும் அப்படித்தான். இது எல்லாம் விலைமதிப்பில்லாத வாக்குகள். தற்போது பணம் கொடுப்பவர்களுக்கு எதிராகவே மக்கள் திரும்புகிறார்கள். 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



கட்சிக்கு இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமா?. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக அறிவித்து, அவரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது. அதன் பிறகுதான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்தார். அப்படி இருக்கும் போது இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவது தமிழக அரசியலுக்கு ஒத்து வருமா?

நாம் அரசியலை மக்களிடம் அப்படியே பழக்கி வைத்து விட்டோம். இனிமேல் மக்கள் ஒரு அமைப்பிற்காக ஓட்டு போட வேண்டும். ரஜினிதான் நாட்டை ஆள வேண்டும் என்று இல்லையே. நல்லவர் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை ரஜினி கூறி, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் மக்கள் ஓட்டு போடுவார்களா?

ரஜினி கூறுவதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரஜினியின் பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால் கட்சி தொடங்குவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆர் மாதிரி வர முடியாது என்று கூறுகிறார்கள். அவர் உண்மையிலேயே கட்சி தொடங்குவாரா? 2021ல் தேர்தலில் நிற்பாரா?

நான் சிறுவனாக இருந்த போது கோவை செழியனோடு சென்று ரஜினியை பார்த்தேன். அப்போது அரசியலுக்கு வருவது குறித்து பிடி கொடுக்காமல்தான் பேசினார். ஆனால் அன்று இருந்த நிலை வேறு. இன்று உள்ள நிலை வேறு. அதனால் அவர் உறுதியாக அரசியலுக்கு வருகிறார். தற்போது இவ்வாறு பேசுவது, இந்த பேச்சு மக்கள் மத்தியில் எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்பதற்காக மட்டுமே, நூறு சதவீகிதம் அவர் 2021ல் அரசியலுக்கு வருகிறார். அதிமுக, திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ரஜினியுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரும் எல்லா கட்சியில் இருந்தும் வாருங்கள் என்றுதான் கூறுகிறார். யாரையும் வெறுக்கவில்லை. அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று ரஜினி கூறுவது வரவேற்க வேண்டிய ஒன்று. 2021 தேர்தலில் ரஜினி - மற்ற கட்சியினர் என்றுதான் போட்டி இருக்கும். ரஜினியை எம்ஜிஆர்வுடன் ஒப்பிடாதீர்கள். அன்று இருந்த மக்கள் மனநிலை வேறு, இன்று உள்ள மனநிலை வேறு. தற்போது ஆட்சி மாற்றம் வேண்டாம். அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2021ல் ரஜினி வழிகாட்டுதலின் பேரில் ஆட்சி நடக்கும். அவர் கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.