Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்!  

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என மாறி மாறி சென்றுகொண்டிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கைகளில் சென்றடைந்துள்ளது. முதலில் இந்த வழக்கை விசாரித்த லோக்கல் போலீஸ் எஸ்.பி.பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார். "இந்த சர்ச்சையால் வெளியான வீடியோக்களுக்கு மேல் வேறு எதுவும் இல்லை' என்றார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் வழக்கு சென்றது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யான ராஜேசுவரி இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது.

 

pollachi issues



வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. லோக்கல் போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரை தவிர வேறு எந்த புதிய புகாரும் வரவில்லை. அந்தப் புகாரிலும் லோக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை தவிர புதிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட வீடியோவிலேயே ஆறு பெண்கள் இடம் பெறுகிறார்கள். அவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நக்கீரன் அந்த ஆறு பெண்களில் ஒருவரை கண்டுபிடித்து பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டது. அந்த பெண்ணிடம் கூட புகாரை பெற வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் தயாராக இல்லை என குமுறல்கள் எழுந்தன.

 

pollachi issues



இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அவர்கள் புகார் தெரிவிக்க பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பெண்கள் சந்திக்க முடியவில்லை. எனவே புகார் தெரிவிக்க ஒற்றைச் சாளர முறை ஒன்றை அறிவிக்க வேண்டும். ஒரு உயர் பெண் போலீஸ்அதிகாரி தலைமையில் புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சிகிச்சை, சட்ட உதவிகள், பெண் சமூகவியலாளர்கள் உதவி வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ராதிகாவும், சென்னை உயர்நீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டன.


பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., "நாங்கள் புதிய குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறோம். அவையெல்லாம் விசாரணை நிலையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினி சி.சரவணன் அடங்கிய பெஞ்ச் "இனிமேல் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும். வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் இனிமேல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது. பொள்ளாச்சி வழக்கு மறுபடியும் புது வேகம் பெற்றுள்ளது. அதனால் வழக்கில் தொடர்புடைய ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள் கலங்கிப் போயுள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

 

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.