Skip to main content

ஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம். பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய பிரிவுகளில் குற்றவாளிகளை சேர்த்திருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடைய பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி அதற்குப் பின் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களை கற்பழித்து அதை வீடியோ படமாக்கி பாதிக்கப்பட்ட பெண்களை பிளாக்மெயில் செய்தார்கள் என சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சொல்கிறது.

 

pollachi issues



அடுத்த வழக்கு, ஒரு பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்ததாக சி.பி.ஐ. சொல்லியிருக்கிறது. முதல் வழக்கில் சபரிராஜன் (எ) ரிஷ்வந்த், திருநாவுக்கரசு, சத்தீஷ், திருநாவுக்கரசுவின் உதவியாளரான வசந்தகுமார் மற்றும் மணி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்கிறது சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை.

முதல் வழக்கை ஒரு பெண் அதிகாரியும் இரண்டாவது வழக்கை ஒரு ஆண் அதிகாரியும் விசாரிக்கிறார்கள். இதில்தான் ஒரு புதிய ட்விஸ்ட் வந்திருக்கிறது. குற்றவாளிகள் அனைவர் மீதும் போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இப்பொழுது சாதாரண பாலியல் வழக்கு குற்றவாளிகளாகத்தான் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் சிறையில் இருக்கிறார்கள். குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும் இந்தக் குற்றவாளிகள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யவில்லை.

 

admk



அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் பெரிய பிரச்சினை வரும். அவர்களை மீடியாக்கள் பின்தொடரும் என்பதால் அவர்கள் சிறைக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறையில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரியின் அறையிலேயே வெளியில் இருக்கும் நண்பர்களை சந்திக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கும்மாளம் என மதுவகைகளோடு சந்தோஷமாகவே சிறைத்துறை வைத்திருக்கிறது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட முடியும். ஆனால் இவர்கள் சிறைக்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு குடும்பத்தினர் மத்தியில் ஒரு செய்தி ரகசியமாக பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ்காரரான திருநாவுக்கரசின் அப்பா இந்த வழக்கிற்குப் பிறகு, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமான காங்கிரஸ் வி.ஐ.பி.யான மயூரமானவரிடமும் நெருங்கிப் பழகி வருகிறார். இவர்களிடம் ஒரு புதிய விஷயத்தை சொல்கிறாராம்.


"எனது மகன் திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டான். "என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதை நான் வெளியிட்டால் இன்றைய ஆளும்கட்சி தாங்காது' என பேசியிருந்தான். அந்த வீடியோ பேச்சைத் தொடர்ந்து அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவனை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவனிடமிருந்த வீடியோ பதிவுகளை பெறுவதில் போலீசார் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டனர். அவனிடமிருந்த எல்லா வீடியோ பதிவுகளையும் வாங்கி விட்டதாக போலீசார் நினைத்தனர். ஆனால் அவன் தலைமறைவாக இருந்த நேரத்தில் அந்த வீடியோக்களை ரகசியமாக பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தான்.

எங்களுடைய வீட்டை போலீசாரும் பொதுமக்களும் அடித்து உடைத்தனர். நாங்கள் அவமானப்பட்டோம். நஷ்டப்பட்டோம். நாங்கள் நடத்தி வந்த ஃபைனான்ஸ் வியாபாரம் படுத்துக் கொண்டது.


சிறையிலிருக்கும் என் மகன் சில வீடியோக்கள் இருக்கும் இடத்தை சொன்னான். நான் அதை எடுத்துக் கொண்டு போய் அதில் தொடர்புடைய வி.ஐ.பி.க்களிடம் சில காட்சிகள் மட்டும் போட்டுக் காட்டினேன். பயந்து போன அவர்கள் லட்சக்கணக்கில் பணம் தந்தார்கள். சோர்ந்து போன என் குடும்பம் நிமிர்ந்தது. அந்த வீடியோக்களில், டெல்லியில் மத்திய மந்திரிகளிடமும் சி.பி.ஐ.யை கையாளும் அமித்ஷாவிடமும் பேசும் அளவிற்கு ஒரு வி.ஐ.பி.யின் மகன் சிக்கியிருக்கிறான். அந்த வீடியோவை பற்றி நான் பேச ஆரம்பித்ததும் பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சென்னை தலைமைச் செயலகம் வரை அதிர்ந்தது.

அவர்களிடம் நான் ஒரேயொரு கோரிக்கை தான் வைத்தேன். எனது மகன் திருநாவுக்கரசு குற்றமற்றவன். சபரிராஜன்தான் முக்கிய குற்றவாளி. அவனை தண்டியுங்கள். எனது மகனை சாட்சியாக மாற்றுங்கள் என கோரிக்கை வைத்தேன். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்' என திருநாவுக்கரசின் அப்பா சொல்கிறார்'' என்கிறது பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி சி.பி.ஐ. வட்டாரத்தை கேட்டபோது, "இந்த வழக்கில் ஒரு பெண் மட்டும் புகார் கொடுத்ததாக நினைக்கிறார்கள். நக்கீரன் கண்டுபிடித்து பேட்டியெடுத்த மற்றொரு பெண் ணும் இருக்கிறார். "அண்ணா அடிக்காதீங்கண்ணா' என கதறி அழும் அந்தப் பெண்ணும் அவரது அம்மாவும் தெளிவாக திருநாவுக்கரசுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்'' என்கிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க. மகளிர் அணியை வைத்து பொள்ளாச்சி சம்பவம் பொய் என பிரச்சாரம் செய்யச் சொல்லி பொள்ளாச்சி ஜெயராமன் சொல்ல, அவரை அடிக்காத குறையாக நிராகரித்து விட்டார்கள் மகளிரணியினர்.


 

 

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.