Skip to main content

2021ல் ரஜினி கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்! - சொல்கிறார் பொங்கலூர் இரா. மணிகண்டன்

Published on 13/03/2020 | Edited on 14/03/2020

போயஸ் கார்டன் இல்லத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை வருங்கால முதல்வர் எனச் சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்குவதைப் பற்றிய புதிய அறிவிப்பை அவர் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அதுமட்டும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு பதவி, 65 சதவீதம் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற மூன்று திட்டங்களை   தெரிவித்தார்.

 

PONGALUR MANIKANDAN



ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ''ரஜினி விரும்பும் அரசியல் எழுச்சி உருவாக எல்லோரும் திரளுவோம். அரசியல் புரட்சி உருவாக மக்களிடையே புரட்சியை ஏற்படுத்துவோம். ரஜினியை ஆதரித்து கொங்கு மண்டலத்தில் புதிய இயக்கம் தொடங்குவோம்' என்று பொங்கலூர் இரா. மணிகண்டன் நக்கீரன் இணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதையடுத்து பொங்கலூர் இரா. மணிகண்டனை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் கட்சித் தொடங்குவதற்காக ரஜினி வைத்துள்ள மூன்று திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியமாகும். அது சாத்தியமானால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்.

சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது. இந்தத் திட்டங்கள் எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனரே?

தமிழகத்தில் இருக்கும் இரண்டு கட்சிகளும் சாதாரண கட்சி கிடையாது. இந்தத் திட்டங்களை முன்பே கூறியிருந்தால் அதை திசை மாற்றி இருப்பார்கள். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதில் ஒரு நல்லதும் இருக்கிறது. 
 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே கட்சியில் இருப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு அது தேவை இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆட்சி அமைப்பதற்காக ஒரு அமைப்பு தேவை. ஆட்சி அமைத்தபிறகு மக்களுக்கு எது தேவையோ, அது ஆட்சியின் மூலம் செய்யப்படும். அதன் பிறகு கட்சி அமைப்பு தேவையில்லையே. அந்த அமைப்பு அடுத்த தேர்தலுக்குத்தான் தேவைப்படும்.

இது உங்களுடைய நிலைப்பாடாக இருந்தால் அரசியல் கட்சிக்கு நிர்வாகிகள் வருவார்களா?

கண்டிப்பாக வருவார்கள். இது வரை இல்லாத ஒரு புது மாதிரியான விஷயம் இதுதான். வெளிநாடுகளில் இப்படித்தான் உள்ளது. 24 மணி நேரமும் கட்சிதான் தொழில் என்று இருக்க கூடாது. அதை மாற்றுவதற்காகத்தான் இது கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய அரசியல் கட்டமைப்புதான் இருக்கும் என்றால் ரஜினி தேவையில்லையே. புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது நடைமுறை சாத்தியமும் கூட. கட்சி நிர்வாகிகளும் கட்சி பதவி எதுவும் தேவையில்லை, ஒரு மாற்றம் நடந்தால் மட்டும் போதும் என்றுதான் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் 30 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராமல் இருக்கிறார்கள். அவர்கள் செலுத்தும் வாக்குத்தான் இரண்டு கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சிக்கு கொண்டுவருகிறது. அவர்கள் மத்தியில் ரஜினி கூறிய செய்தி சென்றிருக்கும்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு என்று தெரிவித்திருக்கிறார். தேர்தலில் ரஜினி ஒரு இளைஞரை நிறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சிக்கு வர மும்மரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவும், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் ஒரு வல்லவரை வேட்பாளராக நிறுத்தும் போது, அந்த இளைஞரின் வெற்றி எப்படி சாத்தியமாகும்?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பண விநியோகம் நடத்தியது. ஆனால் மக்கள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. இதே போல் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்தார்கள். ஆனால் மக்கள் பணம் கொடுத்தவரை தோற்கடித்து விட்டு, பணம் கொடுக்காதவர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆரம்பித்தில் மக்கள் பணத்திற்காகத்தான் வாக்களித்தார்கள். அனைவரையும் சொல்லவில்லை. ஆனால் தற்போது மாற்றம் வந்துவிட்டது. கட்சிக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற அளவிற்கு மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் கமல் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளும் அப்படித்தான். இது எல்லாம் விலைமதிப்பில்லாத வாக்குகள். தற்போது பணம் கொடுப்பவர்களுக்கு எதிராகவே மக்கள் திரும்புகிறார்கள். 

 

pongalur manikandan about Rajini Political Visit

 



கட்சிக்கு இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமா?. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக அறிவித்து, அவரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது. அதன் பிறகுதான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி வரை வந்தார். அப்படி இருக்கும் போது இரட்டை தலைமை என்று ரஜினி கூறுவது தமிழக அரசியலுக்கு ஒத்து வருமா?

நாம் அரசியலை மக்களிடம் அப்படியே பழக்கி வைத்து விட்டோம். இனிமேல் மக்கள் ஒரு அமைப்பிற்காக ஓட்டு போட வேண்டும். ரஜினிதான் நாட்டை ஆள வேண்டும் என்று இல்லையே. நல்லவர் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம்.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை ரஜினி கூறி, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்றால் மக்கள் ஓட்டு போடுவார்களா?

ரஜினி கூறுவதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரஜினியின் பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால் கட்சி தொடங்குவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர் கட்சி தொடங்கினாலும் எம்ஜிஆர் மாதிரி வர முடியாது என்று கூறுகிறார்கள். அவர் உண்மையிலேயே கட்சி தொடங்குவாரா? 2021ல் தேர்தலில் நிற்பாரா?

நான் சிறுவனாக இருந்த போது கோவை செழியனோடு சென்று ரஜினியை பார்த்தேன். அப்போது அரசியலுக்கு வருவது குறித்து பிடி கொடுக்காமல்தான் பேசினார். ஆனால் அன்று இருந்த நிலை வேறு. இன்று உள்ள நிலை வேறு. அதனால் அவர் உறுதியாக அரசியலுக்கு வருகிறார். தற்போது இவ்வாறு பேசுவது, இந்த பேச்சு மக்கள் மத்தியில் எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்பதற்காக மட்டுமே, நூறு சதவீகிதம் அவர் 2021ல் அரசியலுக்கு வருகிறார். அதிமுக, திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ரஜினியுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரும் எல்லா கட்சியில் இருந்தும் வாருங்கள் என்றுதான் கூறுகிறார். யாரையும் வெறுக்கவில்லை. அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று ரஜினி கூறுவது வரவேற்க வேண்டிய ஒன்று. 2021 தேர்தலில் ரஜினி - மற்ற கட்சியினர் என்றுதான் போட்டி இருக்கும். ரஜினியை எம்ஜிஆர்வுடன் ஒப்பிடாதீர்கள். அன்று இருந்த மக்கள் மனநிலை வேறு, இன்று உள்ள மனநிலை வேறு. தற்போது ஆட்சி மாற்றம் வேண்டாம். அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2021ல் ரஜினி வழிகாட்டுதலின் பேரில் ஆட்சி நடக்கும். அவர் கைகாட்டக் கூடியவர்தான் முதல்வர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.